Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, February 13, 2015

அனேகன் - ஐந்து நட்சத்திரங்கள்



"இவனை தூக்கிட்டு வர்றதுக்கு மூணு பேரா?" என தனுஷ்ஷை குறித்து ஒரு வசனம் வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்.  உண்மைதான். அவர் உருவம் அப்படி. ஆனால் தனுஷின் ஆற்றலை தனியாக டவுன்லோட் செய்து வைத்தால் முன்னூறு பேர் வந்தாலும் தூக்க முடியாது போல் இருக்கிறது. மூன்று வெவ்வேறு கால நிலை காதலனாக தனுஷ்.  மூனா ரூனா, அஷ்வின், காளி என கிரியேட்டிவ்வாக எதையாவது செய்யத் துடிக்கும் கலைஞனுக்கு செம ட்ரீட்டான ப்ராஜக்ட். தனுஷ் எப்படி செய்திருக்கிறார் என ஆராய்ந்து எழுத முடியாது. பம்மல் வ்வ்வே சம்பந்தம் சொல்வது போல அப்படியே அனுபவிக்க வேண்டியதுதான்.

கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் என குறிப்பிடத்தகுந்த இயக்குனர்கள் வரிசையில் கே.வி.ஆனந்த்.  பொதுவாகவே காதலை கசக்கி பிழியும் படங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. அட.. புதுசா ஏதாச்சும் சொல்லுங்கய்யா என்பது போல் இருக்கும். "இதுவரை முழுமையான காதல் படங்கள் நான் செய்ததில்லை..  அனேகனில் பண்ணியிருக்கேன்"  என கே.வி.ஆனந்த் ஒரு பேட்டியில் சொன்னபோது,  'என்னடா.. மாற்றான் தந்த சறுக்கலில் இவரும் இப்படி ஆயிட்டாரே..  படம் காதல் கத்திரிக்காய் என ரொம்ப சிம்பிளா இருக்கும் போலிருக்கு' என நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது பேட்டியில் 'க.மொ.வி.' இறக்க விரும்பாமல் தன்னடக்கமாய் இருந்துவிட்டு படத்தில் அதை செய்திருக்கிறார்.

கதையே கதாநாயகியை சுற்றி நகர்வதால் அழகு பதுமையாய் மட்டும் அல்லாமல் நடிக்கவும் செய்யும் பெண் வேண்டும். எங்க பாஸ் கண்டுபிடிச்சீங்க உதட்டை குவித்து காற்றில் முத்தமிட்டு  அசத்தும் அமைராவை?  மூன்று கால நிலைகளிலும் செம க்யூட் அன்ட் ஸ்வீட். தொடர்ந்து ஐ, இசை இரண்டு படங்களிலும் வெளி மாநில/நாட்டு கதாநாயகிகளின் மொழிக்கு பொருந்தும் அல்லது பொருந்த வைக்கப் பட்டிருக்கும் உதட்டசைவு தமிழ் சினிமாவிற்கு ஆரோக்யம்.

கனக்ஷன்ஸ் ஜெகன் ஒரு படத்தில் இருந்தால் அந்தப்  படத்தை சென்சாருக்கு அனுப்பாமலே 'ஏ' சர்டிபிகேட் தந்துவிடலாம் என்கிற பொதுவிதி இந்த படத்தில் தளர்த்தப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு வசனங்களை தவிர அவரது வால்யூமை குறைத்தே வைத்திருக்கிறார்கள்.

முதல் பாதி கார்த்திக் சூப்பர். இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம்  சூப்பராக இருந்திருக்கலாம். 'இசை' போன்ற ஒரு ஸ்கிரிப்டில் சத்யராஜ் துவம்சம் செய்தது போல் அனேகனில் வாய்ப்பு இருந்தும் கார்த்திக் கொஞ்சம் குறைவாகவே செய்திருக்கிறார். இல்லை அவர் டிசைனே அப்படித்தானா தெரியவில்லை.

ஓரு பாடலின் துவக்கம் முதல் முடிவு வரை தியேட்டர் இடைவிடாமல் அதிர்ந்து கொண்டே இருந்தது கடைசியாய் எப்போதென ஞாபகம் இல்லை. டாங்கா மாரியில் ஸ்பீக்கரை விட ரசிகர் குரல் தெறிக்கிறது. வெறும் குத்தாட்ட பாடலாக இல்லாமல் அதற்குள்ளும் கதையை வைத்ததற்கு ஸ்பெஷல் சபாஷ். ஆனால் அதற்கடுத்தாய் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  'ரோஜா கடலே' பாடலை அப்படி கிராபிக்ஸ் பேக்கிரவுண்ட் லொக்கேஷன்களை வைத்து சுமாராய் காண்பித்தற்கு அந்த சபாஷை திரும்ப வாங்கி கொள்ள வேண்டும். ஹாரிஸ் இவ்வளவு அழகாக பாடல் போட்டும் இப்படி பண்றீங்களேம்மா...?

முதல் அரைமணி நேரம் அறுபதுகளில் பர்மா எபிசோட், பின்னர் இடைவேளை வரை இன்றைய காலகட்டம். இடைவேளை முடிந்ததும் எண்பதுகளின் சென்னை, பின்னர் இன்றைய நிகழ்வு என திறமையாக கட்டமைக்கப்பட்ட இந்த சயின்ஸ், பேன்டஸி, லவ் சப்ஜெக்ட், தமிழ் எழுத்துலகில் மின்னி பின் திரையிலும் மின்னத் தெரிந்த வெகு சொற்பமானவர்கள் பட்டியலில் சுபாவின் பெயரும் எப்படி இடம் பெற்றது என்பதற்கு தரமான சான்று.

தமிழுக்கு கொஞ்சம் புதிரான புதிதான கதை, அடுத்தடுத்து பரபரப்பாய் நகரும் காட்சிகள், அருமையான ஆழமான காதல் எபிசோட்ஸ், ஆங்காங்கே டிவிஸ்ட்ஸ் அன்ட் டர்ன்ஸ், நடிகர்களின் சிறப்பான பெர்பார்மன்ஸ், துள்ளலான இசை இவை எல்லாவற்றையும் சிறப்பாக அசெம்பிள் செய்யத் தெரிந்த கெட்டிக்கார இயக்குனர் என ஒரு சிறப்பான கமர்ஷியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது அனேகன்.

2 மணி 40  நிமிடங்களும் கொடுத்த ரூ.120க்கு ரூ.1000 கிடைத்தது போல் ஒரு திருப்தி. இது போன்ற கம்ப்ளீட் என்டர்டெயின்மென்ட்டிற்கு இண்டு இடுக்கு குறைகளை வைத்துக் கொண்டு மூணரை, நாலு ஸ்டார்கள் தருவது பாவம். நான் தருகிறேன் கே.வி.ஆனந்த்... இந்தாங்க பிடிங்க 5 ஸ்டார்ஸ்  ★★★★★



வலைமனை பிற பதிவுகள் : சினிமா | நகைச்சுவை | புத்தகம் | ஃபீலிங்ஸ்
பேஸ்புக் பக்கத்தில் இணைய : https://www.facebook.com/valaimanai.in

Tags: Anegan, Anegan Review, KV Anand, Dhanush, Amyra, Harris Jayaraj, AGS Productions

Saturday, February 7, 2015

என்னை அறிந்தால் | ஹாட்ரிக் என்னாச்சு?



அஜித்திற்கு ஹாட்ரிக் வெற்றி நிகழுமா என்பதும் கவுதமிற்கு ஹாட்ரிக் தோல்வி தவிர்க்கப்படுமா என்பதும் 'என்னை அறிந்தால்' படத்தின் ரிசல்ட்டை பொறுத்து இருந்தது.

நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் என கடைசி இரண்டு படத்தில் சறுக்கல். மேலும் 'கவுதம் சரியா ஸ்கிரிப்ட் ரெடி பண்ணலை' என்கிற சூர்யாவின் ஸ்கூல் மிஸ் கம்ப்ளெயின்ட். ஆகவே எதுவும் ரிஸ்க் எடுத்து சொதப்பி விடக்கூடாது. என்ன பண்ணலாம்..? சறுக்கிய ந.நவின் ஓவர்டோஸ் காட்சிகளோ, நீ.எ.பொ படத்தின் டோஸே இல்லாத காதல் காட்சிகளையோ அறவே தவிர்த்து விட வேண்டும். பிறகு?

பெயரைத் தந்த வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, விண்ணைத்தான்டி வருவாயா, வாரணம் ஆயிரம் படங்களின் ரசிக்கப்பட்ட போர்ஷன்களை எடுத்துக் கொண்டு அதில் அஜித், திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர் எல்லாரையும் பொருத்தி  சோளிகளை குலுக்கி போடுவது போல போட வேண்டியதுதான்.

ஆனாலும் அப்படி போடப்பட்ட இந்த 'என்னை அறிந்தால்' குலுக்கல் அழகாகவே விழுந்திருப்பது ஆச்சரியம். வெட்டுப்படாமல் தப்பிக்கவோ பழம் பழுக்கவோ ஆட்டத்தில் தேவைப்படும் நேரத்தில் விழுந்த தாயம் போல, கவுதமிற்கு மீண்டும் நற்பெயரை இந்த படம் நிச்சயம் வாங்கி தரும். (அதுக்காக அடுத்த படத்துக்கும் சோளியை கையில எடுத்து எங்க சோலியை முடிச்சுப்புடாதீங்கப்பு.)

அனுஷ்காவில் கதையை ஆரம்பித்து, அப்படியே அஜித்தை இணைத்து, அங்கே அருண் விஜய்யை கொண்டு வந்து பர பரவென மிக சுவாரஸ்யமாய் துவங்குகிறது படம். அஜித்தின் அந்த மெல்லிசான கோடு பிளாஷ்பேக்கை சொல்லி அவர் அந்தப் பக்கம் போய்விட்டார் என அருண் விஜய் உடனான கேங்ஸ்டர்  எபிசோடை தந்து சடாரென இந்தப் பக்கத்திற்கு ஷிப்ட் அடிப்பதில் இன்னும் கலக்குகிறது ஸ்கிரிப்ட்.

அதன் பின்பு திரிஷா, அவருடனான காதல், இழப்பு, பழிவாங்கல் என இடைவேளை வரை படம் போவதே தெரியவில்லை. அதன் பின்பு பாசம், பயணம், ஆக்ஷன் என சென்று மீண்டும் அனுஷ்காவில் வந்து முன்பாதியில் விட்ட இடத்தில் அழகாக இணைகிறது. இதன் பின்புதான் பெரியதாக ஒரு டிவிஸ்ட்டோ சஸ்பென்ஸோ இல்லை. ஆனாலும் சேசிங், ஷார்ப் வசன மோதல் என போரடிக்காமல் சென்று சொதப்பாமல் முடிவது ஆறுதல்.

சும்மா நின்றாலே ரசிர்களுக்கு ஹேன்ட்ஸமாக அருள் பாலிப்பவர் அஜித். இதில் கவுதமின் ஆராதனையில் எப்படி இருப்பார்? கேங்ஸ்டர், ஐ.பி.எஸ், சால்ட் அண்ட் பெப்பர் என மூன்று தோற்றங்களிலும் அவ்வளவு லவ்லியாக இருக்கிறார். ஆசிஷ் வித்யார்தியிடம் தன் வீட்டில் கோபப்படும் இடம் ஆகட்டும், மேத்யூ கூட்டத்தை ஒழிக்க துப்பாக்கி எடுக்கும் இடம் ஆகட்டும், லுங்கியை கட்டிக்கொண்டு நாக்கை மடித்து ரசிகர்களுக்காக செம குத்து குத்தும் இடம் ஆகட்டும், பள்ளி வாகனத்தை மறித்து பெண்ணை கூட்டிக் கொண்டு பயணிப்பது ஆகட்டும்..  வழக்கம் போல தொண்டை கிழிய 'தல.. தல' என கத்தி மாளாமல் அமைதியாய் அதே உற்சாகத்துடன் அஜித்தை ரசிக்கும் விதத்தில் ரசிகர்களுக்கு வித்யாசமான  ட்ரீட்.

திரிஷாவிடம் புரபோஸ் செய்யும் அந்த ரொமான்ஸ் காட்சியில் மட்டும் 'எனக்கு இதுல எல்லாம் இன்டிரஸ்ட் இல்லைப்பா' என்பது போலவே நடித்திருக்கிறார். இது வலிந்து செய்யப்பட்டதாக இருக்கலாம். (இந்த அம்சம் அன்புச்செல்வனில் இருந்தும்  ராகவனில் இருந்தும் சத்யதேவை வேறுபடுத்தி காட்டும் முயற்சியாகவும் இருக்கலாம்.)  *இப்படியும் பாஸிட்டிவ்வா சொல்லிக்கலாம்.

"யாராச்சும் பத்த வைங்கடா.. நான் எப்படி வெடிக்கிறேன் பாருங்க.."  என்பது போல் இருக்கும் சரவெடியாய் அருண்விஜய். பாண்டியா, அமுதன்-இளமாறன் போன்றவர்களின் குரூரத்தினை வெளிப்படுத்தாத ஆனால் அதே நேரம் நட்பை நம்பி ஏமாந்துவிட்ட வெறியுடன் தரமான வில்லனாக வெடித்திருக்கிறார். ஒரு நடிகர் கவுதமின் வில்லன் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் என்பதை விட வேறென்ன பாராட்டு பெற்று விட முடியும்? பட்டாசு பாஸ்!

