Wednesday, February 25, 2015

வலைமனை | ஃபீலிங்ஸ் 25 02 15



இதோ இன்னுமொரு உலகக்கோப்பை. ஆனால் 96ல்  பப்பிள் கம் ஸ்டிக்கரையோ 99ல் பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டுகளையே சேர்த்து வைத்து கிரிக்கெட் பார்த்த ஆர்வம் இப்பொழுது இல்லை.

ஒன்று வருடா வருடம் ஆடித்திருவிழா மாதிரி ஐ.சி.சி ஏதோவொரு கோப்பையை வைத்து கல்லா கட்டி கரகாட்டம்  ஆடத்துவங்கிவிட்டது காரணமாக இருக்கலாம். அல்லது வயதாவதாலும் இருக்கலாம். :)

டெக்கரேஷனுக்கு தூவும் கொத்தமல்லி தழை போல எப்பொழுதும் வந்து போகும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகள் பயமுறுத்துவது இந்த உலகக் கோப்பையின் ஹைலைட்.  ஜிம்முக்கு சென்று வந்தது போல் ஜிம்பாப்வே இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் 275க்கு மேல் அடித்திருக்கிறார்கள். போன உலகக் கோப்பையிலேயே ரவுடியாக ஜீப்பில் ஏறி விட்ட அயர்லாந்து இம்முறை வெஸ்ட் இன்டீஸ் முகத்திலேயே மார்க் போட்டுவிட்டார்கள். ஆப்கானிஸ்தானும் பிளேடை மென்று வாயில் வைத்தபடி யார் மேல் துப்பலாம் என காத்திருக்கிறது. ஆக மொத்தம் ஆரோக்யமான போட்டித் தொடர் இந்த 2015 உலகக் கோப்பை.

•••

கோலி அளவிற்கோ தவான் அளவிற்கோ தோனி ஆடுவதில்லை என்கிறார்கள். அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்கிறேன். 'தல'ன்னு ஃபார்ம் ஆயிட்டா.. நாம ஆட வேணாம்..  விராட் கோலியவோ , அருண் விஜய்யவோ ஆட விட்டு நின்னு அழகு பார்த்தா போதும். :)

•••

ஐ, இசை, என்னை அறிந்தால், அனேகன் என வாரா வாரம் முதல் காட்சிக்கு சென்ற சாதனையை விட்டுவிட வேண்டாம் என கடந்த வெள்ளியன்று புக்கிங் சைட்டை ஒப்பன் செய்தால் புதிய ரிலீஸ் 'சண்டமாருதம்'.

120 ரூவாய் கொடுப்பது கூட ஓ.கே. ஆனால் சரத்குமார் படத்திற்கு பார்க்கிங் காசு ரூ.100 கொடுத்தால் படம் பார்க்கும் பொழுது மனசாட்சி மவுனமாக இருக்காது என்பதால் அப்படியே சைட்டை குளோஸ் செய்துவிட்டேன்.

•••

சின்ன வயதில் சர்க்கஸ் பார்த்தது.  கடந்த வாரம் சென்றிருந்தோம். சென்டிரல் ரயில் நிலையம் அருகே  மூர் மார்கெட் திடலில் ஒரு மெகா சைஸ் டென்ட் அடித்து நடத்துகிறார்கள். முன்பு போல் மிருகங்கள் என எதுவுமே இல்லை. எல்லாமே மனிதர்களின் சாகசம்தான்.


டிக்கெட் விலை ரூ.100, ரூ.200, ரூ.300 என இருந்தது. உள்ளே செல்லும் பொழுது அது கொஞ்சம் அதிகமாய்த் தெரிந்தாலும் நிகழ்ச்சி முடிவில் அத்தனை கலைஞர்கள், அமைப்பு, பொருட்கள் என இந்த சினிமா-சீரியல்-ஐபிஎல் காலத்தில் இவ்வளவு கட்டணத்தில் இந்த கலையை பராமரித்து நடத்துவதே பெரிய விஷயம் போல் இருந்தது.

கழிப்பறைகள் சென்னை புத்தக கண்காட்சி தரத்தில்  இருக்கின்றன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். :)

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்காக புரமோட் செய்யப்படும் இந்த நிகழ்ச்சியில் சாகசம் செய்யும் வட, வடகிழக்கு மாநில பெண்களின் சின்ன சின்ன ஆடைகள் ஒன்றுதான் நெருடல்.

•••

இந்த எதிர்வினையை தோழிகள், சகோதரிகள் என பல பேரிடம் கேட்டிருக்கிறேன். எதற்காகவாவது ஐஸ்வர்யா ராயை இழுத்தால் பத்தில் எட்டு பெண்கள் அந்த பதிலை சொல்லி விடுவார்கள்.

அன்றும் அப்படித்தான், எங்கேயோ வெளியில் கிளம்புவதற்கு தங்கமணி தாமதமாக்கி கொண்டிருக்க, நான் கடுப்பில்,
 "ஐஸ்வர்யா ராய்க்கு கூட மேக்கப் போட்டு கிளம்ப இவ்ளோ நேரம் ஆகாது." என்றேன். உடனே பல்வேறு கால நிலைகளில் கேட்டு பழகிய அதே பதில் வந்தது.

"ஐஸ்வர்யா ராய் என்ன பெரிய அழகியா..?"
  "ஆமா.. இல்லையா பின்ன.. மிஸ் வேர்ல்ட் பட்டம் வாங்கியிருக்காங்கல...?"
"அவங்களுக்கு இன்டிரஸ்ட் இருந்துச்சு காம்பெட்டிஷன்ல கலந்துக்கிட்டாங்க... நாங்க கலந்துக்கலை. அவ்ளோதான்" என்றார் சிம்பிள் அன்ட் சீரியஸாய்.

