Friday, February 11, 2011

வலைமனை ஃபீலிங்ஸ் - 11 02 11






கண்ணா லட்டு தின்ன ஆசையா?


புத்தக கண்காட்சி நடைபெற்ற வாரத்தில் இடையே வைரஸ் காய்ச்சலில் படுத்து விட்டதால் பல புத்தகங்கள் வாங்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தது. நடப்பவை யாவும் நன்மைக்கே என்பதை போல நேற்று கிழக்கு பதிப்பகத்தின் அதிரடி கிளியரன்ஸ் புத்தக விற்பனை கண்காட்சிக்கு போயிருந்தேன். 'டேமேஜ் புக்ஸ்' என சீல் இடப்பட்டுள்ள புத்தகங்களை குறைந்த விலையில் விற்கிறார்கள். எனக்கு அலிபாபா குகைக்குள் நுழைந்து புதையலை பார்த்தது போல் இருந்தது. பல நாட்களாக வாங்க வேண்டும் என நினைத்திருந்த புத்தகங்களை எல்லாம் நினைத்து பார்க்க முடியாத விலை குறைவில் வாங்கினேன். மொத்தத்தில் ரூ.1,200 மதிப்புள்ள புத்தகங்களை வெறும் ரூ.240க்கே வாங்க முடிந்தது. சில புத்தகங்கள் புத்தம் புதியதாக இருக்கிறது. ஆனால் எதையும் டேமேஜ் என சொல்லிவிட முடியாத அளவில் நன்றாகத்தான் இருக்கிறது.   ரூ.90, ரூ.100, ரூ.200  மதிப்புள்ள புத்தகங்கள் எல்லாம் ரூ.10, ரூ.20, ரூ.30 போன்ற விலைகளில் கிடைக்கிறது. புத்தக பிரியர்கள் மிஸ் செய்யவே கூடாத கண்காட்சி. நடக்கும் இடம் டி.நகர் பேருந்து நிலையம் அருகே. சிவா விஷ்ணு ஆலயத்திற்கு நேர் எதிரே. எல்.ஆர்.சுவாமி ஹால், மைலாப்பூர் குளத்திற்கு அருகில்


'க'னா 'ஜெ'னா 'கே'னா


கேப்டனுக்கு இந்த தேர்தல் தலை தீபாவளி போலத்தான்.  புதுமாப்பிள்ளை ரேஞ்சுக்கு "தம்பி.. டீ இன்னும் வரல" என அலட்டலாக இருக்கிறார். ஆனால் 'க'னாவும் வேணாம்.  'ஜெ'னாவும் வேணாம் அதுக்கு பதில் தனியா நின்னு தவிதவிக்கிற 'கே' னாவுக்கு குத்துவோம் என ஒரு லட்சம் மக்களும் ஓட்டு குத்தியது இவரது 'தனி'த்தன்மைக்குதான்.  இனி இவர் இரண்டில் ஒன்றுடன் கூட்டணி சேர்ந்தால் உண்மையில் அது இவருக்கு சாதகமாக அமையுமா இல்லை பாதகமாக அமையுமா என்பது 2011 தேர்தலில் நடக்கப்போகும் பல ஆச்சரியங்களில் ஒன்று.


வேர்ல்டு கப்பு வருது ஓடுங்க ஓடுங்க

வேர்ல்டு கப் வருகிறது. ஆனால் முன்பெல்லாம் உள்ளே எழும் குதூகலமே இப்பொழுது இல்லை. வருடா வருடம் ஏதாவது ஒரு கப்பை வைத்து ஐ.சி.சி கல்லா கட்டுவதும் ஐ.சி.சியை விழுங்கும் ஐ.பி.எல்லின் அட்டகாசமும் கிரிக்கெட் மீதிருந்த மரியாதையை குறைத்துவிட்டன. இதில் இந்தியா தோற்றாலும் அடுத்த ஒரே வாரத்திற்குள் ஐ.பி.எல் வந்துவிடுவதால் தோனியின் கொடும்பாவி எரிப்போ, ஹர்பஜனின் வீடு மீது கல் விழும் சம்பவங்களோ நிகழ வாய்ப்பில்லை. 


 காதில் விழுந்தது

"சார் நாங்க ------- பேங்க்ல இருந்து பேசுறோம்... கிரெடிட் கார்டு ஆஃபர் பண்றோம்..."
  "மேடம்.. நான் ஆபிஸ்ல இருக்கேன் ஈவினிங் 7 மணிக்கு மேல கால் பண்ணுங்க..."
"சாரிங்க சார்.. 6 மணிக்கு பண்ணட்டுமா?"
  "அப்படியா உங்க மொபைல் நம்பர் கொடுங்க மேடம்.. நானே பண்றேன்..."
"இல்லை சார் மொபைல் நம்பர் பர்சனல்... இந்த ஆபிஸ் நம்பருக்கே பண்ணுங்க..."
"இது என்னங்க அநியாயமா இருக்கு... உங்க நம்பர் பர்சனல்னா அப்போ என் மொபைல் நம்பர் மட்டும் பப்ளிக்கா..  National Do Not Disturb Directory ல என் நம்பரை போட்டு வச்சும் எந்த தைரியத்துல போன் பண்றீங்க...?"


எஸ்.எம்.எஸ்

காதலி : "உங்களுக்கு தாடி வைச்சா நல்லா இருக்கும்"
காதலன் : "கழட்டி விட போறேன்னு நேரடியா சொல்லு"


மனைவி : "பக்கத்து வீட்ல பெரிய சண்டை நடக்குது.. நீங்க ஒரு தடவை அங்க போய் என்னன்னு பார்க்க கூடாதா?"
கணவன் : "நான் ஒரு தடவை அங்க போனதால வந்த சண்டைதான்டி அது!"


Tags : Valaimanai, Valamanai Blog, Valaimanai Blogspot, Sukumar Swaminathan, Sukumarswamin, Feelings, Day-to-day events, Diary, Arasiyal, Captain vijakanth, World CUp 2011 ICC, IPL SEason 4, Forward SMS Joke

Tuesday, February 8, 2011

இந்தியர்கள் சில ஆயிரம் பேர் செத்தால்தான் என்ன நஷ்டம்?




ந்த கம்பெனிக்காரர்களோ, 'இது மிக நவீன தொழில்நுட்பம். இந்தியர்களால் கற்றுக்கொள்ள முடியாது' என்றார்கள். 'இதன் செலவும் மிக அதிகம். முதலில்,இந்தியாவில் தடுப்பு மருந்து எல்லாம் எதற்கு? உங்கள் நாட்டில்தான் ஜனத்தொகை இப்போதே அளவுக்கு மீறி இருக்கிறதே? அதில் சில ஆயிரம் பேர் செத்தால்தான் என்ன நஷ்டம்?'

நாற்காலியை உதைத்துக்கொண்டு எழுந்தார்: 'எண்ணி இரண்டே வருஷம். நானே இந்த வாக்ஸினைத் தயாரித்துக் காட்டுகிறேன் பார். இந்தியாவில், இந்தியர்களால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதை இந்த உலகமே பார்க்கத்தான் போகிறது!'

தன்னந்தனி மனிதர் அவர்; அவருக்கோ, தடுப்பு ஊசிகள், மருந்துகள் பற்றி எதுவுமே தெரியாது. பேட்டரி, எலெக்ட்ரானிக்ஸ் போன்றவற்றில் புழங்கிக்கொண்டிருந்தவர் அவர். அந்த மனிதரால், ஹெபடைடிஸ் - பி தடுப்பு மருந்தின் விலை 750 லிருந்து வெறும் 50 ரூபாயாகக் குறைந்தது!

வரப்ரசாத் தன் கனவை நனவாக்கும் முயற்சியில் ஒரு சக்தி வாய்ந்த பன்னாட்டு கம்பெனியைப் புறமுதுகு காட்ட வைத்தார். உலக மார்க்கெட்டில் காமாலைத் தடுப்பு மருந்தின் விலையைச் சரிய வைத்தார்.




திருப்புமுனை - நூல் அனுபவம்


'இது சாதித்துக்காட்டிய 11 இந்திய நிறுவனங்களின் சாகசக் கதை.' என்கிற அறிமுகத்துடன் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் திருப்புமுனை புத்தகம் நான் சமீபத்தில் படித்த, முன்னேற, வெற்றி பெற விரும்பும் அனைவருக்கும் ஹை-ரேட்டிங்கில் பரிந்துரை செய்யும் அருமையான புத்தகம்.

ஜெய்ப்பூரில் தைனிக் பாஸ்கர் தொடங்கிய அன்று 1,72,347 பிரதிகள் விற்றது. முதலில் திட்டமிட்டதோ நம்பர் 2 இடம்தான்; ஆனால் பாஸ்கர் அதிரடியாக நம்பர் 1 இடத்தையே பிடித்துவிட்டது!