திரிஷாவா இது...? மை காட். பிளெயின் காட்டன் சாரியில் ஜெஸ்ஸியாக கவுதம் கைவண்ணத்தில் மின்னியவர்.. அப்படியே நேரெதிராய் சர்வ அலங்காரத்துடன் கண்களில் மையுடன் நடனத் தாரகையாக  ஜொலிக்கிறார். திரிஷாவுடன் ஒப்பிடுகையில் வெயிட்டான ரோல் அனுஷ்காவிற்கு இல்லை. கொடுத்த ரோலை செய்திருக்கிறார். "என் ரோலை வேணும்னா அவங்க பண்ணட்டும்" என கவுதமிடம் அனுஷ்கா சொன்னதாக செய்திகள் வந்ததே. அதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது. (வெவரம் மேடம் நீங்க!)

மியூசிக்கல் ப்ளே பார்த்திருக்கிறீர்களா.. பாடிக்கொண்டே முழுக் கதையையும் நடித்து காட்டிவிடுவார்கள். ஏறக்குறைய என்னை அறிந்தால் முதல் பாதி ஒரு லவ்லி மியூசிக்கல் ப்ளே. ஹாரிஸ் விளையாடி இருக்கிறார். சூப்பர் பாஸ்! தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை போல கொஞ்ச நாளாவது ஹாரிஸை யாரும் கலாய்க்க மாட்டார்கள் என்கிற அளவிற்கு மனிதர் உழைத்திருக்கிறார். ('நான் முன்ன மாரி இல்ல இப்போ.. ரொம்போ மாறிட்டேன்'னு அனேகன்ல ஒரு லைன் வருதே.. செம டைமிங் பஞ்ச் பாஸ் அது..! ஆஹா நானே கலாய்ச்சிட்டேனே.. மன்னிச்சூ மன்னச்சூ..)

‘பில்லா 2வில் விட்டது. ஆரம்பம், வீரம் என அடுத்தடுத்து தீபாவளிக்கும் பொங்கலுக்கும் சொல்லி அடித்துவிட்டு, மூன்றாவதாக அஜித் 'என்னை அறிந்தால்' படத்தை தந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றிருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயாவில் அடித்தது. அடுத்ததாக நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் இரண்டிலும் சறுக்கிவிட்டு  இப்போது கவுதம் 'என்னை அறிந்தால்' படத்தை சிறப்பாக தந்து ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்திருக்கிறார்.

விவரிக்க முடியாத விஷுவல்ஸ், ஜில்லென்ற இசை, பற்றி எரியும்  மோதல், பசுமையான காதல் என 'என்னை அறிந்தால்' தமிழ் சினிமாவின் உன்னதம். இங்கிலீஷ்ல சொன்னா எக்ஸலென்ட்!

ஏன் தமிழ், இங்கிலீஷ்ல சொல்றோம்னா... கவுதம் படம்னா எல்லாம் அப்படித்தான்!

Sunday, February 1, 2015

இசை


எஸ்.ஜே.சூர்யா  மூளையின் ரசிகன் நான். வாலி, குஷியில் அவரது பிரில்லியன்ஸ் வெகு சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நியூவில் ஒரு வித்யாசமான பேன்டஸி சப்ஜெக்டையும், அன்பே ஆருயிரேவில் நினைவலைகளை கதை சொன்ன தைரியமும் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது. அதோடு இப்போது இசையின் டிரைலரும் சேர்ந்துக்கொண்டு ஈர்ப்பை அதிகரிக்க, முதல் காட்சிக்கு சென்றிருந்தேன்.

வாலி, குஷியில் கடைபிடித்த இலைமறை தரத்தை ஏனோ நியூவிலும், அ.ஆவிலும் இழந்துவிட்டிருந்தார். பேமிலி ஆடியன்ஸ் முகம் சுளிக்கும் வண்ணம் காட்சிகளையும் வசனங்களையும் அதிகரித்திருந்தார். இசையில் அதேபோல் காட்சிகளும் வசனங்களும் இருக்கிறது. ஆனால் முகம் சுளிக்கும் வண்ணம் இல்லை.

வழக்கமான தனது பாணியில் கதையின் ஒன் லைனை சொல்லிவிட்டே இசையையும் ஆரம்பிக்கிறார் எஸ்.ஜே.! இம்முறை வாலி அளவிற்கு இல்லாவிட்டாலும்  அதைப் போன்ற ஒரு நல்ல ரொமான்டிக் திரில்லரை தந்திருக்கிறார்.

முதல் பாதியில் கதையை கொஞ்சமாக ஆரம்பித்துவிட்டு, நிறைய காதல், கொஞ்சம் காமெடி என அலுக்காமல் படம் நகர்கிறது. இரண்டாம் பாதியில் தொடர்ந்து சீரியஸான சஸ்பென்ஸ் காட்சிகள் அதிகரிக்கிறது. 'அட.. தெரிஞ்சதுதான' என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே எதிர்பாராத டிவிஸ்ட்டை வைத்து நிமிர்ந்து உட்கார செய்கிறார். 'முடிவு என்னாக போகிறோதோ' என நாம் நினைக்கும் போதே பெரிய ரிஸ்க் எடுத்து கதையின் அஸ்திவாரத்தையே மாற்றி ஒரு கிளைமேக்ஸை தந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

இரண்டாம் பாதியின் முக்கிய டிவிஸ்ட் வந்த பின்னர்தான் முதல் பாதியில் இடிக்கும் விஷயங்களை ஞாபகப்படுத்தி 'அட ஆமால்ல.. சரியாத்தான் இருக்கு' என பொருத்திப் பார்க்க முடிகிறது. இன்னும் சில இடிக்கும் லாஜிக்குகளை கிளைமேக்ஸில் ஒரு வசனத்தில் சரி செய்து கொள்கிறார்.
ஆனால் இவ்வளவு தரமான திரில்லரை கொடுத்துவிட்டு அதற்கு ஒரு தீர்வு தந்து முடித்திருந்தால் முழுதிருப்தியோடு இருந்திருக்கும். இருப்பினும் வித்யாசமான வகையாக எடுத்துக் கொண்டால் இந்த முடிவையும் என்னால் ரசிக்கவே முடிகிறது.

எஸ்.ஜே.சூர்யா நடிப்பிலும் முன்னேறியிருக்கிறார். ஒரே மாதிரியான மாடுலேஷேனில் ஒரே மாதிரியான வசனங்களை நியூவிலும் அ.ஆவிலும் அதிகம் வெளிப்படுத்தியிருந்தவர், இசையில் வெவ்வெறு உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்த துவங்கியிருக்கிறார்.

சத்யராஜுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரியான ரோல். இவர் இல்லையென்றால் படமே இல்லை. மனிதர் வாழ்ந்திருக்கிறார். அவருடன் மிகச்சரியான இணையாக கஞ்சா கருப்பு. இருவரது காட்சிகளும் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போக வெகுவாக உதவியிருக்கிறது.

குளிர்ச்சியான முகவாட்டுடன் சாவித்திரி. முதல் பாதியில் வெறும் கவர்ச்சி கதாநாயகியாக வந்தாலும் இரண்டாம் பாதியில் சொதப்பாத நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஒரு வடக்கத்திய நடிகை உதட்டசைவில் அக்கறை எடுத்து நடித்திருப்பதற்காகவே பாராட்டலாம்.

மருந்து கொடுக்கும் காட்சி, பாவ மன்னிப்பு காட்சி, பேக் தொலையும் காட்சி போன்ற சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இயக்குனராக அறிமுகமாகி, நடிகராக வெற்றி பெற்றவர்கள் பல பேர் உண்டு. அந்த வெற்றியுடன் நில்லாமல் அடுத்து இசையையும் கற்று அதையும் குறிப்பிடும்படியாக முதல் படத்திலேயே வெளிப்படுத்தி சாதித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு 'தன்னம்பிக்கை தளபதி' என்ற பட்டத்தை தாராளமாக தரலாம்.

Friday, January 16, 2015

ஷங்கரின்? ஐ!




முதலில் பாஸிடிவ் விஷயங்களை பார்த்துவிடுவோம். விக்ரம் உடலையும் உயிரையும் உருக்கி நடித்திருக்கிறார். பிரம்மாண்டமான செட்கள், அழகான லொக்கேஷன்கள், கண்ணில் ஒத்திக் கொள்ளும் ஒளிப்பதிவு, டிரென்டி பாடல்கள், வெளிநாட்டு பெண்ணாக இருந்தாலும் எமியின் பொருத்தமான வாயசைப்பு என  வழக்கமாக ஷங்கர் படத்தில் கைகூடி வரும் தரமான தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் இதிலும் இருக்கிறது. ஆனால் ஷங்கர்தான் இல்லை.

சின்ன சின்ன ரோலில் வருபவர்கள் கூட சங்கர் சிமென்ட் போல காலத்திற்கும் உறுதியாய் மனதில் நிற்கும் வகையில் இருக்கும் ஷங்கரின் கதாபாத்திர தேர்வு திறன் சொதப்புவது இதுவே முதல்முறை. சுரேஷ் கோபி, கதாநாயகின் அம்மா, ஆட் ஏஜென்சி முதலாளி போன்றவர்களால் ஷங்கர் படங்களின் உயர் தரம் இதில் மிஸ்ஸிங்.

 டிவிஸ்ட்களை(!) கொண்ட முக்கிய கதாபாத்திரத்தின்  'அந்த கொழந்தையே நீங்கதான் சார்' போன்ற நடிப்பில் இரண்டு சீன்களிலேயே அவர்தான் வில்லன் என குழந்தை கூட கண்டுபிடிக்கும். குறும்பட இயக்குனர்கள் கூட இந்தா சாப்டு என டிவிஸ்ட்களுக்கே டிவிஸ்ட் வைக்கும் காலத்தில் இவ்வளவு அரதப் பழசான ஒரு டிவிஸ்ட் ஷங்கர் படத்திலா?

அவ்வளவு அழகான டாப் ரேட்டட் மாடல், ஒரு பிரேக் அப்பிற்கு பிறகு யாருமே அவளை திருமணம் செய்ய முன்வரவில்லையாம்.. உடனே அவரது அம்மா இந்த அங்கிளை திருமணம் செய்ய சொல்கிறாராம்.. ஷங்கர் சார், இரண்டாயிரத்து பதினைந்திலா இருக்கிறீர்கள்..?

ஒரு திருநங்கை கதாபாத்திரம் வந்த உடனேயே 'புளியமரம்' பாடலை கைகொட்டி ஷங்கர் படத்திலா பாடுகிறார்கள்? வழக்கமான முக்கோண காதல், ஏமாற்றம், பழிவாங்கல் வேண்டாம் என நீங்கள் மாறுதலாய் நினைத்து ஒரு பெண்ணிற்கு பதில் திருநங்கை பாத்திரத்தை வைத்திருக்கலாம். ஆனால் அவரது காதல், சீரியசாக காண்பிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா..? விக்ரம் அவரை உதறி விட்டு வந்ததும் அவர் படுத்துக்கொண்டே அழுகையில் தியேட்டரில் எல்லோரும் சிரிக்கிறார்கள். கடைசி வரை அவர் காதலிக்கும் போர்ஷன்கள் காமெடிக்காக சேர்க்கப்பட்டிருக்கிறதா.. இல்லை சீரியசாக சொல்கிறீர்களா என்கிற சந்தேகம் இருந்து கொண்டே இருந்ததால், அவர் பழிவாங்க கிளம்புவது சத்தியமாக மனதில் ஒட்டவில்லை.

அடுத்த பழிவாங்கி ராம்குமார். கம்பீரமான அவரது தோற்றம், உடைகள் எல்லாமே ஓகே. ஆனால் குரல், டோன் சரியாக இருக்கிறதா..? முக்கிய இடங்களில் அவர் இழுத்து இழுத்து பேசுவது பெரும் பின்னடைவு.

இன்னுமொரு முக்கிய வில்லன், அந்த விளம்பர மாடல் ஹீரோ. அவர் இன்னும் சுத்தம். அவரும் கதாநாயகியின் அம்மாவாக வருபவரும் பெண் பார்க்க வருபவரும் இஷ்டம் போல இந்தியில் பேச, கொஞ்சம் கூட சின்க் ஆக்க கஷ்டப்படாமல் தமிழில் டப்பிங் பேசி இருக்கிறீர்கள். ஒருவேளை பாலிவுட்டுக்கு பயன்படட்டும் என விட்டீர்களோ என்னவோ.. ஷங்கர் படம் பார்க்கிறோமா அல்லது பாலிமர் சேனலில் டப்பிங் சீரியல் பார்க்கிறோமா என்பது போல் இருந்தது.

ஷங்கருடன் ஏ.ஆர் என்றால் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும்..? ஜெ.மே துவங்கி எந்திரன் வரை ஒவ்வொரு படத்தின் இசையும் சீன் பை சீன் மனப்பாடமாய் மனதில் இருக்கிறது. ஆனால் 'ஐ'யில்.. ?

வேறு மாடல் வேண்டும் என்கிற நிலையில் லோக்கல் விளம்பரங்களில் நடிக்கும் நடிப்பே வராத விக்ரமை பிடித்துக் கொண்டு அவருக்காக காதலிப்பது போல நடிக்கும் அளவிற்கு செல்ல வேண்டிய கட்டாயம்தான் எமிக்கு என்ன..  அவரது லைனில் நடிக்க தெரிந்த வேறு ஆணழகர்களே இருக்க மாட்டார்களா?

உருவ அவலட்சணங்களை குரூரமாக கிண்டல் செய்து ஒரு காமெடி டிராக் ஷங்கர் படத்திலா? பிரம்மாண்டங்களின் ரசிகர் நீங்கள். அதற்காக இவற்றையும் பிரம்மாண்டமாக்கி அதையும் காமெடி செய்கிறேன் என புண்படுத்தி.. சாரி சார்.. இவ்வகையில் எந்திரன் உங்கள் கனவு என்றால், 'ஐ' கெட்ட கனவு!