சில வேளைகளில் ஏதோவொரு துணிக்கடையில் அந்த பளீர் லைட்டிங் வெளிச்சத்தில், பளபள கண்ணாடியில் முகத்தை பார்க்கும் பொழுது "ச்சே.. ஒரு ஆங்கிள்ல நாமளும் லைட்டா அழகாத்தான் இருக்கோம்.." என்று தோன்றும். ஆனால் அதை வெளியில் சொல்லும் தைரியம் வாய்த்ததில்லை. இந்த விஷயத்தில் இந்த பெண்களின் அநியாய தன்னம்பிக்கையும், துணிச்சலும் ஆச்சரியமூட்டுகிறது.

____________________________________________________

Best of  'பீலிங்ஸ்' : http://www.valaimanai.in/p/blog-page_9.html 
____________________________________________________

வலைமனை பிற பதிவுகள் : சினிமா | நகைச்சுவை | புத்தகம் 
பேஸ்புக் பக்கத்தில் இணைய : https://www.facebook.com/valaimanai.in

Thursday, February 19, 2015

ஜப்பான் - நூல் அனுபவம்


‘இது முரம்… இது தூண்…’ என கண்ணை கட்டிக் கொண்டு யானையை தொட்டுப் பார்த்து உணர்ந்தவர்கள் போல, ஜப்பான் என்றால் சுறுசுறுப்பான மக்கள், தொழிலிலும் தொழில்நுட்பத்திலும் கில்லாடிகள், அணுகுண்டு வீசப்பட்ட நிலையிலும் தங்களது அசாதாரண உழைப்பால் மீண்டெழுந்தவர்கள் என அப்படியும் இப்படியுமாய் ஒரு புரிதல் வைத்திருந்தேன்.
கட்டை அவிழ்த்ததும்தான் இது யானை என்கிற பிரம்மாண்ட நிஜம் புரிவது போல், எஸ்.எல்.வி.மூர்த்தி அவர்கள் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஜப்பான் என்கிற புத்தகம் அறிவுக் கண்ணைத் திறந்து இதுதான் உண்மையான ஜப்பான் என உள்ளதை உள்ளபடி காண்பித்து பிரமிக்க வைக்கிறது.
ஜப்பானை தேவதைகள் உருவாக்கிய விதம் என நம்பப்படும் புராதான கதையில் துவங்கி இன்றைய தொழில்நுட்ப சாதனைகள் வரை வெகு விரிவாக ஜப்பான் குறித்து அறியத் தருகிறது இந்நூல். முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் ஜப்பானின் பங்கு, தன்னை வலிமையான சக்தியாக நிருபிக்க அந்நாடு எடுத்த முயற்சிகள், அதன் விளைவாய் கொடுத்த மிகப்பெரிய விலைகள் என பாட புத்தகங்களில் நாம் மேலோட்டமாக அறிந்திருந்த நிகழ்வுகளின் முழு பின்னணியும் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது.
“ஒட்டுமொத்த ஜப்பானிய மக்கள் வாழவும், விவசாயம் தொழில் நடத்தவும் இருக்கும் மொத்த நிலப்பரப்பு தமிழ்நாட்டின் 80% மட்டுமே.” என துவக்கத்திலேயே ஜப்பானின் உருவத்தை நம் மனதில் பதிய வைத்துவிட்டு அத்தகைய சிறிய இடத்தினுள் நடந்த பிரம்மாண்டங்களை ஆசிரியர் விவரிக்கையில் நமக்கு ஏற்படும் சுவாரஸ்யம் தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களை புரட்ட வைக்கிறது. ஜப்பானின் கற்காலம், மன்னராட்சிகள், சீனா உள்ளிட்ட பிற நாடுகளுடனான வியாபார உறவுகள், சமுராய்கள், மதம், மக்கள், சாதனைகள், அவமானங்கள், வல்லரசு கனவு, அதற்கான விலை, வீழ்ச்சியில் இருந்து மீள்வது, அமெரிக்க உதவி, தொழில் புரட்சி, இன்றைய சவால்கள் என ஜப்பான் குறித்து ‘அ’ துவங்கி ‘ஃ’ வரை மிக விரிவாக எடுத்துரைக்கிறது இந்த புத்தகம்.
ஒரு அரசியல், வரலாற்று புத்தகமாக, நமது இந்திய தேசம் எங்கே நிற்கிறது, இன்னும் எங்கே செல்ல வேண்டும் என யோசனைகளை இந்த புத்தகம் தோற்றுவிக்கும் அதே சமயம், ஜப்பான் மற்றும் ஜப்பானியர்களின் ‘கற்கும் பசி’ முதலிய குணாதிசயங்களில் இருந்து தனி மனித அம்சங்களாய் நாம் பின்பற்ற வேண்டியவைகளையும் கோடிட்டு காட்டி ஒரு சுய முன்னேற்ற புத்தகமாகவும் மிளிர்கிறது.
அத்தியாயங்கள் மிகப் பெரியதாக இருப்பதாலும் ஒரே அத்தியாயத்தில் பல கால நிலைகள் கடந்து பல விஷயங்கள் சொல்லப்படுவதாலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தரப்பட்டுள்ள ’என்ன படித்தோம்’ என்பதை நினைவூட்டும் ஹைலைட்ஸ் பகுதி புத்தகத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. 192 பக்கங்கள் உள்ள ஒரு நான்-பிக்ஷன் புத்தகம். ஒரே அமர்வில் படிக்க நேரம் வாய்க்காமல் அவ்வப்போது விட்டுவிட்டு படிக்க நேரும் நிலையில், அந்த புத்தகம் நம்மை தொடர்ந்து ஈர்ப்பது அவசியம். அந்த வகையில் யாரோ அழைத்தால் ஒலியெழுப்பும் செல்போன் போல இந்த புத்தகம் தன்னை நோக்கி அழைக்கும் விதத்தில் சிறப்பம்சங்களை தன்னுள்ளே பெற்றுள்ளது.
மேம்போக்காக வளர்ச்சி, வீழ்ச்சி என் சொல்லிவிட்டு செல்லாமல் தேவைப்படும் இடங்களில் முக்கிய தரவுகளை தந்து படிப்பவர்களுக்கு சிறந்த புரிதல் அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கும் ஆசிரியரின் உழைப்பு பாராட்டுதலுக்குரியது. ஒரு தேசத்தின் பொருளாதாரம், ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி என்கிற விஷயங்களைப் பற்றிய அறிவு சுத்தமாய் எனக்கு இருந்ததில்லை. ஆனால் இந்த புத்தகம் ஜப்பானின் பொருளாதாரம் பற்றி சொல்லும் அதே வேளை ஒரு தேசத்தின் பொருளாதாரம் என்றால் என்ன ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி, வளர்ச்சி, வீழ்ச்சி என்றால் என்ன என்பதையும் நமக்கு அறிய தருகிறது. உதாரணமாக பண வீக்கம், பண வாட்டம் பற்றியெல்லாம் போகிற போக்கில் மிக எளிமையாக புரிய வைக்கிறார் ஆசிரியர்.
எந்த இடத்திலும் வலிந்து வார்த்தை தோரணங்களை சேர்க்காமல் மிக இயல்பாக, அதே நேரம் வேகமாக செல்லும் நூல், சொல்லப்பட்டிருக்கும் கனமான உள்ளடக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. இவ்வகையில் இந்த புத்தகம், மாணவர்கள், அதிகார மையத்தினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அவசியம் படிக்க வேண்டிய தரத்தில் அமைந்திருக்கிறது.
இதற்கு மேல் எவ்வளவு சொன்னாலும் கூட இந்த புத்தகத்தின் மதிப்பிற்கு இணையாக சொல்ல வேண்டிய விஷயங்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகும் என்பதால் இந்த புத்தகம் குறித்தான மதிப்புரைக்கு முடிவுரையே இல்லை!
ஆன் லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-782-4.html
________________________________________________________________
வலைமனை பிற புத்தக பரிந்துரைகளை படிக்க : புத்தக அனுபவம்
வலைமனை பிற பதிவுகள் : சினிமா | நகைச்சுவை | ஃபீலிங்ஸ்
பேஸ்புக் பக்கத்தில் இணைய : https://www.facebook.com/valaimanai.in