பல வடக்கிந்திய மாநிலங்களில் ஆரம்பித்த ஒரே நாளில் மற்ற பாரம்பரிய பத்திரிக்கை ஜாம்பவான்களை நிலைகுலைய வைத்த தைனிக் பாஸ்கர் செய்தித்தாளின் துள்ளல் கதையுடன் துவங்கும் புத்தகம், மொத்தம் இதே போன்ற வெவ்வேறான 11 பிரமிக்க வைக்கும் கதைகளை கூறி நம்மை நமது சிந்தனைகளை முழுவதுமாக மாற்றி மனதிற்கு உரம் ஏற்றுகிறது.


பல நிறுவனங்களிடம் ஒரு பயம் உண்டு. புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தினால், ஏற்கனவே மார்க்கெட்டில் நன்றாக விற்றுக்கொண்டிருக்கும் நம் பழைய தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயம்... திடீரென்று ஒரு நாள் வெளியிலிருந்து ஒருவர் நுழைவார். புத்தம் புதிதாக எதையோ கொண்டு வந்து, மொத்த மார்க்கெட்டையும் அள்ளிக்கொண்டு போய்விடுவார்.


எப்படி ஒரு ஐடியா, ஒரு கனவு, ஒரு குறிக்கோள் 'முடியாது' என உலகம் நினைத்து வந்த விஷயங்களை சுக்குநூறாக உடைக்கிறது என்பதை பல புத்தங்களில் படித்திருப்போம். ஆனால் இந்த புத்தகத்தின் தனித்தன்மை என்னவெனில் இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் எங்கோ அமெரிக்க ஆய்வு கூடத்திலோ, ஆஸ்திரேலிய நிறுவனத்திலோ நடந்தவை அல்ல. திருச்சியில், சென்னையில், சூரத்தில் என நமது மண்ணில் நமக்கு வெகு அருகாமையில் நடந்தவைகளாகும்.



மாபெரும் ராட்சசர்களைப் பண பலம், படை பலத்தால் வெல்ல முடியாது. ஆனால் ஐடியாக்களால் அடித்து வீழ்த்தவிட முடியும்! 


பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஒளி தருவதில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அரவிந்த் கண் மருத்துவமனை, மாபெரும் சந்தையில் 'சிக்'கென புகுந்து பெரும் நிறுவனங்களை தடுமாற வைத்த கவின் கேர், விவசாயகளிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஐடிசி ஐபிடி, இந்தியர்கள் உள்ளதை செய்வார்கள் புதியதாக உருவாக்க மாட்டார்கள் என்கிற கருத்தை உடைத்த பாஷ் இந்தியா, கடமை தவறாத காவல் அதிகாரிகளை திரையிலேயே பார்த்திருந்த நமக்கு நிஜத்திலும் ஒருவர் இருந்திருக்கிறார் என சொல்லும் திருச்சி காவல் துறை திரிபாதி, ஃபைனான்ஸ் துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய சோழா வாகன பைனான்ஸ், பற்பல சவால்களை எதிர்கொண்டு மெல்லிய கேஸ் உள்ளே வாட்சை உருவாக்கிய டைட்டன் எட்ஜ், தடுப்பு மருந்துகளில் உலகத்தையே தும்மல் போட வைத்த சாந்தா பயோடெக், பிளாக் நோய் தாக்கி நிலைகுலைந்த சூரத் நகராட்சியை முன்மாதிரியாக மாற்றிய ராவ், இன்வெர்ட்டர் துறையில் கலக்கிய சு-காம் என அனைத்தும் ஒவ்வொரு விதமான புரட்சிக்கதைகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறிக்கோள், பாதை, பயணம், சவால், வெற்றி என புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுது அறிவு கிடங்கில் உயரும் தகவல்களுடன் மனதில் எழும் தெம்பும் அதிகமாக இருக்கும்.


நம்மால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது; அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.

புத்தகத்தின் ஆசிரியர் - போரஸ் முன்ஷி. எடுத்துக்கொண்டுள்ள சிறப்பான பணிக்காகவும் படைத்துள்ள அருமையான புத்தகத்திற்காகவும் அவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.



நம்மில் பல பேருக்கு, ஏதோ கெட்டது நேர்ந்துவிட்டது என்பதால் அதிகம் பாதிப்பு கிடையாது. 'இனிமேல் நமக்கு இதுதான் நிரந்தரம்' என்று நினைத்துக்கொண்டு, கெட்டதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோமே, அதுதான் நம்மை முடக்கிப்போடுகிறது.


'தமிழில் : ராமன் ராஜா' என அட்டையில் குறிப்பிட்டிருக்காவிட்டால் இது ஒரு மொழி மாற்று புத்தகம் என அறிய வாய்ப்பே இல்லாத அளவிற்கு மொழி ஆளுமை கம்பீரமாக இருக்கிறது. கருத்துக்கள் துல்லியமாக அழகாக செதுக்கப்பட்டுள்ளதற்கு ராமன் ராஜா சிறப்பு பாராட்டுதல்களுக்குரியவர்.

புத்தகத்தன் வடிவமைப்பு அழகாக உள்ளது. கிரே நிறத்தில் ஆங்காங்கே கதையை நிறுத்தி ஆய்வு செய்யும் யுத்தி அழகு.


உங்களால் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும். உங்கள வேலை, உங்கள் நிறுவனம், தொழில்துறை அல்லது நாடு நகரத்தைக்கூட மாற்ற முடியும். இன்றைக்கு, இப்போது நீங்கள் செய்யும் உத்தியோகத்திலேயே மொத்த உலகத்தையும் மாற்ற முடியும்!

தொழில்முனைவோர், நிறுவன அதிகாரிகள், உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டுமல்லாது முன்னேற விரும்புகிறவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். ஒரு கட்டத்தில் இருக்கிற வேலையை விட்டுவிட்டு தொழில் துவங்கி விடாலாமா என்கிற அளவிற்கு உற்சாகம் கொடுத்து சிந்திக்க வைத்துவிடும் வல்லமை கொண்டது இது.

சின்ன வேலை, சின்னப்பொறுப்பு என்று எதுவும் கிடையாது. எந்த ஒரு வேலையையும் சரியான கோணத்தில அணுகினாலே போதும்;  நம்மால் மனித நாகரிகத்தையே மாற்ற முடியும்.

இதற்கு மேல் நான் என்ன சொன்னாலும் அது இந்த புத்தகத்திற்கு குறைவாகவே அமையும் என்பதால், வாங்கி படியுங்கள். ஜொலியுங்கள்! 

----------------------------------------

திருப்புமுனை 
ஆசிரியர் போரஸ் முன்ஷி
தமிழில் ராமன் ராஜா
விலை ரூ.150
வெளியீடு கிழக்கு பதிப்பகம்



குறிப்பு : நீல வண்ண எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களாகும்.


Monday, February 7, 2011

ஆஹா ஓஹோ யுத்தம் செய்


ஞ்சாதே' ஏற்படுத்திய பிரமிப்பே இன்னும் எனக்கு அடங்கவில்லை. அதற்குள்ளாக 'யுத்தம் செய்'. சமூகத்தில் ரகசியமாக நடக்கும் குற்றங்கள். இதனால் பாதிக்கப்படும் சாதாரண பெண்கள். இவ்வாறாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள, குறிப்பாக இளம்பெண்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறிதும் ஆபாசம் கலக்காமல் 'அஞ்சாதே'விற்கு அடுத்து சொல்லப்பட்டிருக்கும் கதை 'யுத்தம் செய்'. அவ்வகையில் இதைப்போன்ற படங்களை தொடர்ந்து அளிப்பதற்கு மிஷ்கினுக்கு ஒரு பெரிய ராயல் சல்யூட்.









கதை


இதைப்போன்ற சஸ்பென்ஸ் முடிச்சுக்கள் கொண்ட திரில்லர் கதையை சொல்வது மகா பாவம். படம் பார்க்கும் முன்னர் என்னதான் கதையை படிக்காமல் நான் தவிர்த்தாலும் படித்த விமர்சனங்களில் வந்த மற்ற ஒன்றிரண்டு வரிகளாலேயே சில முடிச்சுக்கள் படம் பார்க்கும்பொழுது புரிபட்டு போனதால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. ஸோ படம் பார்க்க செல்பவர்கள் தயவு செய்து எங்கும் கதையை படிக்க வேண்டாம்.



