Monday, September 19, 2011

பிரியாணி வித் அண்ணே அப்துல்லா






பஸ் உலகில் ஒரு கால் வைத்திருப்பது எவ்வளவு நல்லது என்பதை சமீபத்தில் அறிந்தேன். இல்லையென்றால் பெரும் இழப்புகள் நேரிடும் போல் இருக்கிறது. அன்று அப்படித்தான், பிரியாணியை இழந்திருப்பேன்.

மாலை மெரினாவில் ரம்ஜான் பிரியாணி விருந்து அளிப்பதாக அண்ணன் அப்துல்லா பஸ் இட்டிருந்தார். அதைப்பார்த்து அலறியடித்துக்கொண்டு, மாலை 5 மணிக்கெல்லாம் மெரினாவில் கூடி இருந்த பதிவர்கள் மத்தியில் ஐக்கியம் ஆனேன்.

வார நாளில் விருந்தினை ஏற்பாடு செய்திருந்தாலும் பிரியாணி அழைத்ததனால்... மன்னிக்கவும் அண்ணன் அப்துல்லா அழைத்ததனால் அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து அனைவரும் வந்திருந்தனர்.

பல தெரிந்த முகங்கள், சில தெரியாத முகங்கள் என வழக்கம் போல மெரினாவில் வட்ட மணல் மாநாடு துவங்கியது. வானம் வேறு இருட்டிக்கொண்டு வந்து, எங்கே விருந்து கேன்சல் ஆகிவிடுமோ என்கிற இயற்கையான பயம் என்னுள் அப்பிக்கொண்டது. வட்ட மாநாடு கலைந்து அனைவரும் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்த போது,

பான்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி காதலின் தீபம் ஒன்று ரஜினி போல   மணலை வெறித்தபடி அடி மேல் அடி வைத்துக்கொண்டிருந்தார் அண்ணன் ஆதி.

"என்னண்ணே.. சீரியஸாய் ஏதோ யோசிச்சிக்கிட்டிருக்கீங்க.. அடுத்த குறும்படம் பத்தியா..?" என்றேன்.

"இல்ல. இது அதை விட பெரிசு.." என்றார் சிரிக்காமல்.

ஆதி & கோ குறும்படம்னாலே நாலு அணுகுண்டுக்கு சமம்.. அதை விடப்பெரிசுன்னா எத்தனை உசுரு போகப்போகுதே தெரியலையே என பதறியபடி "நல்லா வருவீங்கண்ணே.. நல்லா வருவீங்க..." என்றபடி எதிர் திசையில் எஸ்கேப் ஆனேன்.

மழை வரும் போல் இருந்ததால், அனைவரையும் அவரது அலுவலகத்திற்கு வருமாறு தெரிவித்தார் அப்துல்லா.  இடத்தை விசாரித்துக்கொண்டு அனைவரும் ஆளாளுக்கொரு பைக் பிடித்து கலைகையில், அண்ணன் பால பாரதி எதிர்பட்டார்.

பால பாரதி!

2009 ஆம் ஆண்டு மெரினாவில் எனது முதல் பதிவர் சந்திப்பில் அவரை பார்த்து கொஞ்சம் பயந்து போய் இருக்கிறேன். எப்போதோ பார்த்த ஹிந்தி பட வில்லன் உருவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.  பின்னர் நடேசன் பூங்காவில் ஒரு பதிவர் சந்திப்பில் அவர் அருகில் அமர்ந்து கொஞ்சம் பயம் போய் இருக்கிறது. மற்றபடி அதிகமாய் பேசியது இல்லை.

"சார், உங்களுக்கு அப்துல்லா அண்ணன் ஆபிஸ் எப்படி போறது தெரியுமா?" என்றேன்.

"இடம் சொன்னாங்க. எப்படி போறது தெரியலை.. வா முதல்ல ஒரு டீயை போடுவோம்." என்று அங்கிருந்து கிளம்பி சிறிது தூரம் சென்ற பின் ஒரு டீ கடையில் நிறுத்தினார்.

"எங்க வேலை செய்றீங்க சுகுமார்?" என்றார் வண்டியை நிறுத்திக்கொண்டே.

நான் அதிர்ச்சியுடன், "என்ன சார் சுகுமார்னு சொல்றீங்க" என்றேன்.

"யோவ்.. அதானே உன் பேரு. இல்லயா?" என்றார்.

"இல்லை சார்.. எனக்கு உங்களை தெரியும்.. உங்களுக்கு என்னை தெரியும்னு நான் நெனைக்கவே இல்லை" என்றேன்.

