■ செம்மொழி பாட்டில் எனக்கு ரொம்ப பிடித்தது ஒரு காட்சி.. புதிதாய் வேலைக்கு சேரும் பெண் முதன் முதலில் சீட்டில் உட்கார்ந்த உடன் வந்த வேலையை பார்க்காமல் கூகுள் தமிழ் ஓப்பன் செய்கிறாள். இந்த காட்சியை பார்த்த உடனே ஒரு பதிவர்ங்கிற முறையில எனக்குள்ள பட்டாம்பூச்சி நிறைய பறந்துச்சு. அலுவலகத்திற்கு வந்த உடன் பதிவுகளை போடவும், பின்னூட்டம் பார்க்கவும் அரசாங்கமே சப்போர்ட் பண்றாங்கன்னு நெனைச்சேன். வலைப்பதிவர்களுக்கு அலுவலகங்கள் பதிவுகள் போட அனுமதி அளிக்க வேண்டும்னு மாநாட்டுல அதிகாரபூர்வமாக அறிவிப்பாங்கன்னு பார்த்தேன்... ஹும் என்ன பண்றது... விண்டோவை மினிமைஸ் பண்ணி வச்சு ஒளிச்சு ஒளிச்சுதான் பதிவுகளை பார்க்கனும்னு நம்ம தலையில எழுதியிருக்கு... ரைட்டு விடுங்க...
________________நூல் வெளியீட்டு விழா
■ பதிவர் டி.வி.ராதாகிருஷ்ணன் அவர்களின் கலைஞர் எனும் கலைஞன் நூல் வெளியீட்டு விழாவிற்கு போயிருந்தேன். அண்ணன் அப்துல்லா அழகாக நிறுத்தி நிதானமாக பேசுகிறார். பதிவர் டி.வி.ராதாகிருஷ்ணன் ஏற்புரையை நன்றியுரையாக்கி நகைச்சுவையுடன் பேசினார். பதிவர் அகநாழிகை பொன் வாசுதேவன், அஜயன்பாலா, கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பரமணியன் ஆகியோரும் பேசினார்கள்.பின்னர் வழக்கம்போல் கீழே டீக்கடையில் நடந்த பதிவர் சந்திப்பில் ராவணன் படம் பிரதான தலைப்பானது. எனக்கு படம் பிடித்திருக்கிறது என யாராவது லைட்டாய் முணுமுணுத்தால் கூட டென்ஷன் ஆகி விடும் நிலையில் பல பதிவர்கள் படத்தை பார்த்து நொந்த கதையை ஆக்ரோஷமாக கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் இந்த டீ கடை டிஸ்கஷன் ரொம்ப நன்றாகவே இருக்கிறது.
________________சென்சஸ்
■ வீட்டிற்கு சென்சஸ் எடுக்க வந்தார்கள். முக்கியமாக, கம்ப்யூட்டர் இருக்கிறதா, இணைய இணைப்பு இருக்கிறதா என கேட்டுக்கொள்கிறார்கள். ஒருவேளை நாட்டில் எத்தனை பதிவர்கள் இருக்கிறார்கள் என இன்டைரக்டாய் கணக்கெடுக்கிறார்களா தெரியவில்லை. ஆனால், எந்த கட்சி கூகுள் ஆட் சென்ஸ் தமிழை சப்போர்ட் செய்ய வசதி செய்து தருமோ அதற்குதான் ஓட்டு போட வேண்டும் என இருக்கிறேன்.
________________சினிமா சினிமா
■ மதராசப்பட்டிணத்தைவிட நான் ரொம்ப எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஆனந்தபுரத்து வீடு. நாகாவின் விடாது கறுப்பு போன்ற மர்ம தேச சீரிஸ் தொடர்களுக்கு நான் தீவிர ரசிகன். கடைசியாய் நாகாவின் சிதம்பர ரகசியம் சீரியல் பார்த்தது. இப்போது அவர் வெள்ளித் திரையில்.. கண்டிப்பாக ஏமாற்ற மாட்டார் என நினைக்கிறேன். பதிவுகளில் விமர்சனம் வரும் முன்னர் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று இருக்கிறேன்.
■ சின்ன வயசில் தீபாவளி வருகிறது எனும் செய்தியை போல குதூகலமாய் இருக்கிறது எந்திரன் வருகிறது எனும் செய்தி. முதல் ஷோவிற்கு கட்டுகட்டாய் பேப்பர்களை கிழித்துக் கொண்டு முன்சீட்டில் இருந்தவர்கள் தட்டிவிட தட்டிவிட மீண்டும் மீண்டும் அவர்கள் தலையில் விழுமாறு பேப்பர் குப்பைகளை போட்டு தியேட்டரையே சும்மா அதிர வைத்து சிவாஜி படம் பார்த்தது நினைவிற்கு வருகிறது.
________________புத்தகம்
■ தமிழக அரசு புண்ணியத்தில் இப்போதெல்லாம் நிறைய புத்தகங்கள் படிக்க முடிகிறது. இது என்ன புது கதைன்னு ஆச்சரியப்படாதீங்க. ஒரு மாசமா மாலை நேரத்துல எங்க ஏரியா முழுக்க லோ வால்டேஜ் ஆகிடுது. கம்ப்யூட்டர் ஆன் பண்ண முடியலை. வேற வழியில்லாம ரொம்ப நாளா விட்டுப்போன படிக்கிற பழக்கத்தை ரீ ஸ்டார்ட் பண்ணிட்டேன்.
■ ரஜினி - 3000
அஜித் / விஜய் - 2000
கலைஞர் / ஜெ / கேப்டன் - 1000
.
.
.
.
புத்தக விமர்சனம் - 150
இதெல்லாம் நான் பதிவுகளுக்கு வைத்த தலைப்பில் இருந்த சொற்களும் அதற்கு விழுந்த அன்றைய ஹிட்ஸ்களும்...
ஓரு மனுசனை இந்த உலகம் திருந்தவே விடாதா...?