நடிப்பு

  முதன்முறையாக அமைதியான ஆக்ஷ்ன் ஹீரோ அவதாரத்தில் சேரன் தான் ஏற்ற பாத்திரத்தை கனகச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார். அந்த இடைவேளைக்கு முன்னர் வரும் சண்டையிலும் சரி அதற்கு முன்பாக மெதுவாக வீட்டை விட்டு கிளம்பி நடப்பதிலும் சரி நாம் தமிழ் திரையில் முன்னெப்போதும் பார்த்திராத காவல் அதிகாரியாக அமைதியாக சேரன் அசத்துகிறார்.  பஞ்ச் பேசி நாட்டைக் கெடுக்காத, கலர் கலராக வலம் வந்து கண்ணைக்கெடுக்காத ஹீரோ தேடுபவர்களுக்கு சேரன் நல்ல விடை.

  ஒய்.ஜிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரியான ரோல். முதன்முதலில் காவல் நிலையத்தில் குறுகி செய்தறியாது குடும்பத்துடன் நிற்கும் காட்சியில் வாவ்.. லவ்லி சார். அவரது மனைவியாக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் பின்னுகிறார். கிளைமேக்ஸ் காட்சியில் அவரது ஆளுமை முக்கியமானது.

  இன்ஸ்பெக்டர் இசக்கி முத்து உடனான சேரனின் முதல் விசாரணை காட்சியில் இசக்கியாக நடிதது இருப்பவரது பெர்ஃபார்மென்ஸ் அபாரம். வெறுப்பு, பயம், கோபத்தை அட்டகாசமாக பாடி லாங்குவேஜில் காட்டி அசத்துகிறார் மனிதர்.


  ஜுதாஸாக வரும் ஜெயப்பிரகாஷ் மற்றுமொரு ஹைலைட்.  முதல் காட்சியில் தூக்கத்திலிருந்து எழும்பி வருவது முதற்கொண்டு கடைசியில் மூச்சிறைத்துக்கொண்டே பேசுவது வரை வரும் இடங்களில் எல்லாம் கச்சிதமாக நடித்திருக்கிறார். 


  தீபா ஷா நாட் பேட். மாணிக்க விநாயகம் அருமையான பெர்பார்மன்ஸ். செல்வா இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாமோ என தோன்றுகிறது. இன்னும் பல பல பெயர் தெரியாதவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை உணர்ந்து செய்திருப்பதால் படம் பளிச்சிடுகிறது.



இசை


இசை அருமை என ஒரே ஒரு வரியில் சொல்லிவிட்டால் அது ரொம்பவும் கம்மி.
அட்டகாசமான பின்னணி இசை பாஸ். சி.டி.யில் Box Theme என வரும் இசை, படத்தில் டென்ஷனை ஏற்றுகிறது. Chaos Theme மெல்லிய சோகம் இழையோட புதிர் உணர்வினை மனதுக்குள் விளைவிக்கிறது. Hope Theme இசை வரும் காட்சி படத்தில் நெகிழ்ச்சியை ஊற்றுகிறது. 'கன்னித்தீவு பெண்ணா' பாடல் மட்டும் அதன் மூதாதையர்களான 'வாலமீனு' ('ல' வா இல்லை 'ள' வா பாஸ்?) மற்றும் 'கத்தாழ கண்ணால' அளவிற்கு ஜொலிக்காது என நினைக்கிறேன்.


நெகிழ்ச்சி

  கிளைமேக்ஸ் ரொம்பவும் நெகிழ்ச்சியானது, சேரனின் தங்கையை சுஜா என ஒய்.ஜியும், அவரது மனைவியும் அழைத்து கத்தியை உடனடியாக கீழே போடுவது மிஷ்கினின் டிரேட்மார்க் சென்டிமென்ட் பஞ்ச்.

  'அஞ்சாதே'வில் கடத்தப்பட்டு பின் காரில் இருந்து லுங்கியுடன் இறக்கி விடப்படும் இளம்பெண்ணை பார்த்த மாத்திரத்தில் நரேன் ஓடிச்செல்வாரே அந்த ஃபீல் இந்த படத்தின் கிளைமேக்சில் வருகிறது.

  படத்தின் இசை டாப் டக்கர். பிண்ணனி இசை சரியான இடங்களில் மிகச்சரியாக செட் ஆகியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

  "கொஞ்சம் அறிவை வச்சுகிட்டு நீங்களே இவ்வளவு பண்ண முடியும்னா நிறைய அறிவை வச்சுகிட்டு நாங்க எவ்வளோ பண்ண முடியும்" என ஜெயப்பிரகாஷ் சொல்லும் இடம் உட்பட வசனமும் படத்தில் டாப்.


விஷுவல்ஸ்


  காட்சியமைப்புகள் பல இடங்களில் ரசிக்க வைக்கின்றன. இன்ஸ்பெக்டரை சேரன் விசாரிக்கையில் சட்டென ஒய்.ஜி புகார் அளிக்க வரும் காட்சியை பிளாஷ்பேக்கில் மாற்றி டக்கென டீ கொண்டு வரும் நிகழ்காலத்துக்கு திரும்பி வருவது லவ்லி விஷுவல்.


  அந்த சிறுமி ஜன்னலோரம் நின்று பழைய காட்சியை நினைவுபடுத்தி சட்டென ஆமா சார் இன்னொருத்தர் ஆட்டோவில் இருந்தார் என சொல்வதும் அருமை.


  அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனை இருளில் காண்பித்து கரண்ட் கட் ஆகி சட்டென பகல் பொழுதிற்கு மாறுவது அருமை.


  கடைசியில் அந்த சிறுவன் விமான நிலைய எஸ்கலேட்டரில் ஏறி விடியலை நோக்கி செல்வது போன்ற காட்சியமைப்பில் இத்தனை சஸ்பென்ஸ், இத்தனை முடிச்சுக்களையும் அவிழ்த்து நெகிழ்ச்சியான தீர்வை சொல்லும் இடத்திற்கு ஏற்றாற்போல் மனதிற்கு இதமாய் அமைந்துள்ளது.


 கதையின் முக்கிய முடிச்சான பீப் ஷோ நிகழ்வுகளை மற்ற எந்த சாதாரண கமர்ஷியல் தமிழ் சினிமாவை விடவும் டீசன்டாக காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.



நெருடல்

  என்னதான் பெண்ணுக்காக பழி வாங்கினாலும் குடும்பத்தினர் அனைவரும் புரஃபஷனல் கில்லர் போல் கருப்பு உடையணிவது கொஞ்சம் இடிக்கிறது.

  முதல் பாதியில் ஏகப்பட்ட பெயர்கள், ஏகப்பட்ட முடிச்சுக்கள், விசாரணைகள் என கொஞ்சம் கவனம் தப்பிவிட்டாலும் குழப்பிவிடக்கூடிய விதத்தில் படம் அமைந்திருக்கிறது. 

  அவ்வளவு நாள் தேடிய ங்கை கிடைக்க வாய்ப்பு வருகிறது என்றாலும் உயர் அதிகாரி சொல்லிவிட்டார் என்பதற்காக எதுவும் செய்யாமல் சேரன் வீட்டில் போய் அமைதியாய் உட்காருவது இடிக்கிறது.

ஆனாலும் எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்காகவும் தரப்பட்டுள்ள நல்ல படைப்பிற்காகவும் இதற்கு மேல் இங்கு எதையும் பட்டியிலிட விரும்பவில்லை.


__________________________

ஆறு பாட்டு, ஏழு ஃபைட்டு என டார்ச்சர் செய்யும் தமிழ் சினிமாவில் கொடுத்த காசிற்கு எரிச்சல் படாமல் ஆத்ம திருப்தியுடன் ரசிகன் வெளியில் வரும் படங்களில் யுத்தம் செய் முக்கிய இடம் பிடிக்கும்.



Monday, January 31, 2011

மறைந்தது நாகேஷ் அல்ல, தேசிய விருதுகளின் மரியாதை




நான் விரும்பும் நாகேஷ் அவர்களுக்கு இன்று (31.01.2011) இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி...  
















Tuesday, January 25, 2011

ஃபீலிங்ஸ் 25 01 11


டந்த பதிவில் நித்தியை கிண்டலடித்ததாலோ என்னவோ ஒரு வைரஸ் அஸ்திரம் வந்து தாக்கி.. ஒரு வார காலம் வைரஸ் பீவரால் ஹாஸ்பிட்டலில் சமாதி நிலை அடைய வேண்டியதாகி விட்டது. சீ சீ.. நீங்க நினைக்கிற மாதிரி நித்தி சமாதி நிலை அல்ல. (ஆஹா மறுபடி கலாய்ச்சிட்டேனே.. சாமி மன்னிக்கனும்...)

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பா.ராகவன் அவர்கள் எழுதிய காஷ்மீரை முழுவதும் படித்து முடித்து விட்டேன்.