விக்ரம் - படத்தின் பிளஸ் பாயின்ட். மைனஸ் பாயின்ட் என்னவெனில் அவர் மட்டுமே பிளஸ் பாயின்ட் என்பதுதான். முன்பு சச்சின் காலத்தில், 'நீங்க விளையாடி ஜெயிச்சா ஓ.கே. எங்களையெல்லாம் கூப்பிடாதீங்க' என்பது போல் அவருக்கு பிறகு வரும் அனைவரும் வரிசையாக அவுட் ஆகி செல்வார்கள்.  அது போல, விக்ரம் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு கதற கதற நடித்திருக்கிறார். என்ன பயன்.. சச்சின் செஞ்சரி... ஆனால் இந்தியா தோற்றது  கதைதான்!

ஒரு பாடலில் வெறும் நுரையுடன் வரும் ஏமி, திருநங்கை பாத்திர சித்தரிப்பு, யூடியூப் போன்ற வசனங்கள், உருக்குலைந்தவர்களை கிண்டல் செய்வது என இந்த படம் ஒரு புதிய ஜானரில் வந்திருக்கிறது.

ஆக இதை முன்னோடியாக வைத்து, இனி இது போல படம் எதுவும் வந்தால்  U சான்றிதழுக்கு மேலே U/A  அதுக்கும் மேலே A என இருந்தது போக, இனி அதுக்கும் மேலே 'I' சான்றிதழ் வழங்கலாம்.


இணைப்பு : ஷங்கரை வியக்கவும் ரசிக்கவும் தவறியதில்லை!
http://www.valaimanai.in/2012/01/blog-post_13.html
http://www.valaimanai.in/2010/10/blog-post_08.html

Saturday, May 24, 2014

கோச்சடையான் | வலைமனை

கோச்சடையான் வந்தே விட்டது. முதல் நாளான நேற்றே இரண்டு முறை பார்த்துவிட்டேன். காலையில் பி.வி.ஆரில் முதல்காட்சியும், இரவு எஸ் 2 விலும். பி.வி.ஆரில் இருந்த அளவு ஏனோ எஸ்2 வில் காட்சி பளிச்சென்று இல்லை. எதற்கும் இன்னொருமுறை சத்யமில் பார்த்து விட வேண்டும்.



தீபிகா பொம்மை எப்பொழுதும் தூங்கி எழுந்த மாதிரியே இருக்கிறது. சின்ன கவுண்டர் மனோரமா போல சின்ன ரஜினி பொம்மை சிரித்த மாதிரியே இருக்கிறது. தேங்காய் சீனிவாசன் முகஜாடையில் பெரிய ரஜினி பொம்மை இருக்கிறது. கேரக்டர்ஸ் ஓடுவது, நிற்பது, நடப்பது எதுவும் சரியில்லை.  டான்ஸ் ஆடுவது ரொம்பவும் சரியில்லை. இப்படியும் கோச்சடையானை பற்றி சொல்லலாம்.

நல்ல கதை. விறுவிறுப்பாக அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே போகும் காட்சிகள். அரண்மனை, கோட்டை, காடு, மலை, தோட்டம், போர்க்களம் என எல்லா பின்னணிகளிலும் சரி.. உடைகள், உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் சரி.. துல்லியமான, அழகிய வேலைப்பாடுகள். ஒவ்வொரு பிக்சலிலும் பார்த்து பார்த்து டிஜிட்டலில் செதுக்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் காட்சியமைப்புகள், வசனம், இசை என பல பெரிய பிளஸ்களால் மேலே உள்ள மைனஸ்கள் மிகச் சிறியதாகி போகின்றன. தமிழில் புதிய அனுபவம். இப்படியும் சொல்லலாம். நான் இப்படி சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன். 
...
இயக்குனர் சௌந்தர்யா தெரிந்தோ தெரியாமலோ செய்த நல்ல விஷயம் டிரைலரிலும் டீசர்களிலும் 'பொம்மை படம்' என பெயர் பெற வைக்கும் மோசமான காட்சிகளை சேர்த்தது. (அந்த டால்பினில் ரஜினி எகிறும் காட்சி எல்லாம் படு சுட்டி டி.வித்தனம்). ஆகவே மோசமான தாக்குதலுக்குள்ளாக தயார் நிலையில் சென்றால் ஆச்சரியமாக அடி ஒன்றும் அவ்வளவு பலமாக விழவில்லை. உண்மையில் மிகத் தரமான பல கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இருக்கிறது. அவற்றை மட்டும் டிரைலரில் காட்டி திரையரங்கத்திற்கு வரவழைத்திருந்தார்கள் எனில் படத்தின் ரிசல்ட் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவே தேவையில்லை.

கேரக்டர்களின் முக அமைப்புகள், நிற்பது, நடப்பது அதிக டான்ஸ் மூவ்மென்ட்கள் அனைத்திலும் 'ஏதோ வந்த வரை' செய்திருக்கிறார்கள். ஆனால் ராணா படையை மீட்டு வரும் இடத்திலிருந்து கதைக்குள் இழுக்கப்பட்டு விடுவதால் பொம்மை பிரச்சனையை மனது விட்டுவிடுகிறது.

கேரக்டர்களின் தனிப்பட்ட அசைவுகளும், பாவனைகளும்தான் சரியில்லையே தவிர, மொத்தமாக ஒவ்வொரு காட்சியிலும் கிராபிக்ஸ் பிரமாதமாகவே இருக்கிறது. 
டைட்டில் காட்சிகளிலும், சூப்பர் ஸ்டார் எழுத்துக்களிலும் 3டி யை அள்ளித் தெளித்து 'இந்தா சாப்டுக்கோ' என வந்ததும் குஷிப்படுத்துகிறார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதி போல அதற்குப் பிறகு மெயின் படத்தில் கண்களுக்கு முன்னால் வரும் 3டி எலிமென்ட்ஸ் எதுவும் இல்லாதது பெருத்த ஏமாற்றம்.  ஒவ்வொரு லேயர்களுக்கும் இடையே தெரியும் 3டி ஆழமும் பெரிதாக இல்லை. சிவாஜி 3டி யில் கூட படம் முழுவதும் 3டி எலிமென்ட்ஸ், மிக அருமையாக இருந்தது.

இடைவேளை விட்டதும் பாப்கார்ன் வாங்க செல்லாமல், இடைவேளை முடிந்ததும் தீபிகா சரக்கடித்துவிட்டு ஆடுவது போல் ஒரு பாடல் வரும் பாருங்கள்.. அப்பொழுது சென்றீர்களானால் கூட்டத்தில் சிக்காமல் பாப்பகார்னும் வாங்கலாம். உங்களுக்கும் சேதாரம் இருக்காது.  இரண்டு முறை பார்த்த போதும் இந்த பாடலை மட்டும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. 

உடல்நிலை சரியில்லாத மோஷன் கேப்சர் டெக்னாலஜிக்கு குளுக்கோஸ் ஏற்றுவது இரண்டு விஷயங்கள். ஒன்று ரஜினியின் குரல், இன்னொன்று ரஹ்மானின் இசை. வீரமிக்க, விவேகமிக்க தளபதியாக ராஜா காலத்து ரஜினி என்னும்போழுதெ அள்ளிக் கொள்கிறது. "நெம்மதியா ஸந்த்தோஷமா இருங்க" என்பது போன்ற அவரது வழக்கமான தனித்துவ உச்சரிப்புகளால் பொம்மையை மறக்க வைக்கிறார். 

அடுத்தது ரஹ்மான். இவரெல்லையென்றால் படமே இல்லை. "ராணா.. ராணா.." என ஒலிக்கும் அந்த ஒரு தீம் மியூசிக் போதும். எங்கு தொட்டால் எங்கு வெடிக்கும் என்பதில் வல்லவர் ஏ.ஆர். இது மாதிரியான வித்யாசமான வடிவத்திற்காக ரஹ்மானும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். சரியான ஒலி விருந்து.

நாகேஷ்! நல்ல ஐடியா. அவருக்கு குரல் கொடுத்தவருக்கு ஸ்பெஷல் பாராட்டு. நாகேஷை கொண்டு வந்ததும் சரி, அடுத்தடுத்து தேவைப்பட்டால் சீக்வெல்களை ரிலீஸ் செய்துகொள்ள வசதியாக படத்தை முடித்ததும் சரி.. மிக பிரமாதமான ஐடியா. 

நாகேஷை கொண்டு வந்தது போல், அடுத்தடுத்த பாகங்களில் (வந்தால்) எம்.ஜி.ஆரை கொண்டு வரலாம்! சிவாஜியை.. சுருளிராஜனை.. யோசித்து பாருங்கள்...  இந்த வசதியே படத்திற்கான  பலத்தையும் அதன் மீது எதிர்பார்ப்பையும் அதிகரித்து விடும். அடுத்தடுத்து வெர்ஷன்களில் படத்தின் தரமும் உயர்ந்திருக்கும். முக்கியமாக மோஷன் கேப்சர் டெக்னாலஜி (என்று நம்புவோமாக). 

டிரைலரில் பயமுறுத்தி தியேட்டரில் சிறப்பாக செய்திருக்கிறீர்கள் சௌந்தர்யா .. மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உடன் உழைத்த உங்கள் குழுவினருக்கும்!

சிலையை கண்டால் அங்கே கடவுள் இல்லை. கடவுளைக் கண்டால் அது சிலை இல்லை என்பது போல், உங்களுக்கு பொம்மைப் படமாக தெரிந்தால் அங்கு கோச்சடையான் இல்லை. கோச்சடையானாக பார்க்க முடிந்தால் அங்கு பொம்மைகள் இல்லை!

Thursday, October 31, 2013

ஆரம்பம் | வலைமனை



ஆரம்பம்!

காதல், டூயட் எனும் வழக்கமான ஃபார்முலாக்களை ஒரு மாஸ் ஹீரோ தவிர்த்து வருவது பொதுவான சினிமா ரசிகர்களுக்கு நல்ல ஆரம்பம்!

மங்காத்தாவிற்கு பிறகு தவுசன்ட் வாலாவாக வெடிப்பதால் அஜித் ரசிகர்களுக்கு 'தல' தீபாவளி ஆரம்பம்!

மங்காத்தா சாயலில் ரஃப் அண்ட் டஃப் ஆக முதல் பாதி முழுக்க அஜித் பின்னியெடுக்கிறார். இரண்டாம் பாதியில் கிளீன் ஷேவ் உடன் கிளீன் ஆபிசராக வரும்பொழுதும் தனது கரீஷ்மாவினால் கவர்ந்திழுக்கிறார்.

ஆர்யாவின் கதாபாத்திரம் படத்திற்கு நல்ல பலம். அஜித்திடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் முதல் பாதி முழுக்க மனிதர் ரசிக்க வைக்கிறார். நயன், டாப்ஸி இருவரும் மற்ற படங்களைப் போல் லூஸு கதாநாயகியாகவோ, வெறும் மானாட மயிலாட கன்டஸ்டன்டாகவோ பயன்படுத்தப்படாமல் படத்தின் கன்டன்ட்டிற்கு பயன்படுத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆறுதல்.ராணா, அதுல் குல்கர்னி, கிஷோர் என காஸ்டிங் கதைக்கேற்றவாறு வெகு நேர்த்தியாக இருக்கிறது.

ஸ்பாய்லர் :
கதையென்று பார்த்தால் அதேதான். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, உயிரை விடும் நண்பன், வெகுண்டெழுந்து பழி வாங்கும் ஹீரோ. ஆனால் சொல்லப்பட்டிருக்கும் விதம், மேக்கிங் எல்லாமே ரொம்பவும் புதுசு. 

நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம் எனும் வகைப்படம். எங்கும் போர் அடிக்கவில்லை, எங்கும் தொய்வில்லை. விருந்து சாப்பிட்ட திருப்தி.
ஆர்யா, நயன், கிஷோர், டாப்ஸி என அஜித்தின் நேரத்தை மற்ற பல பேர் எடுத்துக் கொள்வதால் விருந்து சாப்பிட்டாலும் 'தல'வாழை  மட்டும் இல்லாதது போன்ற சிறிய குறை.

பாடல்கள் கேட்பதற்கு சுமார்தான் என்றாலும் அதனை ஈடுகட்டுகிறது படமாக்கப்பட்ட விதம். ஓப்பனிங் சாங்கில் அஜித் முடிந்தவரை டான்ஸ் ஆடுகிறார். சில ஸ்டெப்களில் உடல் வலியை அவரது முகமொழி பிரதிபலித்தாலும் பொருட்படுத்தாமல் ஆடுகிறார்.

என் புயூஸ் போச்சு, மெல்ல வெடிக்குது ஆகிய இரண்டும் கவனத்தை கவர்கின்ற பாடல்கள். காதல் வயப்பட்டதும் ஆர்யாவுக்கு முளைக்கும் பறவைச் சிறகு, டாப்ஸிக்கு முடிவில் முளைக்கும் பட்டாம்பூச்சி சிறகு என லவ்லி கிரியேட்டிவ் ஐடியா. மொத்தப் பாடலின்  பின்னணிக் காட்சிகளும் அவ்வகையே. அடுத்ததாக மெல்ல வெடிக்குது பாடல் கண்களுக்கு நல்ல விருந்து. ஹோலி வண்ணங்களில் விளையாடி இருக்கிறார்கள்.

அஜித், விஷ்ணுவர்த்தன் என்னும் இரண்டு ஆளுமைகள் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. பாடல்களில் கோட்டை விட்ட யுவன், பின்னணி இசைக்கு முகம் கழுவி காபி சாப்பிட்டுவிட்டு மியூசிக் போட்டிருக்கிறார். சுபாவின் டச், அந்த ஷார்ப்னெஸ் மட்டும் படத்தில் மிஸ்ஸிங்.

மொத்தத்தில் இரண்டரை மணி நேர பக்கா ஆக்ஷன் ட்ரீட் இந்த ஆரம்பம் !

