எந்திரன் பாடல்களை கேட்கும்பொழுது, ஆனந்த விகடன் சிவாஜி பட விமர்சனத்தில், படத்தை ரஜினி ரசிகர்களை குறிவைத்து ஷங்கர் விட்டிருக்கும் ராக்கெட் என குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது. ரஜினியை வைத்து ஷங்கர் சிவாஜியில் பின்னியிருந்தார். தற்போது, தொழில்நுட்பம், மாபெரும் பிரம்மாண்டம் எல்லாம் சேர்ந்து வெகுவாக எதிர்பார்த்த எந்திரன் பாடல்கள் புதிய பரிமாணத்தில் நன்றாகவே வந்திருக்கிறது.
சமீபத்திய ரஜினி படங்களில் கண்டிப்பாக தமிழன், தமிழ் மண், தமிழ்நாடு என ஒரு வரி வரும். தங்க காசு கொடுத்தது தமிழல்லவா, உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன், என்னை வாழ வச்சது தமிழ் பால் என ரஜினி அந்த வரிகளை ரசிகர்களை நோக்கி பாடும்போது ஏற்கனவே அதிர்ந்து கொண்டிருக்கும் அரங்கம் இன்னும் கொஞ்சம் அதிக டெசிபல் அலறும். இதற்கு ஷங்கரும் விதிவிலக்கல்ல. சிவாஜியில் "அப்போ நான் பச்சைத்தமிழன் இப்போ நான் வெள்ளைத் தமிழன்" என லைட்டாய் உபயோகப்படுத்தியவர், இப்போது எந்திரனில் "ரோபோ ரோபோ பன் மொழிகள் கற்றாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா..." என ரோபோ பாடுவது போல வித்யாசமாய் அமைத்திருக்கிறார்.
இதுபோன்ற வார்த்தைகளும் டிரைலரில் ரோபோ செய்யும் மேஜிக்குகளும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ட்ரீட்டாக எந்திரன் இருக்கும் என உறுதி செய்கிறது. இந்த வரி வரும் புதிய மனிதா பாடல் ஒரு புதிய அனுபவம். அனைத்து பாடல்களிலுமே வரும் சிற்சில இசை துணுக்குகள் இந்த பாடலின் பின்னணியில் நிறையவே ஒலிக்கிறது. மெதுவாக ஆரம்பித்து எஸ்.பி.பியின் குரலில் ஏற்றம் அடையும் போது பாடல் நம்முள் உற்சாகத்தை விதைக்கிறது.
கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்.. அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை என்ற வார்த்தைகள் ரொம்பவும் ஆழமானது. ஹேட்ஸ் ஆஃப்....
அனைத்து பாடல்களிலும் அதி உற்சாகமான பாடல் கிளிமஞ்சாரோதான். கிழிகிறது டிரம்ஸ்.. துள்ளலோ துள்ளலாக ரஹ்மான் துள்ளியிருக்கிறார். அதிலும் குறிப்பாக பாடலில் அக்கக்கோ என்ன பின்னிக்கோடி வரும்போது பகவான் ஆசிரமத்தில் போதையேறிய பக்தர்கள் தலைகால் புரியாமல் ஆடுவதை போல தியேட்டரில் ரசிகர்கள் பேயாட்டம் போடப்போவது உறுதி. தயவு செய்து அமைதியாய் படம் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த பாடலின்போது எழுந்து தம் அடிக்க போய் விடுங்கள். டங் டிவிஸ்டர் போல வார்த்தைகளை வைத்து பெண் குரல் க்யூட்டாக விளையாடுகிறது.
அடுத்ததாய் காதல் அணுக்கள்.. உடம்பை லேசாக்கி பறக்க வைப்பது போன்ற பாடல். பாடல் முழுவதும் வரும் கிடார் இசை தலை முதல் கால் வரை பரவி லைட்டான போதையை தருகிறது. காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை என கிக் ஆக ஆரம்பிக்கும் குரல் லவ்லி.. டிரைலரில் அதை ரஜினி வாயசைத்துப் பார்த்த பின் பாடல் இப்பொழுதே மனதில் ஓட ஆரம்பித்துவிட்டது.
அரிமா அரிமா பாடலையும் அறிமுக பாடல் என சொல்லிவிட முடியாது. பாடல் முழுவதும் ஒரு கம்பீர பீட் வருகிறது. இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும்...இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டவன் நிலவு நிலவு தலை முட்டும்.. என ரஹ்மான் கரிஸ்மாட்டிக் குரலில் பாடுகிறார். இதை விட நிறைய போற்றி பாடடி பெண்ணேக்களை தற்போதைய ஹீரோக்களுக்கு கேட்டு காது பஞ்சர் ஆகி போனாலும் ரஜினிக்கு வரும் போது அதன் தரமே தனிதான். புகழ் பாடுவதை சூப்பர் ஸ்டாரே இரண்டே வரிகளில் சுருக்கி விட்டிருப்பதை மற்றவர்கள் கவனித்து கொஞ்சம் திருந்தலாம்.
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதே பாடல் மட்டும் எனக்கு அதிருப்தி.. பாடல் வரிகளை தவிர இசை அந்தளவிற்கு மனதில் ஒட்டவில்லை. மற்ற பாடல்களுடன் ஒப்பிடும்போது இந்த பாடல் ரொம்ப சுமார்தான்.
பூம் பூம் ரோபோ டா... ரோபோ டா.. ரோபா டா பாடலை கேட்கும்போதும், டிரைலரை பார்க்கும்போதும் திரையில் ரோபோ ரஜினியின் கலக்கல் காக்டெயில் அட்டகாசங்கள் இருக்கும் என நினைக்கிறேன். எப்படியும் இந்த பாடலுக்கே ஐந்து கிலோ பேப்பர் கிழிசல்கள் தேவைப்படும். தயவு செய்து நான் போகப்போகும் தியேட்டருக்கு வீக்கான ஹார்ட் உள்ளவர்கள் வராதீர்கள்.