இந்த உடல்நிலை கோளாறால் பல பணிகள் முடங்கிவிட்டன.  ஆயினும் வந்த உடன் முதல்வேலையாக செய்ய வேண்டியிருந்த பேனர்களை செய்து அனைவருக்கும் அனுப்பிவிட்டேன். யாருக்கேனும் கிடைக்கவில்லையென்றால்  எனக்கு அடுத்த ஜுரம் வருவதற்குள் பின்னூட்டமோ மெயிலோ தட்டி விடவும்.


ர்டெல்லின் புதிய லோகோவை பார்க்கும்பொழுதெல்லாம் இனம்புரியாத எரிச்சல் ஏற்படுகிறது. ஏனென்று தெரியவில்லை.  அதன் பழைய லோகோ  கம்பீரமாகவும் இது ஏதோ காமெடி பீஸ் போலவும் எனக்கு தோன்றுகிறது. (அது சரி ராசா ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் மாட்டுனதுக்கு அப்புறம் லோகோவை மாத்துனாங்களே.. அதுல ஏதாவது நுண்ணரசியல் இருக்கா பாஸு?)


புத்தக கண்காட்சி குறித்த இந்த வார ஆனந்த விகடன் கலாய்த்தல் செம ரகளை. பதிவர்கள் சந்தித்துக்கொள்கின்றனர், அதை போட்டோ எடுத்து பெரிய விழா போல் மறுநாள் பிளாக்கில் போட்டுக்கொள்கின்றனர் என்கிற ரேஞ்சுக்கு நம்மை கலாய்த்து நமக்கு மாபெரும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். ஹி...ஹி.. ரொம்ப தேங்க்ஸ் பாஸ்...


பெங்களூருவிலிருந்து என்.சொக்கன் சார் வருகிறார் என்ற உடன் அன்றே புத்தக கண்காட்சி சென்று அவரை பார்த்தேன். இனிமையாக பழகுகிறார். நிறைய பேசினோம். போட்டோ கமெண்ட்ஸ் குறித்து அவர் பாராட்டி ஊக்கப்படுத்தியது எனது வாழ்நாளில் நான் மறக்க முடியாதது.  அவருடனான சந்திப்பு மிகவும் இனிமையாக அமைந்தது.





லொயோலா கல்லூரி விஸ்காம் துறையில் அனிமேஷன் கோர்ஸ் எடுக்கிறார்கள். அங்கு எனது இளநிலை கணித படிப்பை படித்த காலத்தில் விஸ்காம் துறையை பார்க்கும பொழுதெல்லாம் பொறாமையாக இருக்கும். லொயோலா விஸ்காமில் படிக்காமல் போய்விட்டோமே என்கிற குறை ரொம்ப நாளாகவே இருந்தது. முடிந்தால் தற்போது சேர வேண்டும் என்றிருக்கிறேன்.

விபரங்களுக்கு : 9566100228



காசி தியேட்டரில் ஆண்கள் டாய்லெட்டில் ஒரு காமெரா சுத்தி சுத்தி படம் பிடிக்கிறது. "படம் பார்க்க வர்றவங்களை படம் பிடிச்சு நெட்ல விட்ராதீங்கப்பா..." என கமெண்ட் அடித்தபடியே அதைப் பார்த்து பார்த்து சிரித்தோம்.  மானேஜரைப் பார்த்து முறையிட்டாலே ஆச்சு என அடம்பிடித்தான் நண்பன். 

"அட நீ வேற.. இதுக்கெல்லாம் அவரை போய் கேட்டுக்கிட்டு.. இந்த மாதிரி வீணா போன விஷயத்துக்காகத்தான நான் பிளாக்கு வச்சிருக்கேன்,.. நாளைக்கு நியாயம் கேட்டுடலாம் விடு" என அவனை சமாதானப்படுத்தியபோது சந்தானம் போல முறைத்தான்.  (மானேஜர் சார்.. அப்படியே இன்டர்வெல்ல வாங்குன கார்ன் பப்ஸ்ல எண்ணெய் கசடு அடிச்சது.. பேலன்ஸ் கொடுத்த இருபது ரூபாய் நோட்டு கிழிஞ்சு இருந்ததுங்க... இதுக்கும் சேர்த்து ஏதாவது நியாயம் சொல்லுங்க)




Thursday, January 13, 2011

ஒளியிழந்த புத்தக கண்காட்சி



புத்தக கண்காட்சி குறித்து பல பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. பல கட்டுரைகள், பல ஆச்சரியங்கள், பல அனுபவங்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக புத்தக கண்காட்சியில் கம்பீரமாய் வீற்றிருந்த ஒரு அரங்கம் இந்த கண்காட்சியில் இல்லை. இது குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. குறைந்த பட்சம், 'காலையில் இருந்து ஒரு மார்கெட்டிங் கால் கூட வரலையே' என செல்போனை எடுத்து வேதனையுடன் பார்க்கும் அளவிற்கு கூட யாரும் இந்த இழப்பை உணர்ந்ததாக தெரியவில்லை. பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஒரு சக பதிப்பகத்துக்கு செய்யும் மரியாதை இதுதானா? கண்காட்சிக்கு வரும் வாசகர்கள் கூட இதை கவனித்ததாக தெரியவில்லை. யாருக்கும் மனசாட்சியே இல்லையா...?


இதற்கு முன்பான பல புத்தக கண்காட்சிகளில் அந்த அரங்கத்தை பார்த்திருக்கிறேன். மற்ற எந்த ஸ்டாலிலும் கிடைக்கப்பெறாத அரிய வகை ஆன்ம பேரின்ப உணர்வு அந்த ஸ்டாலில் மட்டுமே நிறைந்திருக்கும். ஆம்வே பேஸ்ட் போட்டு விளக்கியோ இல்லை ஏதோ ஒரு கிராபிக் டிசைனரின் ஆர்வத்தின் பயனாகவோ விளைந்த முத்து போன்ற பற்களுடன் பளிச்சென்று சிரித்தபடி கும்மென்று இருப்பார் புன்னகை தளபதி நித்தி. திடீரென பரண் மேல் இருந்து 'ச்சுச் ச்சுச் சூ..' என கத்தும் பல்லியை "என்னடா ராஜா... பசிக்குதா...?" என அன்போடு பார்ப்பது போல் அவரது விழிகள் இடது பக்கம் உயரத்தில் நிலைத்திருப்பது போன்ற திரு உருவம் தாங்கிய க்ளாஸி பிரிண்ட் பேனர்கள் வண்ணமயமாக அந்த அரங்கம் முழுவதும் நிறைந்திருக்கும். பல பேனர்களில் அவரது இதழில் ஐந்து எம்.எல் அளவில் சிறிய அம்சான புன்னகை நிறைந்திருக்கும். இரண்டு லிட்டர் அளவில் ஆழி பேரலை போன்ற சிரிப்புடனான அவரது படங்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே தென்படும். அவ்வகை படத்தை காண்பதரிது. அதை காணும் பேறு பெற்றிடாதவர்கள் அடுத்த ஜென்மத்திலும் மனிதனாய் அவதரித்து தொடரும் கர்ம வினையை அனுபவிக்க நேரலாம் என்பதால் நெட்டில் தேடியாவது பார்த்துவிட்டு படிப்பதை தொடரவும்.

 'மானே தேனே பொன்மானே' எல்லாம் போட்டுக்கொள்வது போல் பேனர்களுக்கு இடையே அரங்கத்தில் ஆங்காங்கே புத்தகங்களும் வைக்கப்பட்டிருக்கும். விருப்பப்படுகிறவர்கள் வாங்கிச் செல்லலாம். விருப்பப்படாதவர்கள்? பொறுமை வேண்டும் அன்பர்களே வாழ்க்கையில்.. வருகிறேன் இருங்கள். வெளியே ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் சிறிய மசாலா வேர்க்கடலையை வாங்கி கொறித்துக்கொண்டே எந்த புத்தகமும் வாங்கும் நோக்கமில்லாமல் மாலுமி இல்லாத கப்பல் போல் அங்கும் இங்கும் அலைந்து இளம் பெண்களை சைட் அடித்துக்கொண்டு கண்காட்சியில் திரியும் அப்பாவி இளைஞர்கள் சிலர் காற்று வேகத்தில் நமது கடைப்பக்கமும் ஒதுங்குவர். அவர்களுக்கு மோட்சம் கொடுக்கும் விதத்தில் காவி உடை அணிந்த கம்பேனியின் கொள்கை விளக்க செயலாளர்கள் சிக்கிய ஆட்டை கப்பென பிடித்து அய்யனின் அருட் பராக்கிரமங்களை விளக்கி பீடத்திலிருந்து வெளிவரும் மாதாந்திரியோ வாராந்திரியோ ஏதோ ஒரு திரிக்கு சந்தா கட்ட சொல்லி மனதில் ஏதாவது தெய்வீக மாற்றத்தினை ஏற்படுத்துவார்கள்.

