Wednesday, December 5, 2012

கேபிளின் கதை | நூல் அனுபவம்



கேபிள் சங்கர் என பிரபலமாக அறியப்படும் சங்கர் நாராயண், தனது புனைப்பெயரில் உள்ள 'கேபிள்' கொண்டிருக்கும் அனுபவத்தையும், கேபிள் டி.வி.யின் அன்று முதல் இன்று வரையிலான வரலாற்றையும் ஒருசேர படைத்திருக்கும் 'கேபிளின் கதை' வெகு சுவாரஸ்யமான அறிவூட்டும் அனுபவம்!

படு வேகமான வளர்ச்சிப் பாதையில் போகும் ஒரு தொழிலைச் செய்வது அப்படி ஒன்றும் சாதாரணமான விஷயமில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி, பணம், தினமொரு சேனல், அதற்கான முஸ்தீபுகள் என்று தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் ஆப்பரேட்டர்கள். இதுப் போல பல பிரச்சனைகளை சந்திக்கத் தயாராக இருக்கக்கூடிய ஆள்தான் ஆட்டத்தில் இருக்க முடியும் என்ற நிலைமையானது.

கேபிள் டி.வியின் வரலாறு சொல்லப்படும் அதே நேரத்தில் அன்று தனக்கு நேர்ப்பட்ட சொந்த அனுபவங்களை ஒன்றுக்கொன்று சேர்த்து சொல்வது போன்ற யுத்தி அருமையானது. ஆனால் பாதியில் தனது சொந்த அனுபவ கதை நிறுத்தப்படுவது சிறு ஏமாற்றம்.


அந்த புயலில் ஸ்டார் போன்ற சேனல்களை ரிசீவ் செய்ய வைக்கப்பட்டிருந்த டிஷ் ஆண்டானா, அப்படிய என் கண் முன், அலேக்காய் பறந்து பக்கத்து காலி கிரவுண்டில் சுக்கல் சுக்கலாய் விழுந்தது. ஆங்காங்கு எங்கள் காலனியில் விழுந்திருந்த மரங்கள் எல்லாம் போட்டிருந்த கேபிள் ஒயர்களையும், ஆம்ப்ளிபையர்களையும் இழுத்து அறுத்து போட்டிருந்தது.


கேபிள் டி.வி உருவான காலம் முதல் அது தமிழகத்தில் தரவிறங்கி இன்று அரசியலுடன் இரண்டற கலந்துவிட்ட நிலை வரை ஒவ்வொரு இடத்திலும் விலாவாரியாகவும் தொழில்நுட்ப சமாச்சாரங்களை எளிதாக புரிந்துகொள்ளும்படியும் சொல்லப்பட்டிருப்பது நூலின் தனித்தன்மை.


இருபது வருடங்களுக்கு முன் அலுமினிய கம்பிகளான ஆண்டெனாவில் சிக்னல் பெற்று, ரெண்டே ரெண்டு சானல்களை வைத்துக்கொண்டு, காற்றில் அரைடிகிரி திரும்பினாலும், அலையடிக்கும், மெக்கானிக்கல் ட்யூனர் கருப்பு வெள்ளை டி.வியை ட்யூன் செய்து படம் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, உங்கள் தொலைக்காட்சியில் 200 சேனல்கள் வரும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருப்பார்களா என்று தெரியவில்லை.

டிவி வாங்கி, மாடியில் ஒரு ஆண்டனாவை பொருத்திவிட்டால் அன்றைய தேதிக்கு இரண்டு சேனல்கள் கச்சிதமாய், நல்ல துல்லியமான ஒளிபரப்பு கிடைத்துக்கொண்டிருந்த நாட்களில், கொஞ்சம் கொஞ்சமாய் கேபிள் டி.வி ஒளிபரப்பு பிரபலமாக, அதுவும் இது நாள் வரையில் தமிழ் இல்லாத மற்ற மொழி சேனல்கள் மட்டுமே தெரிந்து கொண்டிருந்த நேரத்தில், சன் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டதும், பெரும் ஆதரவு அவர்களுக்கு கிடைத்து.


நல்ல தாளில், கண்ணை உறுத்தாத அழகான லேஅவுட் வடிவமைப்பில் நாகரத்னா பதிப்பகம் இந்நூலை உள்ளடக்த்திற்கு ஏற்றவாறான தரத்தில் கொடுத்திருப்பது ப்ளஸ்.

இப்புத்தகத்திற்கான முகப்பு அட்டை வடிவமைத்தவன் என்கிற முறையில் எனக்கு இது கூடுதல் சிறப்பான வாசிப்பனுவம்.

ஈ.எஸ்.பி.என் என்கிற விளையாட்டுச் சேனல் தான் இந்தியாவின் முதல் பே சேனல் எனப்படும் கட்டணச் சேனல் ஆகும். அதாவது அவர்களது சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து பார்க்க வேண்டும்.

கேபிள் டி.வி. பற்றிய முழுமையான வரலாற்று நூல் என்கிற சப் டைட்டிலுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல், கேபிள் டி.வி குறித்த தகவல் சொல்வதில் வரலாற்றில் தனி இடம் பெறப்போகிறது!

கேபிளின் கதை | ஆசிரியர்: கேபிள் சங்கர் | விலை ரூ.100 | நாகரத்னா பதிப்ப வெளியீடு

புத்தகம் வாங்க : இங்கே சுட்டவும் 

நீல நிற சொற்கள், புத்தக மேற்கோள்களாகும்.

1 comment:

Cable சங்கர் said...

நன்றி சுகுமார்