Friday, October 11, 2013

கிராவிட்டி (2013) - தொழில்நுட்பத்தின் சாறு




ஹீரோவின் விசேஷ உபகரணத்தின் லேசர் கதிர் பட்டு உடல்கிழிந்து பச்சை ரத்தம் பீறிட உயிர் விடும் ஏலியன்கள், பூமிக்கு மேலே சரியாக அமெரிக்க மாநகரின் மேல் நிறுத்தப்படும் வேற்றுகிரக பறக்கும் தட்டுகள்,  கூட்டம் கூட்டமாக செத்து மடியும் பூமிவாசிகள், ஏலியன்களை கொல்ல ஹீரோவினால் கடைசியில் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய யுக்தி...  இப்படி மலிந்துவிட்ட சயின்ஸ் பிக்ஷன் மசாலாக்களில் இருந்து தனித்து நின்று தெளிவான, சுவாரஸ்யமான தனி முத்தாக ஒளிவிடுகிறது 'கிராவிட்டி'.

ஸ்பாய்லர் :  ......................................................
முதன்முறையாக  தனது விண்வெளிப்பயணத்தை மேற்கொள்ளும் பயோ மெடிக்கல் பொறியாளர் ரயான் ஸ்டானும் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர் மேட் கவால்ஸ்கியும் ஹப்பிள் டெலஸ்கோப்பில் பராமரிப்பு பணியில் ஈடுபடும் வேளையில் எதிர்பாராமல் விண்வெளிக்குப்பைகளால் ஏற்படும் விபத்தில் சக வீரர் உயிர் விட விண் ஓடமும் பாதிக்கப்படுகிறது. பூமியுடனான தொடர்பும் துண்டித்துப்போகிறது. 

இதன் பின்னர் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஷ்டேஷனுக்கு சென்று தப்பிக்க அவர்கள் முயல்வதும், பின்னர் கவால்ஸ்கியுன் இறப்பினால் தனித்து விடப்படும் ரயான் பல்வேறு மன மற்றும் உடல் போராட்டங்களை சமாளித்து பூமிக்கு திரும்பி கிராவிட்டியை சுவைப்பதே படம்.
......................................................

நேற்று மாலை S2 பெரம்பூரில் 3D - டால்பி அட்மாஸ் வசதி செய்யப்பட்ட ஸ்கிரீனில் பார்த்தேன்.  90 நிமிடங்கள். நாம் விண்வெளியில் மிதக்கிறோம். சுழல்கிறோம். விண்வெளிக்குப்பைகளால் தாக்கப்படுகிறோம். பூமி நமக்கெதிரே சுழல்கிறது. அண்டம் நமக்கெதிரே விரிந்து கிடக்கிறது. பிரபஞ்சத்தின் படைப்பும், கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்பட்டதன் அடையாளமே தெரியாமல் துல்லியமான நிஜ காட்சிகளாய் படைக்கும் திறன் பெற்றுவிட்ட மனிதனின் ஆற்றலும் ஒன்றுசேர்ந்து பரவசப்படுத்துகிறது.

3டி தொழில்நுட்பம் படத்திற்கு பெரிய பலம்.  பூமியின் விளம்பில் பட்டு தெரிக்கும் ரம்மியான ஒளிக்கதிர்கள், பேனா,  புத்தகங்கள், நெருப்புக்குமிழி, கண்ணீர்த்துளி, பிரபஞ்ச வெளியில் மிதக்கும் வீரர்கள் என வெறும் திரைப்படம் என சொல்லிவிட முடியாதபடி ஒரு பிரமிப்பான அனுபவமாக உணர வைக்கிறது. இதனுடன் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பமும் கைகோர்த்துக்கொள்ள மொத்தத்தில் அருமையான விருந்து.

தாகம் எடுத்த வேளை நல்ல பழச்சாறின் சுவையில் மெய்மறப்பதை போன்று, தொழில்நுட்பத்தின் சுவைமிகுந்த சாறினை ருசிக்க நல்ல ஒளி ஒலி அமைப்புள்ள திரையரங்கில் பாருங்கள். மகிழுங்கள்.

Sunday, March 17, 2013

பரதேசி - வத்திக்குச்சி | வலைமனை


எஸ் 2 பெரம்பூர் திரையரங்கம் வரப்பிரசாதமாக இருக்கிறது. சிறந்த ஒலி ஒளி அமைப்புடனான  திரையிடல், நல்ல இருக்கைகள் என சத்யம் சினிமாஸின் தரம் அப்படியே இருக்கிறது. முக்கியமான விஷயம் இணையத்தில் 150ரூபாய்க்கு பதிவு செய்யும் அவசியமில்லாமல் சனி, ஞாயிறுகளில் கூட நேராக சென்று 120க்கு டிக்கெட் எடுக்க முடிகிறது. முதன்முதலாக இங்கு கடல் பார்த்தபொழுதே முடிவு செய்துவிட்டேன். இனி வந்தால் இரண்டு படங்களாக பார்த்துவிடுவது என்று. அப்படியான உயர்ந்த கொள்கையை நடைமுறைப்படுத்தி நேற்று வத்திக்குச்சியும் பரதேசியும் பார்க்க நேரம் வாய்த்தது.

இயக்கமோ, தயாரிப்போ, ஏ.ஆர்.முருகதாஸ் பிராண்ட் நேமிற்கு ஏற்பட்டிருக்கும் முதல் சறுக்கல் வத்திக்குச்சி. நல்ல பில்ட் அப் சஸ்பென்ஸ் கொடுத்து ஆரம்பித்து, அதற்கு மொக்கையாய் சிறுபிள்ளைத்தனமான காரணங்களை கூறி படத்தின் ஆணிவேரான ஸ்கிரிப்ட் அயர்ச்சி தருகிறது.

அஞ்சலிக்காக படம் பார்க்க போனால் அடுத்த  அதிர்ச்சியே அஞ்சலிதான். ஆல்மோஸ்ட் ஆன்ட்டி போல் தோற்றமளிக்கிறார். இப்படியே போனால்  அடுத்தடுத்த படங்களில் ஹன்சிகா போலாகிவிடுவது உறுதி.

இன்னும் மூன்று நான்கு படங்கள் அண்ணன் ஏ.ஆர்.முருகதாஸ் தம் கட்டினார் என்றால் நடைமுறைப்படி அவரது தம்பி திலீபனது முகம் மக்களுக்கு பழக்கமாகி தமிழ்த்திரையுலகில் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்டில் ஹீரோவாக நிரந்தரமாக பயணிக்கலாம். மற்றபடி இந்தப்படத்தில் நாட் பேட் என சொல்லும் அளவிற்கு சமாளித்திருக்கிறார்.

பாடல்கள் யாவும் நன்றாக இசையமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஷாப்பிங்  சாங் உட்பட, அவை ஆடியோவாக கேட்ட பொழுது மனதில் ஏற்படுத்திய ஆவலை காட்சியில் கட்டமைக்க தவறிவிட்டன.

ஜெகன் அண்ட் கோ ஹீரோவை கொல்ல அலையும் நோக்கம், ரஞ்சித் ஒரே நாளில் செல்வாக்கு இழப்பது, தெருவில் நின்றுக்கொண்டு ஒருவர் சத்தமாக  கொலைத்திட்டத்தை விவரிப்பது, கிளைமேக்ஸ் சேஸிங்கில் ஹீரோ நன்றாக தூங்கி எழுவது, சாப்பிடுவது என படத்தின் முக்கிய கரு எல்லாமே செம காமெடியாக இருப்பதால், அதன் மீது என்னதான், பளிச் ஒளிப்பதிவு, நல்ல இசை, அஞ்சலி அன்ட் கோவின் ஸ்போக்கன் இங்கிலீஷ் நகைச்சுவை, ஸ்லோ ஷட்டர் ஆக்ஷன் காட்சிகளை வைத்து அடுக்கினாலும் சீட்டுக்கட்டு மாளிகை போல படம் வெலவெலத்து விழுகிறது.

அப்படியே அடுத்த ஸ்கீரினில் அடுத்தக்காட்சி சென்றால் பாலாவின் பரதேசி. ஒரு கதவடைத்தால் இன்னொரு கதவு திறக்கும் என்பதுபோல முதல் படம் கைவிட்ட நிலையில் இந்தப்படம் காப்பாற்றியது.

கடந்த நூற்றாண்டின்  முற்பகுதியில் வாழ்ந்த ஒரு பகுதி தமிழ்ர்களின் வாழ்க்கை முறையையும் பிழைப்புக்காக கவரப்பட்டு டீ எஸ்டேட்டில் அவர்கள் படும் அவலங்களையும் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என மொத்த யூனிட்டும்  சிரத்தையான உழைப்புடன் வெகு சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள்.


பீரியட் படமான மதராசப்பட்டிணத்தில் செட், காஸ்ட்யூம்ஸ்களுக்காக மெனக்கெட்டிருந்தாலும் பேசும் மொழி கிட்டத்தட்ட இன்றைய தமிழ் போல்வே இருக்கும். ஆனால் பரதேசியில் படத்தின் கலர், டோன் உட்பட அனைத்து பிரிவுகளிலும் டீடெய்லிங் தரமாக, நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது. இசை மட்டும் விதிவிலக்கு.


பாலாவின் மாஸ்டர் பீஸ், தமிழின் சிறந்த படம் என்றெல்லாம் எனக்கு மதிப்பிட தெரியவில்லை அல்லது தோன்றவில்லை. ஆனால் நிச்சயமாக சுவாரஸ்யமான, பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. தொண்டைக்குழியில் மூச்சடைக்க வைக்கும் குரூரங்கள் இல்லாத பாலா படம் என்கிற வகையில் கூடுதல் தைரியத்துடன் செல்லலாம்.

Friday, February 1, 2013

உப்பில்லா கடல்




எம்.டி.வி அன்பிளக்ட் நிகழ்ச்சியில் முதன்முதலாக கடல் படத்தின் நெஞ்சுக்குள்ளே பாடலை இசைத்தபொழுது ஏ.ஆர்.ரஹ்மான் முகத்தை பார்த்திருக்கிறீர்களா...? அதில் அப்படியொரு பரவசம் இருந்தது. அந்தப் பாடலை கேட்பவர்களையும் அத்தகைய நிலைக்கு கொண்டு செல்லும் வீரியமிக்க இசை!

வழக்கமாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், மணிரத்னம் கையில் பட்டவுடன் இன்னும் மெருகேறும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் காட்சியமைப்பில், புதிய சுவையோடு பரவசப்படுத்தும். 

ஆனால் இந்தப் படத்தில் குழந்தை பருவத்தில் இருக்கும் குதூகலம் மறைந்து  வாலிப வயதுகளில் சம்பிரதாயத்துக்காக தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பது போன்ற மனப்பான்மையில் பாடல்களை எடுத்ததுபோல் இருக்கிறது. 

'நெஞ்சுக்குள்ளே'யெல்லாம் ஏதோ பாட்டு போட்டுட்டாங்களே என அடித்து விடப்பட்டிருக்கிறது. 'அடியே' பாடல் மானாட மயிலாட ரகம்.  நான் மிகவும் எதிர்பார்த்திருந்த அந்த சர்ச் சாங்.. அட போங்க பாஸ்.

பாடல்கள்தான் இப்படி என்றால் படம் மொத்தமாக அதற்கும் மேல். என்ன சொல்ல வருகிறார்கள், என்னதான் கதை என தலையை சொறிந்துகொண்டே வெளிவர வேண்டியதாக இருக்கிறது. 

டைட்டிலுக்கு முன்னதான 7 நிமிட காட்சியில் அசர வைக்கும் அர்ஜுன், ஆயுத எழுத்து பாரதிராஜா போல பரிணமிக்கப்போகிறார் என எதிர்பார்த்தால், அவரை ஒரு சராசரி தமிழ் வில்லன் அளவிற்கு கூட  பயன்படுத்தாதது ஏமாற்றம்.

அரவிந்த்சாமியின் கேரக்டரை நன்றாக கட்டமைத்துக்கொண்டே வந்து பட்டென அவரை ஜெயிலில் போட்டதும் என் ஸ்டேஷன் வந்துடுச்சு என இறங்கிக்கொள்வது போல் அவர் கதை அங்கேயே நின்றுவிடுகிறது. பின்னர் சாவகாசமாய் இன்டெர்வெல் எல்லாம் முடிந்து எப்போயோ வருகிறார். வந்தும் அவரது அறிமுக காட்சிகளுக்கு உண்டான நியாயத்தை அவர் பாத்திரம் ஈடு செய்ய வில்லை. இடையில் நிறைய கவுதம் கொஞ்சம் துளசி. அப்புறம் நடுவுல நடுவுல மக்கா சொக்கா எல்லாம் போட்டுக்கனும்.

துண்டு துண்டாக பார்த்தால் படத்தின் காட்சியமைப்புகள் சிறப்பானதாக தோன்றுகிறது. அர்ஜுன் அரவிந்த்சாமியின் ஆரம்ப கட்ட மோதல், அரவிந்த்சாமி கவுதமை மெருகேற்றுதல், கவுதம் ஞானஸ்தானம் பெறுதல், அரவிந்த்சாமி மீது பழிசுமத்தப்படுவது, அர்ஜுனிடம் கவுதம் சேருவது, துளசி கவுதம் காதல், கவுதம் திருந்துவது, கிளைமேக்ஸ் கப்பல் என சிறப்பான எபிசோட்களாக படம் துண்டு துண்டாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் சேர்த்து  பார்க்கையில், ஒரு முழுப்படமாக கோர்வையாய் மனதில் பதிய மறுக்கிறது கடல். அதிலும் மணிரத்னம் படம் என நினைத்துக்கொண்டே திரையரங்கை விட்டு வரும்பொழுது மிச்சம் இருப்பது பார்க்கிங் டோக்கனும் ஏமாற்ற உணர்வும்தான்.