 அப்படி ஒரு வேர்க்கடலை பாக்கெட்டுடன் அடியேன் அய்யனின் அடியார்களிடம் சிக்கிய ஒரு புத்தக கண்காட்சியில்தான் அந்த அனைத்துமான பேரொளியின் பராக்கிரமங்களை முதன்முதலாக நான் அறியும் பாக்கியம் பெற்றேன். பல நாட்களாக ஞானத்தை நோக்கிய உள்மன தேடுதலும் கூட சேர்ந்து கும்மியடித்து தூண்டி விடவே அன்று நூறு ரூபாய்க்கு 'தியானம்' என்கிற எழுத்தாளர் நித்தியின் சித்தி பெற்ற அந்த புத்தகத்தை வாங்கினேன்.

 பாதியளவே படித்திருந்த நிலையில் என்னை விட அதிக தெய்வாம்சம் கொண்ட நண்பன் ஒருவன் அந்த புத்தகத்தை என்னிடமிருந்து ஆட்டையை போட்டு அருளினான். புத்தகத்தில் ஒரே ஒரு விஷயம் இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. உடலில் தியானத்தின் தன்மையை அதிகரிக்கவும், ஆத்ம சுத்தத்தை எப்போதும் வைத்திருக்கவும் உதவும் ஒரு சாலட். தயிரில் புடலங்காய், பாகற்காய் போன்றவைகளை ஊறவைத்து உண்ண சொன்ன டெரர்ரான ரெசிப்பி அது. படித்த போதே குமட்டிக்கொண்டு வந்த வகையில் அந்த புத்தகமானது சிறு வயதில் உடன் படித்த தனலட்சுமி என்னுடன் 'கா' விட்ட நிகழ்வு பதிவாகியிருக்கும் மூளையின் ஏதோ ஒரு மெமரி செல்லின் அருகிலேயோ அல்லது தூரத்திலேயோ காலியாக இருந்த மற்றொரு செல்லில் தீர்க்கமாக பதிவாகி இருக்கிறது.

நிற்க.

சன் டி.வி. கடந்த வருடம் எடுத்த எந்திரன் படத்திற்கு அடுத்தபடியாக பிரபஞ்சமெங்கும் பிரசித்தி பெற்ற 'நித்தியின் சித்து விளையாட்டு' வீடியோ உலகெங்கிலும் ஹிட் ஆகி கொண்டிருந்த தருணத்தில் நான் வழக்கமாக புத்தகம் வாங்கும் ரயிலடி புத்தக கடை நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். எப்பொழுதும் அங்கு இருக்கும் நித்தியின் தியான புத்தகங்கள் அன்று இல்லை.

"என்ன பாஸ்.. வீடியோ வெளியானதுக்கு அப்புறம் புக்கை எல்லாம் எடுத்து ஒளிச்சு வச்சிட்டீங்க போல.." என்றேன்.

 "அட நீங்க வேற.. வீடியோ வந்த உடனே எல்லா புக்கும் ஒரே வாரத்துல வித்து தீர்ந்து போச்சுங்க... அவரோட புக்கு இருக்கானு வந்து கேட்டுக்கிட்டே இருக்காங்க" என்று ஆச்சரிய தகவல் அளித்தார்.

சாமி வீடியோவில் வந்தது போல் 'சமாதி நிலை' குறித்து புத்தகங்களில் விளக்கி இருக்கக்கூடும் அது குறித்து அறிந்து கொள்ளவேண்டும் என்கிற அறியாமையில் வாங்கி சென்றிருப்பார்களோ என்னவோ. இதனால்தான் எனக்கு இம்முறை கண்காட்சியில் அந்த அரங்கம் அமைக்கப்பெற்றிருந்தால் எந்த வருடத்தை விடவும் 'கூட்டம் சும்மா கும்மியிருக்குமோ' என தோன்றுகிறது.

Monday, January 10, 2011

100வது நாள் எந்திரனும் பிராயச்சித்தமாய் புத்தக கண்காட்சியும்




தில்லு முல்லு படத்தில் தேங்காய் சீனிவாசனை ஏமாற்றிவிட்டு ஃபுட்பால் ஸ்டேடியத்தில் ரஜினி செம தெனாவெட்டாய் ஒரு டான்ஸ் ஆடுவாரே.. அதே போன்ற தெனாவட்டான ஆட்டத்தை கடந்த சனிக்கிழமை அன்று ஆல்பர்ட் தியேட்டரில் போட்டோம். இதன்மூலம் எனது சிறுவயது பெருங்கனவு நிறைவேறியிருக்கிறது.

கலெக்டரா டாக்டரா என்ற கன்ஃபியூஷனிலேயே பல சக மாணவர்கள் காலத்தை கழித்துகொண்டிருந்ததை பார்த்து அது போன்ற அல்ப சபலங்களுக்கு மனதில் இடம் தராமல் கட்டுப்பாடுடன் இது போன்ற உயர்ந்த கனவுகளை மட்டுமே விதைத்திருந்ததை எண்ணி சிறு வயதிலேயே நமக்கு எவ்வளவு ஞானம் இருந்திருக்கிறது என தற்போது பெருமைப்பட முடிகிறது.

அதிகபட்சம் தியேட்டரில் பேப்பர் கிழித்து போட்டிருக்கிறேன். ரெண்டே ரெண்டு வரிசைக்கு மட்டும் கேட்கும் வால்யூமில் கமெண்ட் அடித்திருக்கிறேன். ஆனால் தியேட்டரில் தில்லுமுல்லு ரஜினி போன்றதொரு தெனாவட்டான கலாட்டா மட்டும் நெடுநாளைய கனவாகவே இருந்தது. எங்கே அது கனவாகவே போய்விடுவோமோ என்கிற அச்சத்தில் காலம் சென்றுகொண்டிருந்தபோதுதான் 
என்னுடைய இந்த தீராத தாகத்தினை அறிந்திருந்த ஜுனியர் பேட்ச் நண்பன் ஒருவன் எந்திரன் 100வது நாளுக்கு அழைத்தான்.

நானும் என்னுடைய சில நண்பர்களை தேத்திக்கொண்டு கடந்த சனிக்கிழமை ஆல்பர்ட் தியேட்டர் சென்றோம். படம் ஆரம்பிக்கும் முன்னரே தியேட்டர் வளாகத்தில் ரகளை துவங்கியது. நண்பனின் நண்பர்கள் ரஜினி பாடல்களை ஒலிக்கச்செய்து கெட்ட ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனர்.

படம் ஆரம்பிக்க, ஒரு மூட்டை நிறைய பூக்களை கொண்டு வந்திருந்த அவர்கள்.. அள்ளி அள்ளி வீசத்துவங்கினர்.   100வது நாள் என தெரியாமல் 'எந்திரன் தியேட்டர் ஈயோடும்' என்ற நம்பிக்கையில் வந்திருந்த ஒரு அப்பாவி கார்னர் சீட் ஜோடிகள், டூயட்டில் தேவதைகள் பூ தூவாமால் என்னடா இது சாத்தான்கள் சத்தம் கேட்கிறதே என அரண்டு போய் 'போச்சுடா இன்னைக்கு' என்கிற ரீதியில் நிமிர்ந்து உட்கார்ந்ததை பார்க்க பாவமாகத்தான் இருந்தது.

படம் முடியும் வரை திரை முன் இருந்த சிறிய மேடையில் ஏறி நண்பர்கள் ஆடிக்கொண்டே இருந்தனர். இரண்டு பாடல்கள் ரிப்பீட் செய்யப்பட்டது. கிளிமஞ்சாரோ பாடலுக்கு ஐஸ்வர்யா போல ஆடியும், ரஜினி ரொம்பவும் பயிற்சி செய்து ஆடிய கஷ்டமான தொடை தட்டும் டான்ஸை ஆடிய படியே டிரெய்ன் விட்டும் என தியேட்டர் அல்லோகல்லப்பட்டது.

எனக்கு அன்று மெட்ராஸ்-ஐ வேறு. இருந்தாலும் கனவு நிறைவேறும் நேரம் கண் வலி போன்ற தடைகள் வந்தாலும் 'தோழா வானம் தூரம் இல்லை' என்கிற 'கலைஞரின் இளைஞன்' பாடல் மண்டைக்குள் மைக் பிடிக்க கையில் கொண்டு சென்றிருந்த ஐ டிராப்பினை ரெண்டு சொட்டு விட்டுகொண்டு மேடையேறினேன்.  வாவ் .. வாழ்க்கையில் இனி எத்தனை மேடை ஏறினாலும் என்னதான் சாதனை செய்தாலும் இதற்கு ஈடாகாது பாஸ்.. பிறவிப்பயனை அடைந்துவிட்டேன்.