Friday, February 13, 2015

அனேகன் - ஐந்து நட்சத்திரங்கள்



"இவனை தூக்கிட்டு வர்றதுக்கு மூணு பேரா?" என தனுஷ்ஷை குறித்து ஒரு வசனம் வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்.  உண்மைதான். அவர் உருவம் அப்படி. ஆனால் தனுஷின் ஆற்றலை தனியாக டவுன்லோட் செய்து வைத்தால் முன்னூறு பேர் வந்தாலும் தூக்க முடியாது போல் இருக்கிறது. மூன்று வெவ்வேறு கால நிலை காதலனாக தனுஷ்.  மூனா ரூனா, அஷ்வின், காளி என கிரியேட்டிவ்வாக எதையாவது செய்யத் துடிக்கும் கலைஞனுக்கு செம ட்ரீட்டான ப்ராஜக்ட். தனுஷ் எப்படி செய்திருக்கிறார் என ஆராய்ந்து எழுத முடியாது. பம்மல் வ்வ்வே சம்பந்தம் சொல்வது போல அப்படியே அனுபவிக்க வேண்டியதுதான்.

கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் என குறிப்பிடத்தகுந்த இயக்குனர்கள் வரிசையில் கே.வி.ஆனந்த்.  பொதுவாகவே காதலை கசக்கி பிழியும் படங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. அட.. புதுசா ஏதாச்சும் சொல்லுங்கய்யா என்பது போல் இருக்கும். "இதுவரை முழுமையான காதல் படங்கள் நான் செய்ததில்லை..  அனேகனில் பண்ணியிருக்கேன்"  என கே.வி.ஆனந்த் ஒரு பேட்டியில் சொன்னபோது,  'என்னடா.. மாற்றான் தந்த சறுக்கலில் இவரும் இப்படி ஆயிட்டாரே..  படம் காதல் கத்திரிக்காய் என ரொம்ப சிம்பிளா இருக்கும் போலிருக்கு' என நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது பேட்டியில் 'க.மொ.வி.' இறக்க விரும்பாமல் தன்னடக்கமாய் இருந்துவிட்டு படத்தில் அதை செய்திருக்கிறார்.

கதையே கதாநாயகியை சுற்றி நகர்வதால் அழகு பதுமையாய் மட்டும் அல்லாமல் நடிக்கவும் செய்யும் பெண் வேண்டும். எங்க பாஸ் கண்டுபிடிச்சீங்க உதட்டை குவித்து காற்றில் முத்தமிட்டு  அசத்தும் அமைராவை?  மூன்று கால நிலைகளிலும் செம க்யூட் அன்ட் ஸ்வீட். தொடர்ந்து ஐ, இசை இரண்டு படங்களிலும் வெளி மாநில/நாட்டு கதாநாயகிகளின் மொழிக்கு பொருந்தும் அல்லது பொருந்த வைக்கப் பட்டிருக்கும் உதட்டசைவு தமிழ் சினிமாவிற்கு ஆரோக்யம்.

கனக்ஷன்ஸ் ஜெகன் ஒரு படத்தில் இருந்தால் அந்தப்  படத்தை சென்சாருக்கு அனுப்பாமலே 'ஏ' சர்டிபிகேட் தந்துவிடலாம் என்கிற பொதுவிதி இந்த படத்தில் தளர்த்தப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு வசனங்களை தவிர அவரது வால்யூமை குறைத்தே வைத்திருக்கிறார்கள்.

