Wednesday, July 14, 2010

மதராசப்பட்டினம் - திரை அனுபவம்





2007 ல் ஒரு நாள்...


 "நீங்க கூப்பிட்டப்பலாம் சிவாஜி படம் ஆறு வாட்டி வந்தேன்ல... இப்போ நான் கூப்பிட்டா ஏன் வரமாட்றீங்க.. வந்துதான் ஆகனும்" என்றான் முதலாளி.


ஒரு பி.பி.ஓ நிறுவனத்தில் நான் பொட்டி தட்டி கொண்டிருந்த போது இரண்டு பொட்டிகள் தள்ளி உட்கார்ந்து தட்டிக்கொண்டிருந்த வகையில் அவன் ஒரு தொழிலாளி ஆனாலும் அவனது இயற்பெயரே முதலாளி. தீவிர தல ரசிகன்.


"டேய் படம் நல்லாயிருக்காதுடா" என்றான் சதீஷ்.


"ஹே.. டிரைலர் பார்த்தீங்க இல்ல... தல பின்னியிருக்கும்..."


எனக்கும் கூட கீரிடம் டிரைலர் பிடித்திருந்ததால் படம் நல்லாயிருக்குமாங்காட்டியும் என்ற சிறிய நம்பிக்கையில் காசி தியேட்டர் சென்றோம்.


முதல் பாதியில் அடைகாத்த பொறுமையை இரண்டாம் பாதியில் இழந்து அவனையும் படத்தை பார்க்க விடாமல் கிண்டலடிக்க ஆரம்பித்ததால் முழு படமும் முடியும் வரை தியேட்டருக்குள் உட்கார முடிந்தது.


படம் முடிந்து வெளியே வந்தபோது முதலாளி சொன்னது இன்னும் நினைவிலிருக்கிறது. "நல்லவேளை இந்த படம் நல்லாயில்லை..   'விஜய்' டைரக்ஷன்ல அஜித் படம் ஹிட்டாயிருச்சுருங்கிற அவப்பெயருக்கு ஆளாகாம தப்பிச்சிட்டோம்."




2010 ல் ஒரு நாள்


பதிவுலகில் கிளம்பிய பாசிட்டிவ்வான விமர்சனங்கள் தொடர்ந்து  தள்ளிக்கொண்டே இருந்ததனால் நேற்று மதராசப்பட்டிணம் ஓடும் சங்கம் தியேட்டருக்குள் போய் விழுந்தேன்.  இந்த முறை டிரைலர் மட்டுமல்லாமல் முழுப்படத்தையும் விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.







படம் ஆரம்பிக்கும் முன்னர் ஹனீபாவிற்கு அஞ்சலி ஸ்லைட் போடுகிறார்கள். முதல் பாதியில் மொழி பெயர்ப்பாளராக வந்து கலகலப்பூட்டும் ஹனிபாவை இரண்டாம் பாதியில் மிஸ் செய்கிறோம். இனி அவரை கலை உலகம் மொத்தமாக மிஸ் செய்யப் போவது வருத்தமே. 'கத்திக்குத்தெல்லாம் வாங்கி இருக்கேன் டேமேஜ் ரொம்ப ஜாஸ்தி' எனும் போது அவரது முகபாவத்தை சிவாஜியில் பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன்.. ம் ம்... அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.







பழங்காலத்து மதராஸை கையில் எடுத்துக்கொண்டு அதனுடன் லகான், டைட்டானிக் இரண்டையும் கலக்கி சுவைக்கு அப்போகலிப்டோ போன்ற வஸ்துக்களை சேர்த்து மொத்தமாக மிக்ஸியில் அரைத்து மதராசப்பட்டினம் எனும் புதிய டிஷ்ஷை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.


எனினும் தொடர்ந்த தமிழ் மசாலா படங்களால் திகட்டிப்போன நாக்கிற்கு இந்த டிஷ் தெம்பு தரும் புதிய சுவையாக இருக்கிறது. 


நான் கடவுளில் பட்டை தீட்டப்பட்ட ஆர்யா இந்தப் படத்தில் மேலும் ஜொலிக்கிறார். மல்யுத்த சாகசங்களில் மனுசன் பின்னி எடுக்கிறார். 


அமி ஜாக்சன் ஏற்கனவே பல பதிவர்கள் சொன்னது போல வெகுவான தமிழ் நாயகிகளை விட நன்றாகவே நடித்திருக்கிறார். (தமிழில் பேசி!)




துடிப்பான நாசர், நேதாஜி இருக்காரா என நாசரை அடக்கும் எம்.எஸ்.பாஸ்கர், உடன் சுற்றும் நண்பர் பட்டாளம், ஆங்கிலம் சொல்லித்தரும் வாத்தியார், ஏ டூ இசட் டூர்ஸ் பாலாஜி, படகில் போகும் தாத்தா, மிரட்டும் வெள்ளைக்கார போலீஸ் என படத்திற்கு பலம் சேர்ப்போர் பட்டியல் அதிகம்.


படத்தின் கலை இயக்குனரின் உழைப்பு எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது. டிராம் வண்டிகள், பழைய கால கட்டிடங்கள் என மதராசப்பட்டினத்தை அகழ்வாராய்ச்சி செய்து வெளியெடுத்திருக்கிறார்.


படத்தின் தீம் மனதில் நன்றாக ஒட்டுவதற்கு இன்னுமொரு காரணம் ஜி.வி.பிரகாஷ். பின்னணி இசை, வாவ்..  கலக்கியிருக்கிறார். பாடல்களும் குறிப்பிடும்படியாகவே இருக்கின்றன.