என்னதான் நெடுநாளைய கனவாக இருந்தாலும் அதுக்காக தியேட்டரில் ஏறி டான்ஸ் ஆடுவது எல்லாம் தப்பான விஷயமோ என மனசு உறுத்த,  எந்திரனுக்கு வந்த இரண்டு நண்பர்களை ஆடு கழுத்தில் கயிறு போடுகிறார் போல் அவர்கள்  ஃபீல் பண்ணியும் விடாது, போட்ட ஆட்டத்துக்கு பிராயச்சித்தமாக புத்தக கண்காட்சிக்கு கூட்டி சென்றேன்.

நேரமாகி விட்டபடியால் நேராக கிழக்கு சென்று பா.ராகவன் அவர்களின் காஷ்மீர்,  என்.சொக்கன் அவர்களின் மகாத்மா காந்தி கொலை வழக்கு என இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். பக்கத்தில் பிரபலமான கிழக்கு சந்தில் பா.ரா. அவர்கள் நண்பர்கள் புடை சூழ அமர்ந்திருந்தார். அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டேன். அருகில் சென்று பேச ஆசை வந்தாலும் கண் வலியை வைத்துக்கொண்டு பேசினால் சரியாக இருக்காது என கிளம்பினேன்.

அந்த இரவிலும் கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு அலைந்ததனால் 'என்னடா இவன் மிஷ்கின் போல ஒரு டைப்பா சுத்துறானே.. வாங்குற புத்தகத்தை  படிப்பானா' என்கிற சந்தேகத்துடன் எல்லோரும் பார்ப்பது போலவே எனக்கு இருந்தது.

புத்தக கண்காட்சிக்கு கூட வர வர இணையத்தால் எதிர்பார்ப்பு எகிறுகிறது. கிழக்கின் விளம்பரத்தால் எப்படி நேராக சென்று காஷ்மீரையும், மகாத்மாவையும் வாங்கினேனோ அதேபோல கார்க்கியின் டிவிட்டுகளால் லிச்சி ஜுஸை நோக்கிய தேடல் துவங்கியது.




வேகமாக நடந்துகொண்டிருந்த போது "யோவ் கண்ணாடியை கழட்டுய்யா" என அதிகார குரல் ஒலிக்க சட்டென்று நின்று பார்த்தால் அண்ணன் ஜாக்கி சேகர். அவருடன் பதிவர் மயில்ராவணன். முதுகில் ஒரு பெரிய பை. அது நிறைய புத்தகம் வாங்கியிருக்கிறாராம்.

"நான் கண்ணாடியை கழட்டிடுவேன்.. மெட்ராஸ் ஐ பராவாயில்லையா" என்ற உடன், "சரி சரி" என சிரித்தார்.  புத்தக கண்காட்சிக்கு வந்துவிட்டு புத்தகத்தை பார்க்கவில்லையென்றாலும் பதிவர்களை பார்க்காமல் போவதா என ஒலித்துக் கொண்டிருந்த மனசாட்சியின் குரல் பின்னர்தான் ஓய்ந்தது. அதேபோல் பதிவர்கள் கம் எழுத்தாளர்கள் கேபிள் சங்கர் மற்றும் சுரேகா அவர்களையும் பார்க்க முடிந்தது.



அலுவலகம் வெகு அருகாமையில் என்பதால் இன்னும் இந்த வாரம் முழுக்க வந்து விடுவேன். வாங்க வேண்டியவை நிறைய இருக்கிறது.

கண்காட்சியில் பார்த்தவரையில் நூறு ரூபாய்க்கு 200 பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் கிடைக்கிறது. இந்த கணக்கின்படி பத்து ருபாய்ககு 20 பக்கங்கள். ஆனால் பைக் டோக்கனுக்கே பத்து ரூபாய் வாங்குகிறார்கள். ஒரேயொரு பக்கம். அதையும் போகும்போது வாங்கி கிழிக்கிறார்கள்.  ஏம்பா இதுல மட்டும் பத்து பர்சன்ட் டிஸ்கவுண்ட் இல்லையா என கேட்டால், டோக்கன் கொடுத்த பேரிளம் பையன் சிரிக்கிறான்!

என்னவோ போங்கப்பா.. நாங்களும் கேட்டுக்கிட்டே இருக்கோம். நீங்களும் சிரிச்சிக்கிட்டே இருக்கீங்க!


Sunday, December 26, 2010

எவ்ரிடே இஸ் சண்டே - 2



குறைகள், கவலைகள், பிரச்சினைகள் வாழ்க்கையில் இருந்தாலும், ரசனை ரசிப்புக்கள் என்கிற உணர்வுகள் அவைகளை எளிதாக கடந்து செல்ல உதவும் வரங்கள். போனா போகுதுன்னு நம்ம பிளாக்கை படிக்க வருபவர்களை பெர்சனல் விஷயங்களை சொல்லி இம்சிக்க கூடாது என நீண்ட நாட்களாய் ஒரு கொள்கை வைத்திருந்தேன்.  ஆனால் ஞாயிறுகளில் அதிகம் பேர் படிக்கமாட்டாங்களாமே.. அதனால அதிக சேதாராம் இருக்காது என்கிற நம்பிக்கையோடு.... வாழ்வை ரசிப்பதை தொடர்கிறேன்.


சினிமா




■   இணையம் தந்த அருட்பெரும் கொடைகளில் ஒன்று, பிற மொழியில் வெளிவந்துள்ள நல்ல திரைப்படங்கள் பற்றி தெரிந்து கொள்ள வழிசெய்வது. தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் திரைப்படத்தை இந்த விமர்சனம் படித்து ஒரு சனிக்கிழமை இரவு விடிய விடிய இரண்டு முறை பார்த்தேன். மனதை கனமாகவும் லேசாகவும் ஆக்கக்கூடிய திரைப்படம். உணர்வுபூர்வமாக செல்லும் கதை நிறையவே என்னை பாதித்தது. பாதித்தது என்பதை விட முடிவில் இனம்புரியாத உற்காகம் கொடுத்தது என்று கூட சொல்லலாம். வசனங்களும் முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பும் வெகு அருமையாக இருக்கும். ரசித்து ரசித்து நான் சமீபத்தில் பார்த்த ஆங்கிலப் படம் இதுதான். ஆண்டி டூப்ரென்ஸ் என்கிற கதாநாயகன் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் தருணம். வாழ்க்கையின் பெரும் வரம் சுதந்திரம் என்பதையும் அந்த சுதந்திரம் தரும் ஆனந்தத்தையும் அந்த காட்சியில் நாம் உணர முடியும். மிஸ் பண்ணக்கூடாத படம்!


 பயணம்








■    பொறுமையாய் வயல் வெளிகள் சூழ்ந்த நெடுஞ்சாலையில் பச்சை வாசனை காற்றை சுவாசித்தபடி பைக்கில் நெடுந்தூரம் செல்வது வெகு ரசனையான பயண அனுபவம். உயிர் நண்பன் கிருஷ்ணாவின் திருமணத்திற்காக கடைசி நிமிடம் வரை பேனர் டிசைன், வாழ்த்து அட்டை தயாரிப்பு என நேரம் சென்றுவிட்டதால் வேறு வழியின்றி கடைசி நிமிடத்தில் நான்கு நண்பர்கள், இரண்டு பைக்குகளில் கிளம்பினோம். சென்னையிலிருந்து ஆரணி. நான்கு மணி நேர பயணம். வேகம் காட்டாமல் ஆட்டம் போடாமல் நிதானமாய் சாலைகளை ரசித்துக்கொண்டே சென்றோம். ஆங்காங்கே நிறுத்தி புகைப்படங்கள் எடுத்தும் வழியில் கிடைத்தவற்றை சுவைத்தும் என நினைவில் நிற்கும் பயணம். 


வரைகலை





■    மற்ற மாதங்களில் எப்படி சோர்வுற்று இருந்தாலும் மார்கழியில் அம்மாவிற்கு இருபது வயது குறைந்துவிடுவது சிறுவயது முதலே எனக்கு ஆச்சரியமான விஷயம். கலர் பொடிகள் வாங்கி வைத்து கலக்கி, பேப்பரில் அன்றைய கோலத்தை வரைந்து பார்த்து, தெருவில் வண்ணச் சேர்க்கையுடன் அவர் இறங்கி கோலமிடும் போது, வேறு எதைப்பற்றியும் சிந்திக்க மாட்டார். அவ்வப்போது பல கோணங்களில் மாறி மாறி நின்று பார்த்து கோலம் சரியாக வருகிறதா என செக் செய்து கொள்வார். சிறு வயதில் ஆர்வத்தில் கெஞ்சி கெஞ்சி கேட்டு கோலப்பொடி வாங்கி வண்ணம் சேர்க்க தெரியாமல் கடும் திட்டு வாங்கிய அனுபவங்கள் ஏராளமாய் உண்டு. 