முதல் பாதி கார்த்திக் சூப்பர். இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம்  சூப்பராக இருந்திருக்கலாம். 'இசை' போன்ற ஒரு ஸ்கிரிப்டில் சத்யராஜ் துவம்சம் செய்தது போல் அனேகனில் வாய்ப்பு இருந்தும் கார்த்திக் கொஞ்சம் குறைவாகவே செய்திருக்கிறார். இல்லை அவர் டிசைனே அப்படித்தானா தெரியவில்லை.

ஓரு பாடலின் துவக்கம் முதல் முடிவு வரை தியேட்டர் இடைவிடாமல் அதிர்ந்து கொண்டே இருந்தது கடைசியாய் எப்போதென ஞாபகம் இல்லை. டாங்கா மாரியில் ஸ்பீக்கரை விட ரசிகர் குரல் தெறிக்கிறது. வெறும் குத்தாட்ட பாடலாக இல்லாமல் அதற்குள்ளும் கதையை வைத்ததற்கு ஸ்பெஷல் சபாஷ். ஆனால் அதற்கடுத்தாய் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  'ரோஜா கடலே' பாடலை அப்படி கிராபிக்ஸ் பேக்கிரவுண்ட் லொக்கேஷன்களை வைத்து சுமாராய் காண்பித்தற்கு அந்த சபாஷை திரும்ப வாங்கி கொள்ள வேண்டும். ஹாரிஸ் இவ்வளவு அழகாக பாடல் போட்டும் இப்படி பண்றீங்களேம்மா...?

முதல் அரைமணி நேரம் அறுபதுகளில் பர்மா எபிசோட், பின்னர் இடைவேளை வரை இன்றைய காலகட்டம். இடைவேளை முடிந்ததும் எண்பதுகளின் சென்னை, பின்னர் இன்றைய நிகழ்வு என திறமையாக கட்டமைக்கப்பட்ட இந்த சயின்ஸ், பேன்டஸி, லவ் சப்ஜெக்ட், தமிழ் எழுத்துலகில் மின்னி பின் திரையிலும் மின்னத் தெரிந்த வெகு சொற்பமானவர்கள் பட்டியலில் சுபாவின் பெயரும் எப்படி இடம் பெற்றது என்பதற்கு தரமான சான்று.

தமிழுக்கு கொஞ்சம் புதிரான புதிதான கதை, அடுத்தடுத்து பரபரப்பாய் நகரும் காட்சிகள், அருமையான ஆழமான காதல் எபிசோட்ஸ், ஆங்காங்கே டிவிஸ்ட்ஸ் அன்ட் டர்ன்ஸ், நடிகர்களின் சிறப்பான பெர்பார்மன்ஸ், துள்ளலான இசை இவை எல்லாவற்றையும் சிறப்பாக அசெம்பிள் செய்யத் தெரிந்த கெட்டிக்கார இயக்குனர் என ஒரு சிறப்பான கமர்ஷியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது அனேகன்.

2 மணி 40  நிமிடங்களும் கொடுத்த ரூ.120க்கு ரூ.1000 கிடைத்தது போல் ஒரு திருப்தி. இது போன்ற கம்ப்ளீட் என்டர்டெயின்மென்ட்டிற்கு இண்டு இடுக்கு குறைகளை வைத்துக் கொண்டு மூணரை, நாலு ஸ்டார்கள் தருவது பாவம். நான் தருகிறேன் கே.வி.ஆனந்த்... இந்தாங்க பிடிங்க 5 ஸ்டார்ஸ்  ★★★★★



வலைமனை பிற பதிவுகள் : சினிமா | நகைச்சுவை | புத்தகம் | ஃபீலிங்ஸ்
பேஸ்புக் பக்கத்தில் இணைய : https://www.facebook.com/valaimanai.in

Tags: Anegan, Anegan Review, KV Anand, Dhanush, Amyra, Harris Jayaraj, AGS Productions

Monday, February 9, 2015

ஒரு மெல்லிசான கோடு - மேட்ச்சை ஒழுங்கா ஆடு

      வேர்ல்ட் கப் 15 - போட்டோ கமெண்ட்ஸ் 1
// அனைத்தும் கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல //



ஆடியன்ஸ் : "வி வோன்ட் கிவ் இட் பேக்.. வி வோன்ட் கிவ் இட் பேக்.. "
தோனி  : "யோவ் சும்மா இருங்கய்யா.. அண்ணன் கடுப்புல இந்த பக்கம் திரும்பி சாத்திட போறாரு.."


"ஸ்டம்பு பால் பட்டுதான் பறக்குதா..  இல்ல சீனு மாமா ரிமோட் எதும் வச்சிருக்காரா தெரியலையே ஆண்டவா... "


"போன தபா வாங்குன கப்பை கேட்டா திருப்பி தர்ற வேண்டியதுதான.. அதை விட்டுட்டு  'வி வோன்ட் கிவ் இட் பேக்'னா ... வர்றவன்லாம் அடிக்காம என்ன செய்வான்...? இதை சொன்னா 'என்றா... சின்ன கவுண்டர்ல செந்தில் மாதிரி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க'ன்னு தோனியண்ணே கவுண்டர் கணக்கா எத்துறாரு.. ஏ..... ஹவா.. ஹவா.. ஹவ்வவ்வா.."


"இஷாந்த் டொமேட்டோ சாஸ் சாப்பிட்டு கையை கழுவாம வந்தாப்ல.. நாங்கதான் ஐடியா பண்ணி உனக்கு ரத்தம் வருது.. காயம் பட்டிருச்சு.. அன்பிட்னு சொல்லி அனுப்பிட்டோம். இப்போ அதையே சாக்கா வச்சு ஆஸ்திரேலியாவுல இருந்து அப்பீட் ஆகலாம்னு எல்லாம் இப்படி வந்து நிக்கிறீங்க.. இஷாந்துக்கு வந்தா மட்டும்தான் ரத்தம்.. வேற யாருக்கு நிஜமாவே  வந்தாலும் அது தக்காளி சட்னிதான்.."