வாக்காளர் அடையாள அட்டையை கலாய்ப்பது, எ..ஏஏஏ.. பி.. பீபீபீ.. சி.. சீசீசீ என ஆங்கிலம் கற்றுக்கொள்வது, நடன பார்ட்டியில் வெள்ளைக்கார பெண்ணை கட்டிப்பிடித்துக்கொண்டு நடனமாடுவது, 70 ரூபாய் பயபக்தியோடு வாங்கும் ஓவியர் தண்ணி போட்டுவிட்டு மனைவியுடன் அடிவாங்குவது என ஏராளமான காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது. 


'அவுட்கோயிங்...? இன்கமிங்...!', 'ஐ... ஒய்'  என வசனங்கள் உட்பட படத்தில் இன்னும் ஏராளமான கிரியேட்டிவ் அம்சங்கள் இருக்கிறது. அதையெல்லாம் சொன்னால் புரியாது. போய் பார்த்து அனுபவியுங்கள்.


படத்தின் குறைகளை நிறைகளோடு ஒப்பிட்டால் பெரிசாகத் தெரியாது என்றாலும், அந்தப் பாட்டி தற்போதைய கூவத்தின் நதிக்கரையில் உட்கார்ந்து ஃபீல் பண்ணுவது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. கவர்னராக வரும் கதாநாயகியின் அப்பா கேரக்டர் மட்டும்,  பேன்சி டிரஸ் காம்பட்டிஷனில் டயலாக் மறந்து போன சின்ன பிள்ளையை போல தடுமாறுகிறார்.  
சென்ட்ரல் ஸ்டேஷன் செட்டையே அடிக்கடி காண்பிப்பதால் ஒரு சலிப்பு வருகிறது. ஸ்பென்சர் போன்ற வேறு பல செட்கள் சில விநாடிகளே காட்டப்படுகிறது. மொத்தமாக பழைய மதராசப்பட்டிணத்தை கவர் பண்ணியிருக்கலாம். கிளைமாக்ஸ் துரத்தல் கொஞ்சம் நீளமோ என நினைக்கத் தோன்றுகிறது. நெகடிவ்ஸ் நிற்க.


கிளைமாக்சில் எங்கே ஒட்டு மீசை, வெள்ளை தாடி, சுருங்கி போன பிளாஸ்டிக் மாஸ்க்குடன் ஆர்யவை காட்டி ஒட்டுமொத்த படத்திற்கும் திருஷ்டி வைத்துவிடுவார்களோ என பயந்த எனக்கு இயக்குனர் விஜய் நெகிழ்ச்சியான கிளைமேக்சினால் பதில் சொல்லியிருக்கிறார்.


எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்காகவும், விறுவிறுப்பாகவும், சுவையாகவும், கிரியேட்டிவ்வாகவும் படத்தை கொடுத்த விதத்தில் இயக்குனர் விஜய்யை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.







டிஸ்கி கேள்வி



எல்லாம் சரி.. அது ஏன் பாஸ் அஜித்துக்கு மட்டும் அந்த கிரீடம் கதையை எடுத்தீங்க... நல்ல நல்ல ஸ்கிரிப்டையெல்லாம் பையில வச்சிகிட்டு, விஜய், அஜித்துக்கு கதை சொல்லும்போது மட்டும் எல்லா டைரக்டரும் ஒரே மாதிரி ஆயிடறீங்களே அது ஏன் ?


Keywords : madras, Chennai, madrasapattinam, Madarasapattinam, madarasapatinam, madrasapatinam, vmc hanifa, naaser, amy jackson, arya, director vijay, ags entertainement, kalpathi agoram, blog tamil film review , valaimanai blogspot review, sukumar swaminathan

6 comments:

Sabarinathan Arthanari said...

அது அவனுங்க விதி ?!!

[இது எதற்கான கமெண்ட் என்பதை கணிக்கும் பொருப்பை வாசகர்களிடமே விட்டு விடலாம் ;)]

Ganesan said...

எந்த சமாதனத்திற்கும் ஆளாகாமல் நிறை, குறைகளை அலசி உள்ளீர்கள்.

பிரபல பதிவர் said...

தம்பி படத்தின் க்ளைமாக்ஸ் மாதிரியே உன்னோட டிஸ்கி கேள்வியும் நெகிழ செய்தது.

இதுக்கு பதிலளிக்கும் விதமாக கேபிளார் ஒரு நிதர்சன கதை எழுதினா நல்லாஇருக்கும்

எழுதுவாரா???

DR said...

"எல்லாம் சரி.. அது ஏன் பாஸ் அஜித்துக்கு மட்டும் அந்த கிரீடம் கதையை எடுத்தீங்க... நல்ல நல்ல ஸ்கிரிப்டையெல்லாம் பையில வச்சிகிட்டு, விஜய், அஜித்துக்கு கதை சொல்லும்போது மட்டும் எல்லா டைரக்டரும் ஒரே மாதிரி ஆயிடறீங்களே அது ஏன் ?"

மூஞ்சி சார் மூஞ்சி... அவங்களை பார்த்தாலே அப்புடி ஒரு ஃபீலிங்க் தோணும் போல...

கௌதமன் said...

அருமையான விமர்சனம்...நண்பரே..என்னை இந்த படம் மிகவும் கவர்ந்தது..

Anonymous said...

hello , kireedom was a fantastic movie in malayalam, which mohanlal acted. The way it was remade has tailored addition to suit star value of Ajith and there it lost its story value.