அம்மா தரையில் கோலம் போடுவதும் இன்று கணிணியில் நான் தொழில் நிமித்தமாய் டிசைனிங் செய்வதும் என இரண்டுமே ஒன்று என்றாலும் ரசனையான ஈடுபாடு என வரும்போது இன்னும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாய் இருப்பதாகவே நினைக்கிறேன்.




"என்னடா ஏதோ கிராபிக் டிசைனர்னு சொல்லிக்கிற ஒரு மாடு வரைய தெரியாதா?" என அம்மா உசுப்பேத்தி விட, நான்கு வருடங்களுக்கு முன்னிருந்து ரொம்பவும் பிராக்டிஸ் செய்து பேப்பரில் வரைந்து வரைந்து பார்த்து மாட்டு பொங்கலுக்கு கிட்டத்தட்ட மாடு மாதிரி ஒன்றை கோலமிட்டு வருகிறேன்.  சில சமயம் கழுதை, குதிரைகள் என நமக்குள் இருக்கும் எதிர்பாராத திறமைகள் வெளிப்படும். அதையெல்லாம் பார்த்து பெருமைப்பட்டு ஃபீல் பண்ணாமல் அம்மா அதை அப்படியே தண்ணீர் விட்டு அழித்து என்னிடம் இருந்து 'கிட்டத்தட்ட மாடு மாதிரி' ஒன்று வரும் வரை விட மாட்டார்.

அப்படி கடந்த மாட்டு பொங்கலுக்கு நான் வரைந்த மாடு மாதிரி ஒன்றினை ஒரு நாய் அருகே அமர்ந்து நெடு நேரம் பார்த்துக்கொண்டே இருந்தது. அது கடுப்போடு வெறிக்கிறதா, இல்லை ரசிக்கிறதா என கடைசி வரை கண்டுபிடிக்க முடியாமல் போனதுதான் காலத்தின் கோலம்!



Saturday, December 18, 2010

ஓரே ஒரு சீனை வெட்டு - ஈசன் சூப்பர் ஹிட்டு




சில வருடங்களுக்கு முன் இரவு பப்பில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஸ்டெஃபனி என்கிற ஆங்கிலோ இந்திய பெண்ணை காரில் இரண்டு இளைஞர்கள் துரத்தி கலாட்டா செய்யப்போக அவர் விபத்தில் பலியானார்.  இதேபோன்று வடிவமைக்கப்பட்ட காட்சியுடன் ஈசன் படம் ஆரம்பிக்கிறது.

அமைச்சருக்கு நிலம் தர மறுத்த ஒரு விதவை பெண் பட்டப்பகலில் என்சைக்ளோபீடியா விற்பது போல வருபவனால் வீட்டிலேயே வைத்து குழந்தையுடன் கொள்ளப்படுகிறாள். அதை கள்ளக்காதல் கொலையாக ஜோடித்து தன் ஆள் ஒருவனை கைதாக வைக்கிறார் அமைச்சர்.

இதே போன்ற இன்றைய செய்தித்தாள்களில் காணப்படும் பல செய்திகளையும் அவற்றின் பின்னால் திரைமறைவில் நடப்பவைகளையும் சேர்த்து நெய்யப்பட்டிருக்கும் படம் ஈசன்.

ஒரு அமைச்சர், அவரது செல்ல மகன், பப், குடி, பெண்கள் என சந்தோஷமாய் வாலிப வயதை கழிக்கும் அவனது நண்பர்கள் பட்டாளம். ஏதாவது பிரச்சினையில் நண்பர்கள் மாட்டிக்கொண்டால் அவர்களை தனது தந்தையின் பலத்தை கொண்டு காப்பாற்றுகிறார் செல்ல மகனான வைபவ். இதனால் எப்பொழுதும் அமைச்சருடன் உரசலில் இருக்கிறார் நேர்மையான அசிஸ்டென்ட் கமிஷனர் சமுத்திரக்கனி. ஒரு நல்ல சுப இரவில் ஒரு பப்பில் ஒரு தொழிலதிபரின் மகள் மேல் காதல் கொள்கிறார் வைபவ். இதனால் ஆத்திரமடையும் தொழிலதிபர் தன் மகளை மறந்துவிட சொல்லுமாறு அமைச்சரை மிரட்டுகிறார். இதனால் கோபமுறும் அமைச்சர் அவரது பெண் தற்கொலை செய்துக்கொள்ளக்கூடும் என்கிற வகையில் இமொஷனல் பிளாக்மெயிலால் அவரையே மிரட்டுகிறார். இதனால் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார் தொழிலதிபர்.

இந்நிலையில் திடீரென ஒரு மர்ம நபரால் தலையில் பலமான இரும்பால் தாக்கப்பட்டு வைபவ் சரிந்து விழுகிறார். தாக்கியவரின் நிழல் மட்டும் தெரிய அப்பொழுது ஈசன் என்கிற டைட்டிலுடன் இடைவேளை விடப்படுகிறது.

இடைவேளையில் ஏ.ஜி.எஸ் சினிமாவில் 30 ரூபாய்க்கு கிடைக்கும் 5 குட்டி சமோசாக்களை வாங்கி வந்து கொறித்துக்கொண்டே பார்த்தால் காணாமல் போன வைபவ்வை கண்டுபிடிக்க சமுத்திரக்கனி தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்.  வைபவ்வின் நண்பன் வினோத் மருத்துவமனையில் ஏனென்று சொல்லப்படாமல் உயிரிழக்கிறார். சமுத்திரக்கனியின் படிப்படியான விசாரணையில் முடிச்சுக்கள் அவிழ்கிறது. வைபவ் மற்றும் அவரது நண்பர் ஊரிலிருந்து மேற்படிப்புக்காக குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டிலாகிவிடும் அபிநயாவை பலாத்காரம் செய்துவிட அவர்கள் இருவரையும் அபியின் தம்பி பழிவாங்குகிறான் என்பதை கண்டுபிடிக்கிறார் சமுத்திரக்கனி. பின்னர் கொஞ்சம் ஓவர் டோஸான கிளைமேக்சுடன் படம் முடிகிறது.

படத்தின் பிளஸ் என்று பார்த்தால் ஒளிப்பதிவு, சமுத்திரக்கனி, நாடோடிகள் படத்தில் அந்த பந்தா பார்ட்டியாக வலம் வந்தவர், அபிநயா என்ற சொற்பமானோர். சமூக அக்கறையுடன் பல விஷயங்களை படம் நெடுகிலும் தெளித்திருப்பதையும் பாராட்டலாம். முதல் பாதியில் காவல் அதிகாரி <-> அரசியல்வாதி <-> தொழிலதிபர் ஆகியோருக்கிடையேயான கிளாஷ் நன்றாக இருக்கிறது.

வீடுகள், உடை, வாழ்க்கை முறை, சுற்றுப்புரம், பேருந்து, சுவரில் இருக்கும் ஐடெக்ஸ் கண் மை விளம்பரம் உட்பட சுப்ரமணியபுரத்தில் 1980 களை மெனக்கெட்டு பிரதிபலித்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்து வெற்றி பெற்றிருந்தார் சசிகுமார். அதே போல ஈசனில் 2010-இனை பிரதிபலிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இரவு நேர பப் கலாச்சாரம், பார்ட்டி நடத்தி போலிஸ் கைது, அரசியல்வாதிகள் சொத்துக்களை வளைத்தல், நிறுவனங்களை மிரட்டி கமிஷன் அடிப்பது, இண்டெர்நெட்டில் ஹாக்கிங் செய்து இ-மெயில் தகவலை மாற்றுவது, தொழிலதிபர்கள் - அரசியல்வாதிகள் மோதல், சிக்சர், ஃபோர் அடித்தால் பக்கத்தில் இருக்கும் நடிகையை கட்டிப்பிடிக்கும் கிரிக்கெட் அணி வைத்திருக்கும் தொழிலதிபர் என இன்றைய காலகட்டம் பிரதிபலிக்க வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுப்ரமணியபுரத்தில் மெனக்கெட்டிருந்த அளவிற்கு இதில் உழைக்கவில்லையோ என தோன்றுகிறது. இவை யாவும் கோர்வையாக சொல்லப்படாததாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது. சுப்ரமணியபுரத்தில் இருந்த அந்த மேக்கிங் ஸ்டைல், அந்த ஃபீல், அந்த மிரட்டிய திரைக்கதை இவை யாவும் இந்த படத்தில் இல்லாதது சசிகுமாரை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே.