"கோட்டுக்கு அந்தப் பக்கம் போயிட்டா நான் நல்லவன்..  ஒரு மெல்லிசான கோடு.. "
"பஞ்ச் அடிக்காம மேட்ச்சை ஒழுங்கா ஆடு.."



"விஜய் டிவியில  மேட்ச் போடுறாங்களாம் ப்ரோ.."
"அதுக்காக மனோ, சித்ரா, மால்குடி சுபாதான் அம்பையரா இருப்பாங்கன்னா எப்படி...?"


"பயமா இருக்கு பஜ்ஜியண்ணே.. விஜய் டிவியில என் போட்டோ கூட சோக மியூசிக்கை போட்டு.. எலிமினேட் ஆன யுவராஜ் திரும்ப டீம்ல வரனும்னா எஸ்.எஸ்.ஜே ஜீரோ செவன்னு டைப் பண்ணி எஸ்.எம்.எஸ் அனுப்புங்கன்னு ப்ரமோ போட்டுற போறாங்கன்னு..."


-வோர்ல்ட் கப் 15 போட்டோ கமெண்ட்ஸ் தொடரும்...


பிற போட்டோ கமெண்ட்ஸ் பதிவுகளை பார்க்க கிளிக் செய்யவும் 
பேஸ்புக் பக்கத்தில் இணைய : https://www.facebook.com/valaimanai.in

Saturday, February 7, 2015

என்னை அறிந்தால் | ஹாட்ரிக் என்னாச்சு?



அஜித்திற்கு ஹாட்ரிக் வெற்றி நிகழுமா என்பதும் கவுதமிற்கு ஹாட்ரிக் தோல்வி தவிர்க்கப்படுமா என்பதும் 'என்னை அறிந்தால்' படத்தின் ரிசல்ட்டை பொறுத்து இருந்தது.

நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் என கடைசி இரண்டு படத்தில் சறுக்கல். மேலும் 'கவுதம் சரியா ஸ்கிரிப்ட் ரெடி பண்ணலை' என்கிற சூர்யாவின் ஸ்கூல் மிஸ் கம்ப்ளெயின்ட். ஆகவே எதுவும் ரிஸ்க் எடுத்து சொதப்பி விடக்கூடாது. என்ன பண்ணலாம்..? சறுக்கிய ந.நவின் ஓவர்டோஸ் காட்சிகளோ, நீ.எ.பொ படத்தின் டோஸே இல்லாத காதல் காட்சிகளையோ அறவே தவிர்த்து விட வேண்டும். பிறகு?

பெயரைத் தந்த வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, விண்ணைத்தான்டி வருவாயா, வாரணம் ஆயிரம் படங்களின் ரசிக்கப்பட்ட போர்ஷன்களை எடுத்துக் கொண்டு அதில் அஜித், திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர் எல்லாரையும் பொருத்தி  சோளிகளை குலுக்கி போடுவது போல போட வேண்டியதுதான்.

ஆனாலும் அப்படி போடப்பட்ட இந்த 'என்னை அறிந்தால்' குலுக்கல் அழகாகவே விழுந்திருப்பது ஆச்சரியம். வெட்டுப்படாமல் தப்பிக்கவோ பழம் பழுக்கவோ ஆட்டத்தில் தேவைப்படும் நேரத்தில் விழுந்த தாயம் போல, கவுதமிற்கு மீண்டும் நற்பெயரை இந்த படம் நிச்சயம் வாங்கி தரும். (அதுக்காக அடுத்த படத்துக்கும் சோளியை கையில எடுத்து எங்க சோலியை முடிச்சுப்புடாதீங்கப்பு.)

அனுஷ்காவில் கதையை ஆரம்பித்து, அப்படியே அஜித்தை இணைத்து, அங்கே அருண் விஜய்யை கொண்டு வந்து பர பரவென மிக சுவாரஸ்யமாய் துவங்குகிறது படம். அஜித்தின் அந்த மெல்லிசான கோடு பிளாஷ்பேக்கை சொல்லி அவர் அந்தப் பக்கம் போய்விட்டார் என அருண் விஜய் உடனான கேங்ஸ்டர்  எபிசோடை தந்து சடாரென இந்தப் பக்கத்திற்கு ஷிப்ட் அடிப்பதில் இன்னும் கலக்குகிறது ஸ்கிரிப்ட்.

அதன் பின்பு திரிஷா, அவருடனான காதல், இழப்பு, பழிவாங்கல் என இடைவேளை வரை படம் போவதே தெரியவில்லை. அதன் பின்பு பாசம், பயணம், ஆக்ஷன் என சென்று மீண்டும் அனுஷ்காவில் வந்து முன்பாதியில் விட்ட இடத்தில் அழகாக இணைகிறது. இதன் பின்புதான் பெரியதாக ஒரு டிவிஸ்ட்டோ சஸ்பென்ஸோ இல்லை. ஆனாலும் சேசிங், ஷார்ப் வசன மோதல் என போரடிக்காமல் சென்று சொதப்பாமல் முடிவது ஆறுதல்.