கடல் - அழகிய தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் சுவையில்லா உணவு
____________________________________________________

பின்குறிப்பு : ராவணன் படத்தையே ரசித்து பார்த்து எழுதியவன் நான்
http://www.valaimanai.in/2010/06/blog-post_19.html


Friday, December 14, 2012

டால்பி அட்மாஸில் அதிரும் சிவாஜி 3டி





"சிவாஜியை... விடுதலை செய்" என ஆர்ப்பரிக்கும் கூட்டத்திலிருந்து வீசப்படும் ஆரஞ்சு பழம் ஒன்று நம் மீது விழுவதில் ஆரம்பிக்கிறது சிவாஜி 3டியின் பிரமிப்பூட்டும் இன்னிங்ஸ்! 3டி தொழில்நுட்பத்திலேயே எடுக்கப்பட்டதாக கூறப்படும் பல ஹாலிவுட் படங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவது போன்ற அசத்தலான, நம்ப முடியாத தொழில்நுட்பத்தில் 2டி சிவாஜியை 3டி மயமாக்கி இருக்கிறார்கள்!

பாடல் காட்சிகளில் 3டி தொழில்நுட்பத்தின் ஆழத்தையும், தொழில்நுட்ப கலைஞர்களின் ஈடுபாட்டையும் உழைப்பையும் காண முடிகிறது. முன்னால் ஆடும் ரஜினி நயன்தாரா தொடங்கி, குரூப் டான்ஸர்கள், பின்னால் தெரியும் ஏரி, கடைசியில்  தெரியும் மலை வரை, லேயர் லேயராக மிகத் துல்லியமான டெப்த் அசத்துகிறது!

ஆங்கில 3டி படங்களில் கூட காண முடியாத கண்களுக்கு அருகே வரக்கூடிய 3டி எலிமென்ட்ஸ் இப்படத்தில் அதிகம். ஷங்கர், தோட்டாதரணி, கே.வி.ஆனந்த் பல்லேலக்கா பாடலில் செல்போனை தூக்கி வீசுகையில் அது சுழன்று சுழனறு நம் மேலே வந்து விழுகிறது!  சண்டைக்காட்சிகளில் பொருட்கள் நம் மேல் தெறிக்கிறது. பாடல் காட்சிகளில் நமக்கும் பூ தூவுகிறார்கள். கிளைமேக்ஸில் தியேட்டர் முழுவதும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பறப்பது உச்சகட்ட திரில்.

(பணத்தை விடுங்க பாஸ்... வாஜி பாடலில் ஷ்ரேயா நீச்சல்குளத்தில் குளிக்க, அவர் குளித்த தண்ணீர் அப்படியே நம் மீதும் தெளிக்கிறதே.. விடுங்க பாஸ்.. அதையெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்! ஹி..ஹி..)


http://en.wikipedia.org/wiki/Dolby_Atmos

இதெல்லாம் ஒருபுறமிருக்க, ஏப்ரல் 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டால்பி அட்மோஸ் என்கிற லேட்டஸ்ட் டெக்னாலஜியில் உலகெங்கும் இதுவரை வெளிவந்திருக்கும் வெகு சொற்ப திரைப்படங்களில் சிவாஜி 3டியும் ஒன்று என்பது இதன் சிறப்புகளுக்கு மணிமகுடம். அதுவும் இவ்வாறான தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல் இந்திய திரைப்படமும் கூட.

http://www.dolby.com/us/en/professional/technology/cinema/dolby-atmos-video.html

படம் முழுவதிலும் டால்பி அட்மோஸ் பட்டையை கிளப்புகிறது. அதிலும் கிளைமேக்சில் ஹெலிகாப்டரில் வந்திறங்கும்பொழுதும், சண்டைக் காட்சிகளிலும் அப்படி ஒரு பிரமிப்பான ஒலி அனுபவத்தை தந்திருக்கிறார்கள். உட்கார்ந்திருக்கும் சீட்டும், கால் வைத்திருக்கும் தரையும் அதிருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இப்போதைக்கு இந்தியாவிலேயே டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும் திரையரங்கங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று சத்யம்-செரின், மற்றொன்று எஸ்கேப்-ஸ்ட்ரீக்! நான் முதல் நாள் இரவுக்காட்சி எஸ்கேப்பில் பார்த்தேன். நம்ப முடியாத பிரமிப்பூட்டும்  திரை அனுபவம்! முடிந்தவரை டால்பி அட்மோஸில் பார்க்க முயற்சி செய்யுங்கள்!

ஏ.வி.எம் லோகோ கருப்பு வெள்ளையில் கம்பீரமாய் துவங்கும் காலம் முதல் இன்று முப்பரிமாணத்தில் ஒளியும் டால்பி அட்மோஸில் ஒலியும் சேர்ந்து கொண்டு துவங்குவதன் மூலம் தமிழ் சினிமா உலகில் தான் என்றுமே ஒரு ஜாம்பவான் என்பதை நிருபித்திருக்கிறார்கள் ஏ.வி.எம். 

இத்தகைய சிறப்பான முயற்சியை மேற்கொண்ட ஏ.வி.எம்மிற்கும்,  பிரமிக்க வைக்கும் பணியினை செய்திருக்கும் பிரசாத் லேப் கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


Sivaji 3d Review Movie Experience Dolby Atmos - Satyam Serene - Escape Streak - AVM Productions - Prasad Lab - Rajni 12 12 12

Thursday, November 15, 2012

விஜயிஸம் இல்லாத துப்பாக்கி | வலைமனை



"துப்பாக்கி சூப்பரா இருக்கு. விஜய் படம் மாதிரியே இல்ல." என முகப்புத்தகத்தில் நிலைத்தகவல் இட்டிருந்தேன்.
கேபிள்ஜி, "அதனாலதான் நல்லாயிருக்கு" என ரிப்ளையிட்டிருந்தார்.

உண்மை! விஜய், டைரக்டர்ஸ் ஹீரோவாக தனது கேரியரில் இரண்டாம் இன்னிங்ஸை நிதானமாக துவக்கி வெற்றிகரமாக ஆடி வருகிறார்.

என்னதான் காவலன், நண்பன் என துப்பாக்கிக்கு முன்னரே இரண்டு படங்களில் 'விஜயிஸம்' தென்படவில்லை என்றாலும், குருவி, சுறா, எறா, புறா என பெயர் கூட ஞாபகம் இல்லாத தொடர் விஜய் படங்களில் செமத்தியாய் நாம் அடி வாங்கி இருந்ததால் காவலன், நண்பன் முதலிய படங்களின் மூலம் ரிலீஃப் கிடைத்ததே தவிர நாம் ரிக்கவர் ஆகவில்லை.

ஆனால், துப்பாக்கி படம், விஜயிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களை முற்றிலுமாய் குணப்படுத்துகிறது. அமைதியாய், அழகாய், ஸ்மார்ட்டாய், க்யூட்டாய் என காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக காலத்தில் நம் வீட்டு சமத்துப் பிள்ளையாக பெயர் பெற்றிருந்த விஜயை மீண்டும் நம்பிக்கையோடு பார்க்க வைக்கிறது.

இதே படத்தில் 'விளம்பர தளபதி சூர்யா' நடித்திருந்தால், ஓவர் ஸ்மார்ட்னெஸ் சிரிப்புடன், சட்டையை கழற்றி வீசி சிக்ஸ் பேக்குடன் என சூர்யாயிஸத்தை தெணற தெணற அடித்திருப்பார். அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் விஜய்க்கும் நாம் முதலில் நன்றி சொல்லிக்கொள்வோம்.

எப்பொழுதும் விஜய் படங்களில் பாடல்கள் ஹிட்டடிக்கும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் என்னவோ தெரியவில்லை, இந்தப்படத்தில் ஒரு பாடலும் நயாபைசாவிற்கு கூட தேறவில்லை. பாட்டு ஹிட்டடிக்குது படம் மொக்கை வாங்குதே என யோசித்து வேண்டுமென்றே ரிவர்ஸ் டெக்னாலஜியில் பாடல்களை மொக்கையாக இசையமைத்தாற் போலிருக்கிறது.

ஆங்.. அப்புறம் படத்தில் காஜல் இருக்கிறார். எனக்கென்னவோ மாற்றானிலும் சரி, துப்பாக்கியிலும் சரி மஹதீராவிற்கு பிறகு காஜலுக்கு சரியான கேரக்டர் மட்டும் அல்ல சரியான காஸ்ட்யூம் கூட தரப்படவில்லையென்ற குறை இருக்கிறது.

எனர்ஜியான், ஒலிம்பிக், டி.என்.ஏ, விஞ்ஞானம் என பல விஷயங்களை கலக்கியெடுத்து கே.வி.ஆனந்த் மாற்றானிலும், ஜுடோ, பேட்மேன், அயன்மேன், சுத்தியல் என மிஸ்கின் முகமூடியிலும் வரிந்து கட்டிக்கொண்டு மானாவாரியாக கதையை கொத்து போட்டு வெத்து ஆக்கியது போல அல்லாமல் 'ஸ்லீப்பர் செல்ஸ்' என்கிற ஒரேயொரு டாபிக்கை தேசபக்தி கொண்ட கதாநாயகன் மூலம்  சுவாரஸ்யமாகவும் சிம்பிளாகவும் குழப்பாமல் சொல்லி ஜெயித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இனிமேல் விஜய் படங்களிலும் புதுப்புது விஷயங்கள் இருக்கும் என்கிற நம்பிக்கையை தந்து அவரது அடுத்த படத்தை சாமான்ய ரசிகரையும் எதிர்பார்க்கச் செய்ய வைத்த வகையில் துப்பாக்கி மாபெரும் வெற்றி பெறுகிறது!

வெல்கம் பேக் விஜய்! வி ஆர் வெயிட்டிங்!

Tuesday, March 20, 2012

வள்ளல்கள் கர்ணனும் இன்றைய புரட்சித்தலைவியும்



"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..."  என டி.டி.எஸ் ஒலி பின்னணியில் பாடிக்கொண்டே வரும் என்.டி.ஆர்.. டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் முறையில் பூஸ்ட் அப் செய்யப்பட்ட காட்சியில் சரிந்து கிடக்கும் சிவாஜி.. சுமார் 40 வருட பழமை வாய்ந்த திரைக்காவியத்தை மெருகேற்றப்பட்ட நிலையில் திரையில் காணவும் ஒரு பாக்கியம் வேண்டும்.

என் அம்மா தீவிர சிவாஜி ரசிகை. அதிலும் கர்ணண் படம் குறித்து பல முறை சிலாகித்திருக்கிறார். கர்ணண் டிஜிட்டல் மேருகேற்றல் என்கிற விளம்பரம் பார்த்து கடந்த ஞாயிறு இரவுக்காட்சிக்கு ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கிற்கு அழைத்து சென்றேன். படம் துவங்கிய சில நிமிடங்களுக்கெல்லாம் ஹவுஸ்புல்லாகி விட்டது.

படம் ஆரம்பிக்கும் முன்னர் 10 நிமிடம், இன்றைய கர்ணன்.. வாழும் வள்ளல்.. புரட்சித்தலைவி அம்மா, தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரி வழங்குவது சரியான டைமிங் டாக்குமென்ட்டரி. 'முடியலைப்பா' என ஆடியன்ஸ் அலறிய பின்னும் நெஞ்சில் ஈவிரக்கமின்றி ஆப்பரேட்டர் முழுவதையும் ஓட்டி முடித்த பின்னரே படத்தை போட்டார்.

சிவாஜி அறிமுகத்திற்கு கைதட்டல், காதல் காட்சிகளுக்கு விசில், என கொண்டாட்டமான ஆடியன்ஸ். பெரும்பாலும் இளைஞர்கள். வயது முதிர்ந்தவர்கள் அமைதியாக ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார்கள். என் அம்மா உட்பட. முதல் பாதியை விட இரண்டாம் பாதி வெகு வேகமாக செல்கிறது. அதிலும் கண்ணனாக என்.டி.ஆர் அறிமுகமாவது முதல் படம் கலாட்டாதான்.

முழுமையாக டிஜிட்டல்மயமாக்கப்படாவிட்டாலும், பல காட்சிகளை பளிச்சென்று பூஸ்ட் அப் செய்திருக்கிறார்கள். இயன்ற இடங்களில் எல்லாம் பின்னணி இசை மிருதுவாக டிஜிட்டலில் ஒலிக்கிறது. நினைத்தால் முழுவதுமாக டிஜிட்டலைஸ் செய்ய முடியும் என்றாலும், வரவேற்பு எப்படியிருக்கும் என தெரியாத நிலையில் இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக செய்துபார்த்திருக்கலாம்.   மொக்கைப்படங்களாய் வெளியிட்டு விட்டு திரைத்துறை செத்துக்கொண்டிருக்கிறது என புலம்புவதற்கு பதிலாக இதுபோல பழைய படங்களை செப்பணிட்டு திரையிடுவதே மேல்!  தற்போது இம்முயற்சிக்கு கிடைத்திருக்கும் நல்ல வரவேற்பின் மூலம் அடுத்தடுத்து பெரும் முதலீட்டில் முழுமையான டிஜிட்டல் பிரிண்டுகளில் பழைய படங்களை எதிர்பார்க்கலாம்.

"சின்ன வயசுல பார்த்தது.. ம் ம்.." என படம் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது அம்மா சொன்னார். அவரது அந்த "ம்ம்.."  எனக்கு சொல்ல முடியாத மனநிறைவை தந்தது.

Friday, January 13, 2012

நண்பன் இஸ் வெல்





காதல்,  கதையின் மையக்கருவாக இல்லாத படங்கள் தமிழில் குறைவு. அதிலும் ஃபீல் குட் வகை படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.  புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்து காட்சி ஊடகங்களில் நேரத்தை அதிகம் செலவிடும் காலகட்டத்தில் ஒரு சினிமா, அதுவும் ஒரு தமிழ் சினிமாவில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒவ்வொரு படத்திலும் எப்படி ஒரு குற்றத்தை கிரியேட்டிவ்வாக புதிய முறையில் செய்யலாம் என்பதையே நாம் கற்க முடியும்.

