Tuesday, March 20, 2012

வள்ளல்கள் கர்ணனும் இன்றைய புரட்சித்தலைவியும்



"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..."  என டி.டி.எஸ் ஒலி பின்னணியில் பாடிக்கொண்டே வரும் என்.டி.ஆர்.. டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் முறையில் பூஸ்ட் அப் செய்யப்பட்ட காட்சியில் சரிந்து கிடக்கும் சிவாஜி.. சுமார் 40 வருட பழமை வாய்ந்த திரைக்காவியத்தை மெருகேற்றப்பட்ட நிலையில் திரையில் காணவும் ஒரு பாக்கியம் வேண்டும்.

என் அம்மா தீவிர சிவாஜி ரசிகை. அதிலும் கர்ணண் படம் குறித்து பல முறை சிலாகித்திருக்கிறார். கர்ணண் டிஜிட்டல் மேருகேற்றல் என்கிற விளம்பரம் பார்த்து கடந்த ஞாயிறு இரவுக்காட்சிக்கு ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கிற்கு அழைத்து சென்றேன். படம் துவங்கிய சில நிமிடங்களுக்கெல்லாம் ஹவுஸ்புல்லாகி விட்டது.

படம் ஆரம்பிக்கும் முன்னர் 10 நிமிடம், இன்றைய கர்ணன்.. வாழும் வள்ளல்.. புரட்சித்தலைவி அம்மா, தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரி வழங்குவது சரியான டைமிங் டாக்குமென்ட்டரி. 'முடியலைப்பா' என ஆடியன்ஸ் அலறிய பின்னும் நெஞ்சில் ஈவிரக்கமின்றி ஆப்பரேட்டர் முழுவதையும் ஓட்டி முடித்த பின்னரே படத்தை போட்டார்.

சிவாஜி அறிமுகத்திற்கு கைதட்டல், காதல் காட்சிகளுக்கு விசில், என கொண்டாட்டமான ஆடியன்ஸ். பெரும்பாலும் இளைஞர்கள். வயது முதிர்ந்தவர்கள் அமைதியாக ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார்கள். என் அம்மா உட்பட. முதல் பாதியை விட இரண்டாம் பாதி வெகு வேகமாக செல்கிறது. அதிலும் கண்ணனாக என்.டி.ஆர் அறிமுகமாவது முதல் படம் கலாட்டாதான்.

முழுமையாக டிஜிட்டல்மயமாக்கப்படாவிட்டாலும், பல காட்சிகளை பளிச்சென்று பூஸ்ட் அப் செய்திருக்கிறார்கள். இயன்ற இடங்களில் எல்லாம் பின்னணி இசை மிருதுவாக டிஜிட்டலில் ஒலிக்கிறது. நினைத்தால் முழுவதுமாக டிஜிட்டலைஸ் செய்ய முடியும் என்றாலும், வரவேற்பு எப்படியிருக்கும் என தெரியாத நிலையில் இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக செய்துபார்த்திருக்கலாம்.   மொக்கைப்படங்களாய் வெளியிட்டு விட்டு திரைத்துறை செத்துக்கொண்டிருக்கிறது என புலம்புவதற்கு பதிலாக இதுபோல பழைய படங்களை செப்பணிட்டு திரையிடுவதே மேல்!  தற்போது இம்முயற்சிக்கு கிடைத்திருக்கும் நல்ல வரவேற்பின் மூலம் அடுத்தடுத்து பெரும் முதலீட்டில் முழுமையான டிஜிட்டல் பிரிண்டுகளில் பழைய படங்களை எதிர்பார்க்கலாம்.

"சின்ன வயசுல பார்த்தது.. ம் ம்.." என படம் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது அம்மா சொன்னார். அவரது அந்த "ம்ம்.."  எனக்கு சொல்ல முடியாத மனநிறைவை தந்தது.

Monday, March 5, 2012

இந்த புத்தகத்திற்கு விமர்சனம் தேவையில்லை

1975 தொடங்கி 2007 வரையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் ஹைலைட்ஸை விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே பார்த்தால் எப்படி இருக்கும். சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள 'உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு'  புத்தகம் அவ்வாறான இனிமையான அனுபவமாக இருக்கிறது.

இந்த புத்தகத்திற்கு விமர்சனம் தேவையில்லை. புத்தகத்திலிருந்து சில மேற்கோள்களை மட்டும் காட்டியுள்ளேன். நீங்களே படித்து பாருங்கள். கிரிக்கெட் ஆர்வலராய் இருந்தால் உடனே வாங்கிவிடுவீர்கள்.





174 பந்துகள் ஆடிய கவாஸ்கர் அடித்த ரன்கள் 36 மட்டுமே. ரன் எடுக்க வேண்டும் என்ற பிரக்ஞையே இல்லாமல் நின்ற இடத்திலேயே சிலை போல் நின்று ஆடி, போட்டி முடிவதற்குள் கவாஸ்கர் கால்களை கரையான் அரிக்கத் தொடங்கிவிட்டது போங்கள்.
....


