Monday, August 27, 2012

சென்னை பதிவர் சந்திப்பு | வலைமனை




பணிகள் காரணமாக பாதியில்தான் செல்ல முடிந்தது ஒரு குறையாக இருந்தாலும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு சென்றது நிறைவாக இருந்தது.  இப்படி ஒரு நிகழ்வை திட்டமிட்டு ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தி முடித்திருக்கும் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் அறிந்த வரையில் இதன் பின்னணியில் இயங்கிய மூத்த பதிவர்கள் சென்னைப்பித்தன் ஐயா, இராமனுசம் ஐயா, பதிவர்கள் மதுமதி,பட்டிக்காட்டான் ஜெய், மின்னல் வரிகள் பால கணேஷ், திடங்கொண்டு போராடு சீனு, பிலாசபி பிரபாகரன், மெட்ராஸ் பவன் சிவக்குமார், வீடு திரும்பல் மோகன் குமார் மற்றும் அனைவருக்கும் (பெயர் தெரியவில்லை மன்னிக்கவும்) இத்தகைய சிறப்பான முயற்சிக்கு பாராட்டுகள்.

இந்நிகழ்வில் பதிவர்கள் கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்மைத்தமிழன், பலா பட்டறை ஷங்கர், பட்டாம்பூச்சி சூர்யா, மணிஜி, எல்.கே. மணி ஆயிரத்தில் ஒருவன், பதிப்பாளர் குகன், அதி பிரதாபன், சங்கவி, பிலாசபி பிரபாகரன், மெட்ராஸ் பவன் சிவக்குமார், மோகன் குமார், திசைகாட்டி ரோஸ்விக் ஆகியோரை சந்தித்து பேச முடிந்தது மகிழ்வாய் இருந்தது.

நான் சென்ற பொழுது கவியரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.  எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வந்திருந்தார். சுரேகா சிறப்பாக தொகுத்து வழங்கிகொண்டிருந்தார். மயிலன் என்பவரது கிரியேட்டிவ்வான கவிதைக்கு அரங்கம் அதிர்ந்தது.

கட்டக்கடைசியாய் கேபிள்ஜி தனது எண்டர் கவிதையை வாசித்தார். கவியரங்க இறுதியில் தேநீருடன் போண்டா வழங்க ஆரம்பித்தனர். சும்மா சொல்லக்கூடாது போண்டா வாசனை சுர்ரென தூக்கியது. ஒரு கட்டத்தில் சுரேகா போண்டாவிடமிருந்து எங்கள் கவனத்தை மீட்டெடுக்க அறிக்கை விடும் அளவிற்கு சென்று விட்டது.

சரியாய் அப்பொழுது பேச எழுந்த பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள், "போண்டா கிடைச்சவங்க சாப்பிடலாம் தப்பில்லை... சில பேரு கையில வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க" என தனது இன்டெலிஜன்ட் ஹுமர் முத்திரையுடன் பேச்சை துவக்கினார்.  இருபது முதல் முப்பது நிமிடம் அவர் பதிவுகள், பதிவர்கள், பதிவுலகம் குறித்து பேசிய ஒவ்வொரு வார்த்தையும்  பதிவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு பொருள் பொதிந்ததாக இருந்தது.

விழாவில் வெளியிடப்பட்ட பெண் பதிவர் சசிகலா சங்கர் அவரது தென்றலின் கனவு புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது சிறப்பு. அவருக்கும் வாழ்த்துக்கள்.

பின்னர் தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற, அரட்டை கச்சேரிகளில் பங்கெடுத்துவிட்டு விழா ஒருங்கிணைப்பாளர்களை பிலாசபி பிரபா மூலம் அறிந்து அவர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தேன்.  நிச்சயம் சிறப்பானதொரு நிகழ்வு. மென்மேலும் இதுபோன்ற சிறப்பான நிகழ்வுகளை முன்னெடுத்து செல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்....!

14 comments:

Philosophy Prabhakaran said...

தல... பெயர் தெரியவில்லை என்றால் கேட்டாவது போட்டிருக்கலாமே... பெரும்பான்மை சுமையை தாங்கியவர் பட்டிக்காட்டான் ஜெய்... அந்த மனுசன் இதைப் பார்த்தாருன்னா வருத்தப்படுவார்...

Sukumar said...

சாரி பிரபா.. அப்டேட் பண்ணிட்டேன்...

அனுஷ்யா said...

மயிலன் என்பவரின் மனமார்ந்த நன்றிகள்... :)

Sukumar said...

:) மயிலன் சார்.. வாழ்த்துக்கள்...!!!

Anonymous said...

படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் !

CS. Mohan Kumar said...

நீங்கள் இருந்த பகுதி வரை நிகழ்ச்சியை கவர் பண்ணிட்டீங்க. நன்றி நண்பா

Anonymous said...


ஒரே அட்டெம்ப்டில் மூன்று போண்டாவை லபக்கிய கேபிளின் திறன்..பலே!!

cheena (சீனா) said...

அன்பின் சுகுமார் - மதியத்திற்கு மேல் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்த விதம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஸ்ரீ.... said...

நண்பா,

பணிகளின் காரணமாகப் பதிவர் சந்திப்பில் பங்கேற்க முடியவில்லை. நிகழ்ச்சிக்கு உழைத்த பெருமக்கள் அனைவருக்கும் உங்கள் வலைமனை வழியாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சந்திப்பு குறித்த தெளிவான தகவல்களுக்கு மிக்க நன்றி.

ஸ்ரீ....

பட்டிகாட்டான் Jey said...

அண்ணே, நான் உங்க வலைட்டூன் ரசிகர், 2 வருடமா வலபக்கம் அவ்வளவா வரலை. உங்களையும் பாக்கனும்னு நினைச்சேன்...., கவனிக்காம விட்டுட்டேன்...இன்னொரு சந்திப்புல பாத்து பேசிட வேன்டியதுதான்...

cheena (சீனா) said...

அன்பின் சுகுமார் சுவாமிநாதன் - நல்லதொரு பதிவு - நிகழ்வுகளாஇப் பற்றிய பதிவு நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Admin said...

மகிழ்ச்சி.பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்.

shortfilmindia.com said...

muunu illai thambi nalu. என் போட்டோ எங்கே..

Guru said...

When you guys meet next time, could you inform me, I would like to join.