ஒரு ஹீரோ, ரெண்டு ஹீரோயின், வில்லன் அப்புறம் கிளைமாக்ஸ் இடையிடையே பாடல்கள் என்கிற உருப்படாத திரை இலக்கணத்தை மீறி தமிழில் படங்கள் வருவது அரிது. அதிலும் அப்படம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஹிட் ஆவது அதனினும் அரிது.

இவ்வாறான நிலையில் வெற்று இலக்கணங்களை உடைத்து புதிய பரிமாணத்தில் ஒரு படத்தை கொடுக்க முதன்முறையாக ஷங்கரும், மாஸ் ஹீரோவான விஜய்யும் முன்வந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்காலத்திற்கு ரொம்பவும் நல்லது.

தற்போதைய கல்வி கற்பிக்கப்படும் முறை குறித்தும் அது மாணவர்களின் பால் உண்டாக்கும் தாக்கத்தையும், இதற்கான மாற்று வழிகளையும் மையமாக வைத்து இன்னபிற பொழுபோக்கு சமாச்சாரங்களை சேர்த்துக்கொண்டு ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ்,  கெட்ட ஹிட் ஆகி பட்டையை கிளப்பிய படம். இன்று சீனாவில் கூட பல கல்லூரிகள் 3 இடியட்ஸ் படத்தை பார்க்குமாறு மாணவர்களுக்கு பரிந்துரைக்கின்றன என்றால் அக்கதையின் வலு குறித்து அறிந்துக்கொள்ளலாம்.

அப்படியாகப்பட்ட டபுள் ஸ்டராங் கருத்துள்ள, படு சுவாரஸ்யமான நடையில் செல்லும் மெகா ஹிட்டான படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என நினைத்ததற்கே ஷங்கர் மற்றும் ஜெமினி பிக்சர்ஸ்  பாராட்டுக்குரியவர்களாகிறார்கள்.

தமிழக மக்கள் தொகையில் 3 இடியட்ஸ் பார்த்தவர்கள் சொற்ப சதவிகதத்திலேயே இருப்பார்கள் என்பதால், ஷங்கர் எடுப்பதன் மூலமும், விஜய் நடிப்பதன் மூலமும் படத்தின் அற்புதமான கருத்துக்கள் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு போய் சேரப் போகிறது குறித்து மகிழ்ச்சியே.

ஆகவே குரங்கை நினைக்காமல் மாத்திரையை சாப்பிட வேண்டும் என்கிற கதையைப் போல் ஏற்கனவே 3 இடியட்ஸ் பார்த்தவர்கள் அமீர் - விஜய், சத்யராஜ் -  இரானி, மாதவன் - ஸ்ரீகாந்த் என ஒப்பீட்டு பார்வை இல்லாமல் பார்க்க முடிந்தால் நண்பனை ரசிக்கலாம்.  3 இடியட்ஸ் பார்க்காதவர்களுக்கு அந்தப் பிரச்சினை கூட இல்லை. இந்த படம் சுவையாகவும், நல்ல பல விஷயங்களை அறியத்தரும் புத்தகமாகவும் இருக்கும். இடையிடையே இலியான இடுப்பை ரசித்துக்கொள்ளும் வசதியும் உண்டு.

முதல் நாள் காட்சி -  சென்னை ஏ.ஜி.எஸ் திரையரங்கம்.




■  காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக சமயங்களில் விஜய்யை இவ்வளவு க்யூட்டாக அமைதியாக பார்த்ததாக ஞாபகம். அப்பாடா....  ஷங்கர் யாருடனாவது இணைந்தால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றவாறு சம்மந்தப்பட்ட நடிகரை வைத்து பிரமிப்பினை படத்தில் காட்டுவார்.   பல வருடங்கள் கழித்து அமைதியாக வரும் விஜய்யை பார்த்து நண்பனிலும் அதே பிரமிப்பு நமக்கு ஏற்படுகிறது.

ஒரு ஸ்டூடன்ட்டாக மட்டும் விஜய் கொஞ்சம் இடறுகிறார். டொக்கோமா விளம்பரத்தில் கூட செம யூத்தாக இருந்தாரே...? எது எப்படியோ... விஜய் இதுபோன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தால், தமிழ்நாட்டில் எஸ்.எம்.எஸ் ஜோக்குகளே அழிந்து விடும் ஆபத்தும் உள்ளது.

■  இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன் என்பது போல படத்தில் வெறித்தனமாக விளாசி இருப்பவர் சத்யன் ஒருவர் மட்டுமே. படத்தை தூக்கி நிறுத்துகிறார். சத்யராஜும் தன் பங்கிற்கு சிறப்பாகவே செய்திருக்கிறார்.

■  மாணவ தோற்றத்திற்கு மூவரில் சூப்பராக ஃபிட் ஆகிறவர் ஜீவா மட்டுமே. அனுபவித்து நடித்திருக்கிறார் மனிதர்.  ஸ்ரீகாந்திற்கு இது டூ ஆர் டை மேட்ச் மாதிரி. திரையுலகில் அவரது இரண்டாம் இன்னிங்ஸ் இந்த படத்தையே நம்பி உள்ளதால், கிடைத்த பந்துகளில் சிக்ஸர் அடிக்காவிட்டாலும் சொதப்பாமல் இயன்ற அளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்.

■  நடிப்புக்கு ஆள் எடுங்கன்னா, இடுப்புக்கு ஆள் எடுத்த வகையில் இலியானாவும் இருக்கிறார். பாவம் நெஞ்செலும்புகள் தெரிகிறது.  சிவாஜியில் ஸ்ரேயாவை பார்த்துவிட்டு இப்படி ஒரு ஷங்கர் ஹீரோயினை மனசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவரது அக்காவாக வந்த அனுஹ்யாவே அவரை விட எனக்கு அழகாகத்தான் தெரிந்தார். சரி ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ் லூஸ்ல விடுங்க.

உலக அளவில் மெகா ஹிட் ஆன (சன் டிவியில அப்படித்தான் சொல்றாங்க) எந்திரன் படத்திற்கு பின்னர் ஷங்கர் ஒரு ரீமேக் படம் செய்திருக்கிறார்.  அதுவும் கொஞ்சம் கூட மாற்றாமல் அதே கதை, அதே திரைக்கதை, அதே காட்சியமைப்புகள்.  தன்னை பாதித்த ஒரு பாசிட்டிவ், ஃபீல் குட் படத்தை தமிழக மக்கள் அனைவருக்கும் அறியத் தர வேண்டும் என தனது அத்தனை இமேஜுகளையும் மறந்து விட்டு நண்பன் தந்திருக்கும் இயக்குனர் ஷங்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நண்பன் - ஒரு நல்ல புத்தகம்!






Nanban Movie Review by blogger Sukumar Swaminathan
Valaimanai

Thursday, October 27, 2011

வேலாயுதம் - ஏழாம் அறிவு - டிரா மேட்ச்




அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றுதான் இல்லை. மற்றபடி  உணர்வுப்பூர்வமாக இந்த தீபாவளிக்கு தமிழகத்தில் மோதிய இரண்டு பெரிய படங்கள் ஏழாம் அறிவும் வேலாயுதமும்.


சூர்யாவை விட விஜய்க்கு அதிகம் இருக்கும் மாஸ் ஃபேக்டர், ஆஸ்கார் ரவிச்சந்திரன் பேனர், எம்.ராஜா இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் சிங்கிள் டிஜிட்டில் ஸ்கோர் செய்த நிலையில் விஜய் ஆண்டனி சிக்சர்கள் அடித்திருந்தது என வேலாயுதத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு நிலவியிருந்தது.


அதே நிலையில், நல்ல விளம்பரங்கள், கொஞ்சம் அதிகமாகவே ஏற்படுத்தப்பட்ட ஹைப்,  போதி தர்மன் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தியது, ஹாலிவுட் பட கதைகள் போன்ற தோற்றத்தை விளைவித்த டிரைலர்,  நிறைய தியேட்டர்களை பிடித்தது, முன்கூட்டியே புக்கிங் ஆரம்பித்தது, ஒருநாள் முன்னரே ரிலீஸ் செய்தது என வேலாயுதத்தை விட ஒருபடி ஏழாம் அறிவுக்கே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

25ம் தேதி இரவு கமலாவில் ஏழாம் அறிவு பார்த்தேன். சொல்லப்பட்டிருக்கும் செய்திக்காக சில நெகடிவ் அம்சங்களை பொறுத்துக்கொண்டு கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படம் இது என்பது என் கருத்து. 

பாடல்களை திரையில் பார்க்க விரும்பிய ஒரே காரணத்திற்காக 26ம் தேதி தீபாவளியன்று காலை பி.வி.ஆரில் வேலாயுதம் பார்த்தேன்.  இதுவரை எந்த விஜய் படத்துக்கும் முதல்நாள் போனதில்லை.

விஜய் படம் பார்க்கிறோம் என மனதை தயார் செய்து கொண்டு உட்கார்ந்தால், ஆச்சரியப்படும் விதமாக முதல் பாதி முழுவதும் கலக்கலான காமெடியுடன் செம ஜாலியாக சென்றது வேலாயுதம்.  இரண்டாம் பாதி மட்டும் கொஞ்சம் அதிகமான ஆக்ஷன் மசாலாவினால் நெடி ஏறுகிறது.

கொடுக்கும் காசுக்கு மேலாகவே விஜய் ஆண்டனியும், சந்தானமும் திருப்திப்படுத்தி விடுகிறார்கள்.  முதல் பாதியின் கிராமத்து எபிசோடினை சொல்லிய விதம் செம அட்டகாசம்.  சென்னைக்கு வந்ததும் சந்தானமும் சேர்ந்துவிடுவதால் படம் இன்னும் வேகத்தில் பறக்கிறது. சுபாவின் வசனம் கண்டிப்பாக படத்திற்கு பெரிய பலம்.

மற்றுமொரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் கண்ணில் பூச்சி பறக்க விடாமல் எதேச்சையாக விஜய் சூப்பர் ஹீரோவாக உருமாறும் விதம் நிம்மதியான விஷயம். கிராமத்தில் அடிக்கும் லூட்டிகள், சந்தானத்துடன் அன்டர் பிளே, ஹன்சிகாவுடன் திணறுவது என கில்லிக்கு பிறகு விஜய்யின் காமெடி பசிக்கு வேலாயுதம் நல்ல தீனி போட்டிருக்கிறது.

படத்தில் விஜய், சந்தானத்திற்கு அடுத்து இயக்குனர் நம்பிய விஷயம் ஹன்சிகாவின் இடுப்பு.  அம்மணியை மாப்பிள்ளை, எங்கேயும் காதலை விட அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். மாமா மாமா என அவர் சுற்றி வருவது செம க்யூட். அவர் முன் ஜெனிலியா ஏதோ சுமாரான பிகர் போல் இருக்கிறார்.

எனக்கு வெகுவாக பிடித்திருந்த 'ரத்தத்தின் ரத்தமே..', 'சில்லாக்ஸ்', 'மொளச்சு மூணு..' பாடல்கள் சிறப்பாக திரையில் வந்திருக்கிறது.

இன்றைய அ.தி.மு.க. கட்சிக்கூட்டங்களில் "நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற...." பாட்டு கட்டாயம் ஒலிப்பது போல் எதிர்காலத்தில் விஜய் கட்சிக்கூட்டங்களில் இந்த 'ரத்தத்தின் ரத்தமே..' பாடல் அவசியம் அலறும். அதிலும் அந்த ஓ..ஓஹோ என வரும் ராகம் செம சூப்பர். எனக்கு பெர்சனலாக இந்த பாடல் ரொம்பவும் பிடித்திருக்கிறது.

ஆகவே மக்களே.. இரண்டாம் பாதியில் உள்ள ஒரு சில நெகடிவ் அம்சங்களை பொறுத்துக்கொண்டு ஒருமுறை பார்க்க கூடிய படமாக அமைந்திருப்பதனால் என்னைப்பொறுத்த வரை வேலாயுதமும் ஏழாம் அறிவுடன் டிரா ரிசல்ட் ஆகிறது.


பின்குறிப்பு : சத்தியமா நான் விஜய் ஃபேன் அல்ல என்பதற்கான ஆவணங்கள் இணைக்கப்பட்டிருக்கின்ற :
http://valaimanai.blogspot.com/2011/10/blog-post.html
http://valaimanai.blogspot.com/2011/08/blog-post.html
http://valaimanai.blogspot.com/2011/02/blog-post_23.html
http://valaimanai.blogspot.com/2010/12/blog-post_20.html




Velayudham Velayutham velayudam velayutam vijay ilaya thalabadhi vijay jaym m raja oscar ravichandran velayaudam vimarsanam blogger blog review valaipadhivu vimarsanam
velayaudam reivew by tamil blogger sukumar swaminathan

Tuesday, October 11, 2011

வர்ணம் - பார்க்க வேண்டிய படம்




ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பதிவர்களும் அழைக்கப்பட்ட மற்றுமொரு சிறப்புக் காட்சி.  பெரிய ஹீரோக்கள் இல்லாத.. ஏன், சிறிய ஹீரோக்களே கூட இல்லாத,  ஓப்பனிங் இல்லாத ஒரு லோ பட்ஜெட் படம். புதுமுக இயக்குனர்.

ஏதோ சுமாராய் இருந்தால் போதும் என மனதை தயார்படுத்திக்கொண்டு படம் பார்க்கத் துவங்கினால் அட்டகாசமான சப்ஜெக்ட்டை கையில் எடுத்துக்கொண்டு சில பல திருப்பங்களோடு போரடிக்காமல் முதல் பாதியையும் படு சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதியையும் கொடுத்து அசர வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எம்.ராஜு.