சும்மா நின்றாலே ரசிர்களுக்கு ஹேன்ட்ஸமாக அருள் பாலிப்பவர் அஜித். இதில் கவுதமின் ஆராதனையில் எப்படி இருப்பார்? கேங்ஸ்டர், ஐ.பி.எஸ், சால்ட் அண்ட் பெப்பர் என மூன்று தோற்றங்களிலும் அவ்வளவு லவ்லியாக இருக்கிறார். ஆசிஷ் வித்யார்தியிடம் தன் வீட்டில் கோபப்படும் இடம் ஆகட்டும், மேத்யூ கூட்டத்தை ஒழிக்க துப்பாக்கி எடுக்கும் இடம் ஆகட்டும், லுங்கியை கட்டிக்கொண்டு நாக்கை மடித்து ரசிகர்களுக்காக செம குத்து குத்தும் இடம் ஆகட்டும், பள்ளி வாகனத்தை மறித்து பெண்ணை கூட்டிக் கொண்டு பயணிப்பது ஆகட்டும்..  வழக்கம் போல தொண்டை கிழிய 'தல.. தல' என கத்தி மாளாமல் அமைதியாய் அதே உற்சாகத்துடன் அஜித்தை ரசிக்கும் விதத்தில் ரசிகர்களுக்கு வித்யாசமான  ட்ரீட்.

திரிஷாவிடம் புரபோஸ் செய்யும் அந்த ரொமான்ஸ் காட்சியில் மட்டும் 'எனக்கு இதுல எல்லாம் இன்டிரஸ்ட் இல்லைப்பா' என்பது போலவே நடித்திருக்கிறார். இது வலிந்து செய்யப்பட்டதாக இருக்கலாம். (இந்த அம்சம் அன்புச்செல்வனில் இருந்தும்  ராகவனில் இருந்தும் சத்யதேவை வேறுபடுத்தி காட்டும் முயற்சியாகவும் இருக்கலாம்.)  *இப்படியும் பாஸிட்டிவ்வா சொல்லிக்கலாம்.

"யாராச்சும் பத்த வைங்கடா.. நான் எப்படி வெடிக்கிறேன் பாருங்க.."  என்பது போல் இருக்கும் சரவெடியாய் அருண்விஜய். பாண்டியா, அமுதன்-இளமாறன் போன்றவர்களின் குரூரத்தினை வெளிப்படுத்தாத ஆனால் அதே நேரம் நட்பை நம்பி ஏமாந்துவிட்ட வெறியுடன் தரமான வில்லனாக வெடித்திருக்கிறார். ஒரு நடிகர் கவுதமின் வில்லன் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் என்பதை விட வேறென்ன பாராட்டு பெற்று விட முடியும்? பட்டாசு பாஸ்!

திரிஷாவா இது...? மை காட். பிளெயின் காட்டன் சாரியில் ஜெஸ்ஸியாக கவுதம் கைவண்ணத்தில் மின்னியவர்.. அப்படியே நேரெதிராய் சர்வ அலங்காரத்துடன் கண்களில் மையுடன் நடனத் தாரகையாக  ஜொலிக்கிறார். திரிஷாவுடன் ஒப்பிடுகையில் வெயிட்டான ரோல் அனுஷ்காவிற்கு இல்லை. கொடுத்த ரோலை செய்திருக்கிறார். "என் ரோலை வேணும்னா அவங்க பண்ணட்டும்" என கவுதமிடம் அனுஷ்கா சொன்னதாக செய்திகள் வந்ததே. அதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது. (வெவரம் மேடம் நீங்க!)

மியூசிக்கல் ப்ளே பார்த்திருக்கிறீர்களா.. பாடிக்கொண்டே முழுக் கதையையும் நடித்து காட்டிவிடுவார்கள். ஏறக்குறைய என்னை அறிந்தால் முதல் பாதி ஒரு லவ்லி மியூசிக்கல் ப்ளே. ஹாரிஸ் விளையாடி இருக்கிறார். சூப்பர் பாஸ்! தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை போல கொஞ்ச நாளாவது ஹாரிஸை யாரும் கலாய்க்க மாட்டார்கள் என்கிற அளவிற்கு மனிதர் உழைத்திருக்கிறார். ('நான் முன்ன மாரி இல்ல இப்போ.. ரொம்போ மாறிட்டேன்'னு அனேகன்ல ஒரு லைன் வருதே.. செம டைமிங் பஞ்ச் பாஸ் அது..! ஆஹா நானே கலாய்ச்சிட்டேனே.. மன்னிச்சூ மன்னச்சூ..)

‘பில்லா 2வில் விட்டது. ஆரம்பம், வீரம் என அடுத்தடுத்து தீபாவளிக்கும் பொங்கலுக்கும் சொல்லி அடித்துவிட்டு, மூன்றாவதாக அஜித் 'என்னை அறிந்தால்' படத்தை தந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றிருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயாவில் அடித்தது. அடுத்ததாக நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் இரண்டிலும் சறுக்கிவிட்டு  இப்போது கவுதம் 'என்னை அறிந்தால்' படத்தை சிறப்பாக தந்து ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்திருக்கிறார்.

விவரிக்க முடியாத விஷுவல்ஸ், ஜில்லென்ற இசை, பற்றி எரியும்  மோதல், பசுமையான காதல் என 'என்னை அறிந்தால்' தமிழ் சினிமாவின் உன்னதம். இங்கிலீஷ்ல சொன்னா எக்ஸலென்ட்!

ஏன் தமிழ், இங்கிலீஷ்ல சொல்றோம்னா... கவுதம் படம்னா எல்லாம் அப்படித்தான்!

Wednesday, February 4, 2015

வலைமனை | ஃபீலிங்ஸ் 04 02 15

பள்ளி கல்லூரி நாட்களில் படிக்கும் பொழுது, இந்த சேப்டருக்கு இவ்ளோ நேரம் என ஷெட்யூல் போடுவது வழக்கம். 8-9 படிக்க வேண்டியது மிஸ் ஆகி 8.20 ஆகியிருக்கும். சரி ரவுண்டா 9 மணிக்கு ஆரம்பிச்சிடலாம் என நாடாளுமன்றம் போல அவை ஒத்திவைக்கப்படும். எப்போ ஒத்தி வச்சாலும் நாங்க கத்தி வைப்போம்ங்கிற உறுப்பினர்கள் மாதிரி, ஒன்பது பத்தாகி அப்படியே பரீட்சையும் பனாலாகி விடுவது வாடிக்கை.