இந்த இரவுதான் போகுதே, சுகவாசி பாடல்கள் இரண்டும் ஓ.கே.! வந்தனம் பாடல் நல்ல முயற்சி. அந்த கெட் ரெடி பேஷன் பாட்டு மொக்கை. பின்னணி இசையில் கொஞ்சம் தேர்ச்சி பெற வேண்டும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள். இதற்காக அவரை ஆர்மோனியப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஊருக்கே போயிடுங்க என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு எனக்கு இசை தெரியாது என்பதை இங்கே சொல்ல விரும்புகிறேன். (ஜெயா டி.வி.யில் ஹரியுடன் நான் நிகழ்சியில் நடுவராக கலந்து கொண்ட ஜேம்ஸ் வசந்தன், சரியாக பாடாத சிறுவர்களை "நீ எல்லாம் ஏன் பாட வர்ற.. வேற வேலையை பார்க்க போ" என்கிற ரீதியில் அவமானப்படுத்தியதை நான் இங்கே நினைவு கூற விரும்பவில்லை...)

முதல் பகுதியில் அமைச்சர் அழகப்பன் -  அதிகாரி சமுத்திரக்கனி - தொழிலதிபர் என பரபரப்பாக செல்லும் கதை சட்டென இரண்டாம் பாதியில் வேறு டிராக்கில் பயணிப்பதால் கதையோடு ஒன்ற முடியவில்லை. என்ன சொல்ல வருகிறார்கள், ஏன் அந்த முதல் பாதி என இரண்டாம் பாதியில் குழப்பத்துடனேயே படம் பார்க்க வேண்டியதாகி விடுகிறது. கருப்பு சாமியாக ஆடு ரத்தம் குடிக்கும் அபியின் அப்பா, தன் மகளுக்கு அப்படி ஒரு கொடுமை நேர்ந்த உடன் வெறும் வியர்வையுடனே அடங்கிப் போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  டியூட், டியூட் என வாலிப நண்பர்கள் உச்சரித்துக்கொள்வதிலேயே அழுத்தம் இல்லை. நண்பர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மொக்கையாகவே இருக்கிறது. நெகட்டிவ் என்றால் சொல்லிக்கொண்டே போக வேண்டி இருப்பதால், சுப்ரமணியபுரத்தை தந்த சசி என்பதால் இம்முறை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்.

இந்த படத்தை யார் வேண்டுமாயின் எடுத்து விட முடியும். சசிகுமாரிடம் இருந்து இன்னும் உயர்தரமான படங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் எழுத்து, தயாரிப்பு, இயக்கம் - சசிகுமார் என அவர் பெயர் வரும் அந்த ஒரே ஒரு சீனை மட்டும் தவிர்த்துப்பார்த்தால் ஈசனை ஹிட் வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

Wednesday, December 8, 2010

அழகிய சிருஷ்டி நந்தலாலா ஆர்யாவின் திருஷ்டி சிக்குபுக்கு





சரியாக நந்தலாலா வெளியாகி ஒரு வாரம் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை பத்மம் திரையரங்கில் பார்த்தேன். பதிவுலகில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றதாலும், பல பதிவர்கள் படத்தை பார்க்க பரிந்துரை செய்ததாலும் படம் பார்க்கும் ஆவல் விடாமல் துரத்திக்கொண்டே இருந்தது.  ஆனால் திரையரங்கினுள் நுழைந்த உடன் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சரியாக ஏழெட்டு பேர்தான் இருந்தார்கள். படம் ஆரம்பிக்கும்போது எண்ணிக்கை இருபதை தாண்டவில்லை.

 தாயை தேடி பயணிக்கும் இரு குழந்தைகளின் கதை. இது போன்ற டெம்ப்ளேட்களை டி.வி.டி போட்டு சனிக்கிழமை இரவுகளில் சப் டைட்டிலுடன் வேற்று மொழியில் பார்த்தே பழகிவிட்டதால் திரையரங்கில் நமது மொழியில் பார்க்கும் அனுபவம் ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே என மிரட்டிய இயக்குனர் மிஷ்கின் முற்றிலும் வேறு பரிமாணத்தில் பயணித்து முக்கிய கதாபாத்திரத்தையும் சுமந்து, நந்தலாலவிலும் மிரட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்.

படத்தில் முதலில் என்னை ஈர்த்தது டைட்டில்தான். ஓடிக்கொண்டிருக்கும் நீரில் அந்த அசையும் நீர் செடிகள்.. வாவ்...படத்தின் டோன் இற்கேற்ப மனதை தயார் செய்யும் விதத்தில் அந்த டைட்டில், சிறிய தியானம் செய்வதை போன்ற மன அமைதியை தருகிறது. ஹேட்ஸ் ஆஃப்.

இளையராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலம்தான் என்றாலும்,  பல விமர்சனங்களை படித்து அதிகமாக நான் எதிர்பார்த்து சென்றபடியால் எனக்கு இது கம்மியாகவே பட்டது. பொம்முக்குட்டி அம்மாவுக்கு பிண்ணனி இசையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது கம்மிதான்.

இது போன்ற புதிய முயற்சிகள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவை. படத்தில் வெகு சில இடங்களில் இடர்கிறது. அந்த சைக்கிள் பெண் அடிபட்டு கிடக்க, மிஷ்கின் காயத்தை பார்க்க முயல்கையில் எந்த பெண்ணும் அவ்வாறு கூச்சலிடாமல் உட்கார்ந்தே இருக்க மாட்டாள். இதுபோன்ற சில சில விஷயங்கள் இடரினாலும் அவற்றை சொல்லி கும்மியடிக்க இந்த படத்தை பொறுத்த வரையில் எனக்கு மனசு வரவில்லை. அதற்காகவே தான் பல படங்களை வெளியிடுகிறார்களே.. வாங்க அதில் ஒன்றினை பார்ப்போம்.





அதே பத்மம் திரையரங்கம், மறுநாள் சனிக்கிழமை நண்பன் டிக்கெட் எடுத்துவிட்டபடியால் சிக்கு புக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. நேற்று பார்ததிருந்த அதே பயண கதை பாணியில் பார்ப்பவர்களை எவ்வளவு வெறுப்பேற்றலாம் என யோசித்து செதுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.

தமிழ் சினிமாவின் லூசு கதாநாயகிகள் கலாச்சாரப்படி ஷ்ரேயா. சத்தியமா சொல்றேன். ஷ்ரேயாவை இதுக்கு மேல யாரும் மொக்கையா காண்பிக்க முடியாது. இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ஷ்ரேயா வந்ததைதான் இத்தனை நாள் மொக்கையாக நினைத்திருந்தேன். ஆனால் இதில் அவர் தனது பழைய சாதனையை அவரே முறியடிக்கிறார்.  லண்டனில் வாழும், படித்த அழகான பெண் கேரக்டர், அதுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா பாஸ்... இவ்வளவு லூஸாவா இருப்பாங்க.

கையில் காசு இருக்கிறது. டிரையினில் இருந்து இறக்கி விட்டால் நாம என்ன செய்வோம். அதே ஸ்டேஷனில் இறங்கி வெயிட் பண்ணி அடுத்த டிரையினில் போவோம் இல்லையா.. இங்கே அப்படியில்லை. காடு, மலை, கடல் தாண்டி பயணித்து மீண்டும் வேறு ஏதோ ஸ்டேஷனில் ஏறுகிறார்கள்.. முடியல.. பயண கதை எடுக்கனும்னு ஆசை படுறது தப்பில்லை. அதுக்காக இப்படியா..

கதையில் சடாரென ஃபிளாஷ் பேக் துவங்கும்போது ஏதோ புதிதாய் செய்யப்போகிறார்கள் என நிமிர்ந்து உட்கார்கிறோம். ஆனால் நன்றாக போகும் பிளாஷ் பேக்கில் அந்த அம்மையப்பன் கேரக்டர், ஒடி வர மறுத்த ஹீரோயின் திடீரென ஹீரேவை தொடர்பு கொள்வது என அதையும் சொதப்புகிறார்கள்.

அந்த இன்னொரு கதாநாயகி ப்ரீத்திக்கா அழகாக இருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் பிராகாசிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம்தான். மனிதர் வரும்போதே விசில் பறக்கிறது. சந்தானம் வரும் காட்சிகள் நல்ல கல கல.

படத்தில் நான் ரொம்ப சிரித்தது, கடைசியில் அந்த அம்மையப்பன் கேரக்டரை அப்பா வேஷத்தில் காண்பித்ததைத்தான்.. பேன்சி டிரஸ் காம்பெட்டிஷனில் வேஷ்டி சட்டை கட்டிய சிறுபிள்ளை போல இருந்தார். 

'அங்கதான் சார் டிவிஸ்டு வைக்கிறோம்' என கிளைமேக்ஸில் ஒரு டிவிஸ்ட்டு... ஸ்ஸ்ஸ்ப்பா இதுக்கும் மேல சொன்னா சரிப்பட்டு வராது...