அழகான காட்சிகளை சொல்லும் ஓவியங்களின் மேல் தெளிக்கும் வண்ணங்களை காண்பித்து ரம்மியமான டைட்டிலுடன் துவங்குகிறது படம்.  எடுத்துக்கொள்ளப்பட்ட கதைக்களனும் அதுதான். இயற்கையில் சமமாக படைக்கப்பட்ட மனித குலத்தின் மேல் தெளிக்கப்படும் 'வர்ணம்'  குறித்தது தான் கதைக்கருவும். இரட்டைக்குவளை முறை, தாழ்த்தப்பட்ட சாதியினர் மீதான அடக்குமுறை, அவர்களை அவமானப்படுத்துதல் முதலிய தீண்டாமை கொடுமைகளை காதல், மோதல், மர்மம் கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.

இயல்பான திருவிழா காட்சிகளை கொண்ட பாடல், முனியின் கதை சொல்லும் பாடல் ஆகியன சிறப்பாக வந்திருக்கின்றன.   பின்னணி இசையும் குறிப்பிடும்படியாய் அமைந்திருப்பது படத்திற்கு பெரிய பலம்.  தங்கமாக நடித்திருக்கும் அந்த இளம்பெண், மோனிகா, நந்தா, கதை சொல்லும் இளைஞன், சம்பத் என பாத்திரங்கள் அனைவரது நடிப்பும் அருமையாக இருக்கிறது.

மோனிகாவை முனி பிடித்து விட அனைவரும் பயத்தில் உறையும்பொழுது, மணி மட்டும் அதன் பின்னணி அறிந்தவனாய் முறைத்துப்பார்ப்பது, தங்கத்துடன் பேசிவிட்டு வரும் செல்லத்தை துரத்தி துரத்தி விசாரிப்பது, அருவியில் படுத்தபடி கதை சொல்வது என பல காட்சிகள் கவிதையாய் ரசிக்க வைக்கிறது.

நன்றாக படித்த பணக்கார வீட்டு கதநாயகி லூசு பெண் போல விறைப்பாய் சுற்றும் கதாநாயகன் மேல் விழுந்து விழுந்து லவ் பண்ணும் உருப்படாத சினிமாக்களை எடுத்து வைத்துக்கொண்டு 'திருட்டு சி.டில பார்க்காதீங்க... தியேட்டர்ல வந்து படம் பாருங்க...'  என மைக்கை கடிக்கும் மனசாட்சியே இல்லாத இயக்கு'நார்'கள் மலிந்து வரும் காலத்தில், அரிதாய் அவ்வப்போது பூக்கும் குறிஞ்சிப் பூக்களில் ஒருவராய் பூத்திருக்கிறார் எஸ்.எம்.ராஜு.

வர்ணம் - சிறப்பான படைப்பு -  பார்க்க வேண்டிய படம்!

Varnam varnamm varnam movie review valaimanai vimarsanam
monica monika nandha s.m.raju 
review by sukumar swaminathan valaimanai


Monday, February 7, 2011

ஆஹா ஓஹோ யுத்தம் செய்


ஞ்சாதே' ஏற்படுத்திய பிரமிப்பே இன்னும் எனக்கு அடங்கவில்லை. அதற்குள்ளாக 'யுத்தம் செய்'. சமூகத்தில் ரகசியமாக நடக்கும் குற்றங்கள். இதனால் பாதிக்கப்படும் சாதாரண பெண்கள். இவ்வாறாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள, குறிப்பாக இளம்பெண்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறிதும் ஆபாசம் கலக்காமல் 'அஞ்சாதே'விற்கு அடுத்து சொல்லப்பட்டிருக்கும் கதை 'யுத்தம் செய்'. அவ்வகையில் இதைப்போன்ற படங்களை தொடர்ந்து அளிப்பதற்கு மிஷ்கினுக்கு ஒரு பெரிய ராயல் சல்யூட்.









கதை


இதைப்போன்ற சஸ்பென்ஸ் முடிச்சுக்கள் கொண்ட திரில்லர் கதையை சொல்வது மகா பாவம். படம் பார்க்கும் முன்னர் என்னதான் கதையை படிக்காமல் நான் தவிர்த்தாலும் படித்த விமர்சனங்களில் வந்த மற்ற ஒன்றிரண்டு வரிகளாலேயே சில முடிச்சுக்கள் படம் பார்க்கும்பொழுது புரிபட்டு போனதால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. ஸோ படம் பார்க்க செல்பவர்கள் தயவு செய்து எங்கும் கதையை படிக்க வேண்டாம்.



நடிப்பு

  முதன்முறையாக அமைதியான ஆக்ஷ்ன் ஹீரோ அவதாரத்தில் சேரன் தான் ஏற்ற பாத்திரத்தை கனகச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார். அந்த இடைவேளைக்கு முன்னர் வரும் சண்டையிலும் சரி அதற்கு முன்பாக மெதுவாக வீட்டை விட்டு கிளம்பி நடப்பதிலும் சரி நாம் தமிழ் திரையில் முன்னெப்போதும் பார்த்திராத காவல் அதிகாரியாக அமைதியாக சேரன் அசத்துகிறார்.  பஞ்ச் பேசி நாட்டைக் கெடுக்காத, கலர் கலராக வலம் வந்து கண்ணைக்கெடுக்காத ஹீரோ தேடுபவர்களுக்கு சேரன் நல்ல விடை.

  ஒய்.ஜிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரியான ரோல். முதன்முதலில் காவல் நிலையத்தில் குறுகி செய்தறியாது குடும்பத்துடன் நிற்கும் காட்சியில் வாவ்.. லவ்லி சார். அவரது மனைவியாக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் பின்னுகிறார். கிளைமேக்ஸ் காட்சியில் அவரது ஆளுமை முக்கியமானது.

  இன்ஸ்பெக்டர் இசக்கி முத்து உடனான சேரனின் முதல் விசாரணை காட்சியில் இசக்கியாக நடிதது இருப்பவரது பெர்ஃபார்மென்ஸ் அபாரம். வெறுப்பு, பயம், கோபத்தை அட்டகாசமாக பாடி லாங்குவேஜில் காட்டி அசத்துகிறார் மனிதர்.


  ஜுதாஸாக வரும் ஜெயப்பிரகாஷ் மற்றுமொரு ஹைலைட்.  முதல் காட்சியில் தூக்கத்திலிருந்து எழும்பி வருவது முதற்கொண்டு கடைசியில் மூச்சிறைத்துக்கொண்டே பேசுவது வரை வரும் இடங்களில் எல்லாம் கச்சிதமாக நடித்திருக்கிறார். 


  தீபா ஷா நாட் பேட். மாணிக்க விநாயகம் அருமையான பெர்பார்மன்ஸ். செல்வா இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாமோ என தோன்றுகிறது. இன்னும் பல பல பெயர் தெரியாதவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை உணர்ந்து செய்திருப்பதால் படம் பளிச்சிடுகிறது.



இசை


இசை அருமை என ஒரே ஒரு வரியில் சொல்லிவிட்டால் அது ரொம்பவும் கம்மி.
அட்டகாசமான பின்னணி இசை பாஸ். சி.டி.யில் Box Theme என வரும் இசை, படத்தில் டென்ஷனை ஏற்றுகிறது. Chaos Theme மெல்லிய சோகம் இழையோட புதிர் உணர்வினை மனதுக்குள் விளைவிக்கிறது. Hope Theme இசை வரும் காட்சி படத்தில் நெகிழ்ச்சியை ஊற்றுகிறது. 'கன்னித்தீவு பெண்ணா' பாடல் மட்டும் அதன் மூதாதையர்களான 'வாலமீனு' ('ல' வா இல்லை 'ள' வா பாஸ்?) மற்றும் 'கத்தாழ கண்ணால' அளவிற்கு ஜொலிக்காது என நினைக்கிறேன்.


நெகிழ்ச்சி

  கிளைமேக்ஸ் ரொம்பவும் நெகிழ்ச்சியானது, சேரனின் தங்கையை சுஜா என ஒய்.ஜியும், அவரது மனைவியும் அழைத்து கத்தியை உடனடியாக கீழே போடுவது மிஷ்கினின் டிரேட்மார்க் சென்டிமென்ட் பஞ்ச்.

  'அஞ்சாதே'வில் கடத்தப்பட்டு பின் காரில் இருந்து லுங்கியுடன் இறக்கி விடப்படும் இளம்பெண்ணை பார்த்த மாத்திரத்தில் நரேன் ஓடிச்செல்வாரே அந்த ஃபீல் இந்த படத்தின் கிளைமேக்சில் வருகிறது.

  படத்தின் இசை டாப் டக்கர். பிண்ணனி இசை சரியான இடங்களில் மிகச்சரியாக செட் ஆகியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

  "கொஞ்சம் அறிவை வச்சுகிட்டு நீங்களே இவ்வளவு பண்ண முடியும்னா நிறைய அறிவை வச்சுகிட்டு நாங்க எவ்வளோ பண்ண முடியும்" என ஜெயப்பிரகாஷ் சொல்லும் இடம் உட்பட வசனமும் படத்தில் டாப்.


விஷுவல்ஸ்


  காட்சியமைப்புகள் பல இடங்களில் ரசிக்க வைக்கின்றன. இன்ஸ்பெக்டரை சேரன் விசாரிக்கையில் சட்டென ஒய்.ஜி புகார் அளிக்க வரும் காட்சியை பிளாஷ்பேக்கில் மாற்றி டக்கென டீ கொண்டு வரும் நிகழ்காலத்துக்கு திரும்பி வருவது லவ்லி விஷுவல்.


  அந்த சிறுமி ஜன்னலோரம் நின்று பழைய காட்சியை நினைவுபடுத்தி சட்டென ஆமா சார் இன்னொருத்தர் ஆட்டோவில் இருந்தார் என சொல்வதும் அருமை.


  அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனை இருளில் காண்பித்து கரண்ட் கட் ஆகி சட்டென பகல் பொழுதிற்கு மாறுவது அருமை.


  கடைசியில் அந்த சிறுவன் விமான நிலைய எஸ்கலேட்டரில் ஏறி விடியலை நோக்கி செல்வது போன்ற காட்சியமைப்பில் இத்தனை சஸ்பென்ஸ், இத்தனை முடிச்சுக்களையும் அவிழ்த்து நெகிழ்ச்சியான தீர்வை சொல்லும் இடத்திற்கு ஏற்றாற்போல் மனதிற்கு இதமாய் அமைந்துள்ளது.


 கதையின் முக்கிய முடிச்சான பீப் ஷோ நிகழ்வுகளை மற்ற எந்த சாதாரண கமர்ஷியல் தமிழ் சினிமாவை விடவும் டீசன்டாக காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.



நெருடல்

  என்னதான் பெண்ணுக்காக பழி வாங்கினாலும் குடும்பத்தினர் அனைவரும் புரஃபஷனல் கில்லர் போல் கருப்பு உடையணிவது கொஞ்சம் இடிக்கிறது.

  முதல் பாதியில் ஏகப்பட்ட பெயர்கள், ஏகப்பட்ட முடிச்சுக்கள், விசாரணைகள் என கொஞ்சம் கவனம் தப்பிவிட்டாலும் குழப்பிவிடக்கூடிய விதத்தில் படம் அமைந்திருக்கிறது. 

  அவ்வளவு நாள் தேடிய ங்கை கிடைக்க வாய்ப்பு வருகிறது என்றாலும் உயர் அதிகாரி சொல்லிவிட்டார் என்பதற்காக எதுவும் செய்யாமல் சேரன் வீட்டில் போய் அமைதியாய் உட்காருவது இடிக்கிறது.

ஆனாலும் எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்காகவும் தரப்பட்டுள்ள நல்ல படைப்பிற்காகவும் இதற்கு மேல் இங்கு எதையும் பட்டியிலிட விரும்பவில்லை.


__________________________

ஆறு பாட்டு, ஏழு ஃபைட்டு என டார்ச்சர் செய்யும் தமிழ் சினிமாவில் கொடுத்த காசிற்கு எரிச்சல் படாமல் ஆத்ம திருப்தியுடன் ரசிகன் வெளியில் வரும் படங்களில் யுத்தம் செய் முக்கிய இடம் பிடிக்கும்.



Saturday, December 18, 2010

ஓரே ஒரு சீனை வெட்டு - ஈசன் சூப்பர் ஹிட்டு




சில வருடங்களுக்கு முன் இரவு பப்பில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஸ்டெஃபனி என்கிற ஆங்கிலோ இந்திய பெண்ணை காரில் இரண்டு இளைஞர்கள் துரத்தி கலாட்டா செய்யப்போக அவர் விபத்தில் பலியானார்.  இதேபோன்று வடிவமைக்கப்பட்ட காட்சியுடன் ஈசன் படம் ஆரம்பிக்கிறது.

அமைச்சருக்கு நிலம் தர மறுத்த ஒரு விதவை பெண் பட்டப்பகலில் என்சைக்ளோபீடியா விற்பது போல வருபவனால் வீட்டிலேயே வைத்து குழந்தையுடன் கொள்ளப்படுகிறாள். அதை கள்ளக்காதல் கொலையாக ஜோடித்து தன் ஆள் ஒருவனை கைதாக வைக்கிறார் அமைச்சர்.

இதே போன்ற இன்றைய செய்தித்தாள்களில் காணப்படும் பல செய்திகளையும் அவற்றின் பின்னால் திரைமறைவில் நடப்பவைகளையும் சேர்த்து நெய்யப்பட்டிருக்கும் படம் ஈசன்.