அந்த உவமையை போல,  கடைசியாய் ஃபீலிங்ஸ் நவம்பரில் எழுதியது. டிசம்பரில் சில நாட்கள் மிஸ் ஆகிவிட, சரி ரவுண்டா ஜனவரியில் ஆரம்பிச்சுடலாம் என இருந்தேன். அங்கும் தவறவிட ரவுன்டா பிப்ரவரி ஆனது. இப்பொழுது 'ஃபிப்'பும் ஆகிவிட்டது.  சரி.. ரவுன்டா மார்ச் என எழுந்த எண்ணத்தை கஷ்டப்பட்டு மார்ச்சுவரிக்கு அனுப்பிவிட்டு  இதோ இந்த போஸ்ட்.

எழுதப் போற நாலு வரிக்கு எதுக்குய்யா நாப்பது வரி முன்னுரை என்றால்... "அங்கிளுக்கான சேரை... சட்டுன்னு கொண்டு வந்துட்டோம்..." என்பது போல கொஞ்சம் அவுட்டேட்டட் சங்கதிகள் உள்ளடக்கத்தில் உண்டு. பொறுத்தருள்க :)


•••

எப்பொழுதும் புதுவருட துவக்கத்தை விடிய விடிய  அப்பார்ட்மென்ட்ஸில் சிறுவர்கள் ஆடல் பாடல், அனைவருக்கும் கேம் ஷோ, பரிசு என நாங்கள் ஒருங்கிணைத்து கொண்டாடுவோம். இந்த முறை ஒரு வார்த்தை ஒரு லட்சம் ஃபார்மெட்டில் நடத்திய விளையாட்டு நல்ல வரவேற்பை பெற்றது. வி.ஐ.பிக்களின் முகத்தை மறைத்து வெறும் கண்ணை வைத்து இது யார் என கண்டுபிடிக்க சொன்ன கண்ணாம்பூச்சி கேள்விகளை சின்னஞ்சிறுவர்கள் துவம்சம் செய்தார்கள். மூன்றாம் வகுப்பு சிறுவன் ஒருவன் கண்ணை மட்டும் காண்பித்ததும் 'காஜல் அகர்வால்' என மில்லி செகன்டில் கண்டுபிடிக்கிறான். கூகுளை விட இந்த ஜெனரேஷன் கோகுல்கள் ஸ்பீடாய் இருக்கிறார்கள்.

கெட் டூ கெதர் நிகழ்வுகள், அலுவலக கொண்டாட்டம் போன்றவற்றிற்கு உபயோகப்படும். தேவைப்படுவோர் நான் வடிவமைத்த கேள்வி பதில்களை டவுன்லோட் செய்து இன்புறுக :  http://goo.gl/jDJ5E9


•••

நல்லா படிச்சு இனிமேலாச்சும் நான் ஒழுங்கா வளரனும் :)

வருடா வருடம் சென்னையில் நடக்கும் உலகின் மாபெரும் பேஸ்புக் பிரன்ட்ஸ் மீட் (அ) புத்தக திருவிழாவிற்கு  இம்முறை கடைசி நாள்தான் செல்ல முடிந்தது. அதிகமாய் நண்பர்களை காண முடியவில்லை. ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியும், அகநாழிகையிலும் கிழக்கிலும் சில புத்தகங்களை வாங்கினேன்.  கிழக்கு பதிப்பக பத்ரி பேஸ்புக்கில் டாப் செல்லிங் புத்தக லிஸ்ட்டில் 'ஆரோக்யம் தரும் சிறுதானிய சமையல்' புத்தகத்தை குறிப்பிட்டிருந்தார். ஸ்டாலில் அவரை பார்த்து, 'சார் அந்த புக் எங்க இருக்கு?' என கேட்டதும், அவரே எழுந்து சென்று எடுத்து கையில் தந்தார். வரவேற்பில் உட்கார்ந்திருந்த ஹரன் பிரசன்னாவிடம் அறிமுகம் செய்து கொண்டு மதிப்புரை டாட் காமிற்காக அவர்கள் அனுப்பி வைத்த புத்தகத்திற்கும் எனது நூல் அனுபவத்தை வெளியிட்டமைக்கும் நன்றி தெரிவித்தேன். அது என்ன மதிப்புரை மேட்டரு என்பவர்கள் அடுத்த பத்திக்கு வரவும்.

•••

மதிப்புரை.காம் தளத்தில் விமர்சனம் எழுத விருப்பமாயின் இந்த சுட்டியில் தரப்பட்டிருக்கும் புத்தக லிஸ்ட்டில் நாம் விரும்பியதை குறிப்பிட்டால் அதை இலவசமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். புத்தகம் கிடைத்த 20 நாட்களுக்குள் அதை குறித்த விமர்சனத்தை எழுதி அனுப்ப வேண்டும்.

'ஜப்பான்' புத்தகம் குறித்த விருப்பத்தை அனுப்பிவிட்டு மறுநாள் வீட்டில், "கொரியர்ல.." என ஆரம்பித்த பொழுது, "என்ன.. புக் வருமா..? காலையிலேயே வந்துடுச்சு..!" என தந்தார்கள். ஒரே நாளில் கொரியர் வந்திருந்தது. அதைப் படித்து நான் அனுப்பி வைத்த பார்வையையும் பின்னர் மதிப்புரை டாட் காமில் வெளியிட்டிருந்தார்கள். இதோ அதன் சுட்டி :
http://mathippurai.com/2014/11/21/japan/

•••

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து தெரிந்த நண்பர்களின் உதவி தேவைப்படுகிறது. 'அம்மா வீட்டுக்கு போய் நகை கொண்டா.. பணம் கொண்டா'ன்னு துன்புறுத்தும் கணவர்கள் மேல் வரதட்சணை கொடுமை சட்டத்தில் புகார் தருவது போல, "எப்பங்க பிளாட் வாங்க போறோம்..? எப்பங்க ஒரு வீடு கட்டுறது?" என தினம் டார்ச்சர் செய்யும் மனைவிகள் மேல் புகார் கொடுக்க ஏதாவது சட்ட வழிமுறை இருக்கிறதா என்கிற தகவல் வேண்டும். பிளீஸ் ஹெல்ப்!