அந்தக் காலத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சென்று எந்தத் தென்னை மரத்தை ஆட்டினாலும் ஒரு நான்கைந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மேலிருந்து விழுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
....


இங்கிலாந்தில் இந்திய அணி சென்று இறங்கிய போது ஒருவரும் அவர்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.  ஏர்போர்ட்டுக்கு வண்டியை அனுப்பியதே பெரிய விஷயம்தான்.

....


அரவிந்த டிசில்வா சந்தித்த முதல் பந்திலிருந்து அடித்த அடியில் இந்திய அணியினர் திக்குத் தெரியாமல் ஓடினர்.  'நாலு பவுண்டரி ஒரு ரூபா' என்று கூவிக்கூவி அடித்தார். 

....


அபூர்வ சகோதரர்கள் மார்க் வாவ் - ஸ்டீவ் வா இருவரும் தமிழ் படங்களில் க்ளைமாக்ஸில் பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேர்ந்து வில்லனில் ஆட்களை அடித்து நொறுக்குவது போல நியூசிலாந்து பவுலர்களை போட்டுச் சாத்தினர்.
....


ஒன்றல்ல, இரண்டல்ல, 979 வைட் பால்கள் போடப்பட்டன. இத்தனை வைடையும் பறவை போல் கையை விரித்து, காட்டிக் காட்டிக் கோப்பை முடிவதற்குள் அம்பயர்களுக்கு பறக்கும் சக்தியே வந்துவிட்டது போங்கள்.
....


ரமேஷ் அவுட் ஆக, உள்ளே நுழைந்தார் 'இலக்கணப் புகழ் ராகுல் டிராவிட். 'யாமிருக்க பயமேன்' என்பது போன்ற ஆட்டம் அன்று அவருடையது. 'என்னை அவுட் ஆக்க வேண்டுமென்றால் ஒரு நான்கைந்து பவுலர்கள் சேர்ந்து போட்டால்தான் உண்டு' என்பதைப் போன்ற இலக்கணப் பிழையில்லாத அப்பழுக்கற்ற ஆட்டம்.
....


அடுத்த ஆட்டம் ஆஸ்திரேலியாவுடன். ஒருநாள் போட்டியாக தொடங்கிய ஆட்டம் இந்திய பேட்ஸ்மேன்களின் கேடுகெட்ட ஆட்டத்தால் அரை தினப் போட்டியாக ஆனது.
....


சேவாக் ஏதோ தன் பங்குக்கு நின்று 81 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆக, மற்ற அனைவரும் 'எங்களுக்கு எதுவுமே தெரியாது, எங்களை தயவு செய்து விட்டு விடுங்கள்' என்று சரண்டர் ஆக 40வது ஓவரிலேயே 234 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய ஆல் அவுட்.


எட்டாவது உலகக் கோப்பை நமக்கு எட்டாத உலகக் கோப்பையானது!

....


மைதானத்துக்குள் ட்ரம், ட்ரம்பெட் எல்லாம் எடுத்துக்கொண்டு போக தடை விதிக்கப்பட்டது.  அத்தோடு மைதானங்களில் இருந்த கடைகளில் சேல்ஸ் நன்றாக இருப்பதற்காக ரசிகர்கள் தாங்களே வெளியேயிருந்து சரக்கை உள்ளே எடுத்துப் போகக் கூடாது என்று ஒரு நிபந்தனை வேறு. மேற்கிந்திய ரசிகர்கள் மூச்சு விடாமல் வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் இருப்பார்கள். சரக்கில்லாமல் அவர்களுக்கு இருப்புக் கொள்ளாது.


'யோவ், ட்ரம் எடுத்துண்டு போகக் கூடாதுங்கற சரி, ரம் எடுத்துண்டு போகக் கூடாதுன்னா அந்த மேட்சை நீயே உட்கார்ந்து பாரு' என்று பலரும் டி.வி.யும் சைட் டிஷ்ஷுமாக வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள்.

....


இந்தியாவின் அடுத்த போட்டி பெர்முடாவுடன். மொத்தமே 66,000 மட்டுமே ஜனத்தொகை கொண்ட அநியாயத்துக்கு சிறிய நாடு அது. என்ன, அந்நாடு நம் சென்னை சிதம்பரம் ஸ்டேடியம் சைஸ்தான் இருக்கும் போலிருக்கிறது.
....



உலகக்கோப்பை நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், 2011 போட்டிகள் குறித்து இப்புத்தகத்தில் இல்லை. அதையும் சேர்த்து ஒரு அப்டேட்டட் வெர்ஷனை வெளியிட்டால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

நல்ல தகவல்களை நகைச்சுவை நடையில் படைத்து அசத்தி இருக்கும் ஆசிரியர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு
விலை : ரூ.50
ஆசிரியர் : சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு பதிப்பகம்

___________________________________

எனது பிற புத்தக விமர்சனங்கள்/அறிமுகங்கள் :
http://www.valaimanai.blogspot.in/p/blog-page_10.html