ஒரு அமைச்சர், அவரது செல்ல மகன், பப், குடி, பெண்கள் என சந்தோஷமாய் வாலிப வயதை கழிக்கும் அவனது நண்பர்கள் பட்டாளம். ஏதாவது பிரச்சினையில் நண்பர்கள் மாட்டிக்கொண்டால் அவர்களை தனது தந்தையின் பலத்தை கொண்டு காப்பாற்றுகிறார் செல்ல மகனான வைபவ். இதனால் எப்பொழுதும் அமைச்சருடன் உரசலில் இருக்கிறார் நேர்மையான அசிஸ்டென்ட் கமிஷனர் சமுத்திரக்கனி. ஒரு நல்ல சுப இரவில் ஒரு பப்பில் ஒரு தொழிலதிபரின் மகள் மேல் காதல் கொள்கிறார் வைபவ். இதனால் ஆத்திரமடையும் தொழிலதிபர் தன் மகளை மறந்துவிட சொல்லுமாறு அமைச்சரை மிரட்டுகிறார். இதனால் கோபமுறும் அமைச்சர் அவரது பெண் தற்கொலை செய்துக்கொள்ளக்கூடும் என்கிற வகையில் இமொஷனல் பிளாக்மெயிலால் அவரையே மிரட்டுகிறார். இதனால் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார் தொழிலதிபர்.

இந்நிலையில் திடீரென ஒரு மர்ம நபரால் தலையில் பலமான இரும்பால் தாக்கப்பட்டு வைபவ் சரிந்து விழுகிறார். தாக்கியவரின் நிழல் மட்டும் தெரிய அப்பொழுது ஈசன் என்கிற டைட்டிலுடன் இடைவேளை விடப்படுகிறது.

இடைவேளையில் ஏ.ஜி.எஸ் சினிமாவில் 30 ரூபாய்க்கு கிடைக்கும் 5 குட்டி சமோசாக்களை வாங்கி வந்து கொறித்துக்கொண்டே பார்த்தால் காணாமல் போன வைபவ்வை கண்டுபிடிக்க சமுத்திரக்கனி தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்.  வைபவ்வின் நண்பன் வினோத் மருத்துவமனையில் ஏனென்று சொல்லப்படாமல் உயிரிழக்கிறார். சமுத்திரக்கனியின் படிப்படியான விசாரணையில் முடிச்சுக்கள் அவிழ்கிறது. வைபவ் மற்றும் அவரது நண்பர் ஊரிலிருந்து மேற்படிப்புக்காக குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டிலாகிவிடும் அபிநயாவை பலாத்காரம் செய்துவிட அவர்கள் இருவரையும் அபியின் தம்பி பழிவாங்குகிறான் என்பதை கண்டுபிடிக்கிறார் சமுத்திரக்கனி. பின்னர் கொஞ்சம் ஓவர் டோஸான கிளைமேக்சுடன் படம் முடிகிறது.

படத்தின் பிளஸ் என்று பார்த்தால் ஒளிப்பதிவு, சமுத்திரக்கனி, நாடோடிகள் படத்தில் அந்த பந்தா பார்ட்டியாக வலம் வந்தவர், அபிநயா என்ற சொற்பமானோர். சமூக அக்கறையுடன் பல விஷயங்களை படம் நெடுகிலும் தெளித்திருப்பதையும் பாராட்டலாம். முதல் பாதியில் காவல் அதிகாரி <-> அரசியல்வாதி <-> தொழிலதிபர் ஆகியோருக்கிடையேயான கிளாஷ் நன்றாக இருக்கிறது.

வீடுகள், உடை, வாழ்க்கை முறை, சுற்றுப்புரம், பேருந்து, சுவரில் இருக்கும் ஐடெக்ஸ் கண் மை விளம்பரம் உட்பட சுப்ரமணியபுரத்தில் 1980 களை மெனக்கெட்டு பிரதிபலித்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்து வெற்றி பெற்றிருந்தார் சசிகுமார். அதே போல ஈசனில் 2010-இனை பிரதிபலிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இரவு நேர பப் கலாச்சாரம், பார்ட்டி நடத்தி போலிஸ் கைது, அரசியல்வாதிகள் சொத்துக்களை வளைத்தல், நிறுவனங்களை மிரட்டி கமிஷன் அடிப்பது, இண்டெர்நெட்டில் ஹாக்கிங் செய்து இ-மெயில் தகவலை மாற்றுவது, தொழிலதிபர்கள் - அரசியல்வாதிகள் மோதல், சிக்சர், ஃபோர் அடித்தால் பக்கத்தில் இருக்கும் நடிகையை கட்டிப்பிடிக்கும் கிரிக்கெட் அணி வைத்திருக்கும் தொழிலதிபர் என இன்றைய காலகட்டம் பிரதிபலிக்க வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுப்ரமணியபுரத்தில் மெனக்கெட்டிருந்த அளவிற்கு இதில் உழைக்கவில்லையோ என தோன்றுகிறது. இவை யாவும் கோர்வையாக சொல்லப்படாததாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது. சுப்ரமணியபுரத்தில் இருந்த அந்த மேக்கிங் ஸ்டைல், அந்த ஃபீல், அந்த மிரட்டிய திரைக்கதை இவை யாவும் இந்த படத்தில் இல்லாதது சசிகுமாரை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே.

இந்த இரவுதான் போகுதே, சுகவாசி பாடல்கள் இரண்டும் ஓ.கே.! வந்தனம் பாடல் நல்ல முயற்சி. அந்த கெட் ரெடி பேஷன் பாட்டு மொக்கை. பின்னணி இசையில் கொஞ்சம் தேர்ச்சி பெற வேண்டும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள். இதற்காக அவரை ஆர்மோனியப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஊருக்கே போயிடுங்க என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு எனக்கு இசை தெரியாது என்பதை இங்கே சொல்ல விரும்புகிறேன். (ஜெயா டி.வி.யில் ஹரியுடன் நான் நிகழ்சியில் நடுவராக கலந்து கொண்ட ஜேம்ஸ் வசந்தன், சரியாக பாடாத சிறுவர்களை "நீ எல்லாம் ஏன் பாட வர்ற.. வேற வேலையை பார்க்க போ" என்கிற ரீதியில் அவமானப்படுத்தியதை நான் இங்கே நினைவு கூற விரும்பவில்லை...)

முதல் பகுதியில் அமைச்சர் அழகப்பன் -  அதிகாரி சமுத்திரக்கனி - தொழிலதிபர் என பரபரப்பாக செல்லும் கதை சட்டென இரண்டாம் பாதியில் வேறு டிராக்கில் பயணிப்பதால் கதையோடு ஒன்ற முடியவில்லை. என்ன சொல்ல வருகிறார்கள், ஏன் அந்த முதல் பாதி என இரண்டாம் பாதியில் குழப்பத்துடனேயே படம் பார்க்க வேண்டியதாகி விடுகிறது. கருப்பு சாமியாக ஆடு ரத்தம் குடிக்கும் அபியின் அப்பா, தன் மகளுக்கு அப்படி ஒரு கொடுமை நேர்ந்த உடன் வெறும் வியர்வையுடனே அடங்கிப் போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  டியூட், டியூட் என வாலிப நண்பர்கள் உச்சரித்துக்கொள்வதிலேயே அழுத்தம் இல்லை. நண்பர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மொக்கையாகவே இருக்கிறது. நெகட்டிவ் என்றால் சொல்லிக்கொண்டே போக வேண்டி இருப்பதால், சுப்ரமணியபுரத்தை தந்த சசி என்பதால் இம்முறை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்.

இந்த படத்தை யார் வேண்டுமாயின் எடுத்து விட முடியும். சசிகுமாரிடம் இருந்து இன்னும் உயர்தரமான படங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் எழுத்து, தயாரிப்பு, இயக்கம் - சசிகுமார் என அவர் பெயர் வரும் அந்த ஒரே ஒரு சீனை மட்டும் தவிர்த்துப்பார்த்தால் ஈசனை ஹிட் வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

Wednesday, December 8, 2010

அழகிய சிருஷ்டி நந்தலாலா ஆர்யாவின் திருஷ்டி சிக்குபுக்கு





சரியாக நந்தலாலா வெளியாகி ஒரு வாரம் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை பத்மம் திரையரங்கில் பார்த்தேன். பதிவுலகில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றதாலும், பல பதிவர்கள் படத்தை பார்க்க பரிந்துரை செய்ததாலும் படம் பார்க்கும் ஆவல் விடாமல் துரத்திக்கொண்டே இருந்தது.  ஆனால் திரையரங்கினுள் நுழைந்த உடன் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சரியாக ஏழெட்டு பேர்தான் இருந்தார்கள். படம் ஆரம்பிக்கும்போது எண்ணிக்கை இருபதை தாண்டவில்லை.

 தாயை தேடி பயணிக்கும் இரு குழந்தைகளின் கதை. இது போன்ற டெம்ப்ளேட்களை டி.வி.டி போட்டு சனிக்கிழமை இரவுகளில் சப் டைட்டிலுடன் வேற்று மொழியில் பார்த்தே பழகிவிட்டதால் திரையரங்கில் நமது மொழியில் பார்க்கும் அனுபவம் ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே என மிரட்டிய இயக்குனர் மிஷ்கின் முற்றிலும் வேறு பரிமாணத்தில் பயணித்து முக்கிய கதாபாத்திரத்தையும் சுமந்து, நந்தலாலவிலும் மிரட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்.

படத்தில் முதலில் என்னை ஈர்த்தது டைட்டில்தான். ஓடிக்கொண்டிருக்கும் நீரில் அந்த அசையும் நீர் செடிகள்.. வாவ்...படத்தின் டோன் இற்கேற்ப மனதை தயார் செய்யும் விதத்தில் அந்த டைட்டில், சிறிய தியானம் செய்வதை போன்ற மன அமைதியை தருகிறது. ஹேட்ஸ் ஆஃப்.

இளையராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலம்தான் என்றாலும்,  பல விமர்சனங்களை படித்து அதிகமாக நான் எதிர்பார்த்து சென்றபடியால் எனக்கு இது கம்மியாகவே பட்டது. பொம்முக்குட்டி அம்மாவுக்கு பிண்ணனி இசையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது கம்மிதான்.

இது போன்ற புதிய முயற்சிகள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவை. படத்தில் வெகு சில இடங்களில் இடர்கிறது. அந்த சைக்கிள் பெண் அடிபட்டு கிடக்க, மிஷ்கின் காயத்தை பார்க்க முயல்கையில் எந்த பெண்ணும் அவ்வாறு கூச்சலிடாமல் உட்கார்ந்தே இருக்க மாட்டாள். இதுபோன்ற சில சில விஷயங்கள் இடரினாலும் அவற்றை சொல்லி கும்மியடிக்க இந்த படத்தை பொறுத்த வரையில் எனக்கு மனசு வரவில்லை. அதற்காகவே தான் பல படங்களை வெளியிடுகிறார்களே.. வாங்க அதில் ஒன்றினை பார்ப்போம்.





அதே பத்மம் திரையரங்கம், மறுநாள் சனிக்கிழமை நண்பன் டிக்கெட் எடுத்துவிட்டபடியால் சிக்கு புக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. நேற்று பார்ததிருந்த அதே பயண கதை பாணியில் பார்ப்பவர்களை எவ்வளவு வெறுப்பேற்றலாம் என யோசித்து செதுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.

தமிழ் சினிமாவின் லூசு கதாநாயகிகள் கலாச்சாரப்படி ஷ்ரேயா. சத்தியமா சொல்றேன். ஷ்ரேயாவை இதுக்கு மேல யாரும் மொக்கையா காண்பிக்க முடியாது. இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ஷ்ரேயா வந்ததைதான் இத்தனை நாள் மொக்கையாக நினைத்திருந்தேன். ஆனால் இதில் அவர் தனது பழைய சாதனையை அவரே முறியடிக்கிறார்.  லண்டனில் வாழும், படித்த அழகான பெண் கேரக்டர், அதுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா பாஸ்... இவ்வளவு லூஸாவா இருப்பாங்க.

கையில் காசு இருக்கிறது. டிரையினில் இருந்து இறக்கி விட்டால் நாம என்ன செய்வோம். அதே ஸ்டேஷனில் இறங்கி வெயிட் பண்ணி அடுத்த டிரையினில் போவோம் இல்லையா.. இங்கே அப்படியில்லை. காடு, மலை, கடல் தாண்டி பயணித்து மீண்டும் வேறு ஏதோ ஸ்டேஷனில் ஏறுகிறார்கள்.. முடியல.. பயண கதை எடுக்கனும்னு ஆசை படுறது தப்பில்லை. அதுக்காக இப்படியா..

கதையில் சடாரென ஃபிளாஷ் பேக் துவங்கும்போது ஏதோ புதிதாய் செய்யப்போகிறார்கள் என நிமிர்ந்து உட்கார்கிறோம். ஆனால் நன்றாக போகும் பிளாஷ் பேக்கில் அந்த அம்மையப்பன் கேரக்டர், ஒடி வர மறுத்த ஹீரோயின் திடீரென ஹீரேவை தொடர்பு கொள்வது என அதையும் சொதப்புகிறார்கள்.

அந்த இன்னொரு கதாநாயகி ப்ரீத்திக்கா அழகாக இருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் பிராகாசிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம்தான். மனிதர் வரும்போதே விசில் பறக்கிறது. சந்தானம் வரும் காட்சிகள் நல்ல கல கல.

படத்தில் நான் ரொம்ப சிரித்தது, கடைசியில் அந்த அம்மையப்பன் கேரக்டரை அப்பா வேஷத்தில் காண்பித்ததைத்தான்.. பேன்சி டிரஸ் காம்பெட்டிஷனில் வேஷ்டி சட்டை கட்டிய சிறுபிள்ளை போல இருந்தார். 

'அங்கதான் சார் டிவிஸ்டு வைக்கிறோம்' என கிளைமேக்ஸில் ஒரு டிவிஸ்ட்டு... ஸ்ஸ்ஸ்ப்பா இதுக்கும் மேல சொன்னா சரிப்பட்டு வராது...