Sunday, February 1, 2015

இசை


எஸ்.ஜே.சூர்யா  மூளையின் ரசிகன் நான். வாலி, குஷியில் அவரது பிரில்லியன்ஸ் வெகு சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நியூவில் ஒரு வித்யாசமான பேன்டஸி சப்ஜெக்டையும், அன்பே ஆருயிரேவில் நினைவலைகளை கதை சொன்ன தைரியமும் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது. அதோடு இப்போது இசையின் டிரைலரும் சேர்ந்துக்கொண்டு ஈர்ப்பை அதிகரிக்க, முதல் காட்சிக்கு சென்றிருந்தேன்.

வாலி, குஷியில் கடைபிடித்த இலைமறை தரத்தை ஏனோ நியூவிலும், அ.ஆவிலும் இழந்துவிட்டிருந்தார். பேமிலி ஆடியன்ஸ் முகம் சுளிக்கும் வண்ணம் காட்சிகளையும் வசனங்களையும் அதிகரித்திருந்தார். இசையில் அதேபோல் காட்சிகளும் வசனங்களும் இருக்கிறது. ஆனால் முகம் சுளிக்கும் வண்ணம் இல்லை.

வழக்கமான தனது பாணியில் கதையின் ஒன் லைனை சொல்லிவிட்டே இசையையும் ஆரம்பிக்கிறார் எஸ்.ஜே.! இம்முறை வாலி அளவிற்கு இல்லாவிட்டாலும்  அதைப் போன்ற ஒரு நல்ல ரொமான்டிக் திரில்லரை தந்திருக்கிறார்.

முதல் பாதியில் கதையை கொஞ்சமாக ஆரம்பித்துவிட்டு, நிறைய காதல், கொஞ்சம் காமெடி என அலுக்காமல் படம் நகர்கிறது. இரண்டாம் பாதியில் தொடர்ந்து சீரியஸான சஸ்பென்ஸ் காட்சிகள் அதிகரிக்கிறது. 'அட.. தெரிஞ்சதுதான' என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே எதிர்பாராத டிவிஸ்ட்டை வைத்து நிமிர்ந்து உட்கார செய்கிறார். 'முடிவு என்னாக போகிறோதோ' என நாம் நினைக்கும் போதே பெரிய ரிஸ்க் எடுத்து கதையின் அஸ்திவாரத்தையே மாற்றி ஒரு கிளைமேக்ஸை தந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

இரண்டாம் பாதியின் முக்கிய டிவிஸ்ட் வந்த பின்னர்தான் முதல் பாதியில் இடிக்கும் விஷயங்களை ஞாபகப்படுத்தி 'அட ஆமால்ல.. சரியாத்தான் இருக்கு' என பொருத்திப் பார்க்க முடிகிறது. இன்னும் சில இடிக்கும் லாஜிக்குகளை கிளைமேக்ஸில் ஒரு வசனத்தில் சரி செய்து கொள்கிறார்.
ஆனால் இவ்வளவு தரமான திரில்லரை கொடுத்துவிட்டு அதற்கு ஒரு தீர்வு தந்து முடித்திருந்தால் முழுதிருப்தியோடு இருந்திருக்கும். இருப்பினும் வித்யாசமான வகையாக எடுத்துக் கொண்டால் இந்த முடிவையும் என்னால் ரசிக்கவே முடிகிறது.

எஸ்.ஜே.சூர்யா நடிப்பிலும் முன்னேறியிருக்கிறார். ஒரே மாதிரியான மாடுலேஷேனில் ஒரே மாதிரியான வசனங்களை நியூவிலும் அ.ஆவிலும் அதிகம் வெளிப்படுத்தியிருந்தவர், இசையில் வெவ்வெறு உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்த துவங்கியிருக்கிறார்.

சத்யராஜுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரியான ரோல். இவர் இல்லையென்றால் படமே இல்லை. மனிதர் வாழ்ந்திருக்கிறார். அவருடன் மிகச்சரியான இணையாக கஞ்சா கருப்பு. இருவரது காட்சிகளும் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போக வெகுவாக உதவியிருக்கிறது.

குளிர்ச்சியான முகவாட்டுடன் சாவித்திரி. முதல் பாதியில் வெறும் கவர்ச்சி கதாநாயகியாக வந்தாலும் இரண்டாம் பாதியில் சொதப்பாத நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஒரு வடக்கத்திய நடிகை உதட்டசைவில் அக்கறை எடுத்து நடித்திருப்பதற்காகவே பாராட்டலாம்.

மருந்து கொடுக்கும் காட்சி, பாவ மன்னிப்பு காட்சி, பேக் தொலையும் காட்சி போன்ற சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இயக்குனராக அறிமுகமாகி, நடிகராக வெற்றி பெற்றவர்கள் பல பேர் உண்டு. அந்த வெற்றியுடன் நில்லாமல் அடுத்து இசையையும் கற்று அதையும் குறிப்பிடும்படியாக முதல் படத்திலேயே வெளிப்படுத்தி சாதித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு 'தன்னம்பிக்கை தளபதி' என்ற பட்டத்தை தாராளமாக தரலாம்.