"அடப்பாவி.. ஏதோ உன் பேரு வேற போல இருக்கு...நான் தான் தப்பா சொல்லிட்டேனோனு நெனச்சேன்." என்றார் சிரித்துக்கொண்டே.

அவருக்கு என்னை தெரிந்திருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. போட்டோ கமெண்ட்ஸ் குறித்து ஊக்குவித்து பேசினார். மகிழ்வாய் இருந்தது.

பின்னர் தேடி பிடித்து அப்துல்லா அண்ணன் அலுவலகம் சேர்ந்தோம்.  அங்கு கான்பெரென்ஸ் ஹாலில் அரட்டை கச்சேரி துவங்கியது.  

சிறிது நேரத்திற்கெல்லாம் அண்ணன் அப்துல்லாவும் கேபிள்ஜியும் வந்து சேர்ந்தார்கள்.

"அண்ணே.. மழையா.. ஒன்னும் பிரச்சனை இல்லையே.." என்றேன்.

"இல்ல... இல்ல.. லேசா நனைஞ்சிட்டோம். அவ்ளோதான்" என்றார்.

"அட உங்களை எவன் கேட்டான், பிரியாணிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?"  என்ற என்னை முறைத்துவிட்டு, அதையே வழக்கம் போல் மூச்சு விட சிரமப்படும் அளவிற்கு சிரித்து சிரித்து பக்கத்தில் யாரிடமோ சொன்னார்.

அப்துல்லா அண்ணனிடம் அதுதான் சிறப்பு. அவர் மொக்கை ஜோக் அடித்துவிட்டு சிரித்தாலும், அந்த மொக்கைக்காக இல்லாவிட்டாலும் அவர் சிரிக்கும் அழகிற்காகவாவது பதிலுக்கு சிரிக்க தோன்றும்.

விருந்து துவங்கியது. அது போல ஒரு மட்டன் பிரியாணியை வாழ்வில் சாப்பிட்டது இல்லை. அரிசி மிருதுவாக இருந்ததா இல்லை ஆட்டுக்கறி மிருதுவாக இருந்ததா என இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவ்வளவு சுவையாக இருந்தது.

சிறப்பான இந்த விருந்து நிகழ்வினை குறித்து பதிவிட முடியாமல் வால்டேஜ் பிரச்சினை துரத்தியடித்துக்கொண்டே இருந்தது.  இவ்வளவு சிரமம் எடுத்து விருந்தளித்த அப்துல்லா அண்ணனின் அன்பிற்காக இல்லாவிட்டாலும்,  அடுத்த முறை பிரியாணி விருந்திற்கான ஏற்பாடுகளை அவர் இப்போதே துவங்குவதற்கு ஊக்கமளிக்கவாவது இதை பதிவிட விரும்பினேன்.

இந்த முறை இந்த வாய்ப்பை தவற விட்டவர்கள் அடுத்த முறையும் ஏமாற்றத்தை தவிர்க்க இப்போதே தங்கள் பிரியாணிக்கான முன் பதிவை துவங்கலாம்.

BIRIYANI என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் ஆப்சனை ( A.மட்டன் B.சிக்கன் C.வான் கோழி ) தேர்ந்தேடுத்து, உங்கள் குடும்பத்திற்கும் பக்கத்துக்கு வீட்டு காரர்களுக்கும் தேவைப்படும் பார்சல்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு அண்ணன் அப்துல்லா மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



9 comments:

CS. Mohan Kumar said...

என்னா இவ்ளோ லேட்டா எழுதுறாரு என யோசித்தவாறே படிக்க ஆரம்பித்தாலும் புன்னகையுடன் படித்து முடித்தேன். அப்புறம் அது மட்டன் பிரியாணியா? நான் சிக்கன்னு நினைச்சேன் (சிலருக்கு சிக்கன், சிலருக்கு மட்டனோ? இதுக்கு ஒரு என்கொயரி வையுங்கப்பா)

SURYAJEEVA said...

அந்த மின்னஞ்சல் முகவரிய கடைசி வரைக்கும் குடுக்கவே இல்ல பார்த்தீங்களா

சேலம் தேவா said...

BIRIYANI ABC 8

இத நீங்களே என் பேர போட்டு அப்துல்லா அண்ணணுக்கு அனுப்பிடுங்க...ஹி.ஹி..
குறிப்பு:ஒவ்வொரு வகையிலும் எட்டு என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொல்கிறேன்.

Unknown said...

ஏண்ணே இவ்வளவு லேட்டு?

ILA (a) இளா said...

ஏன்யா பிரியாணி போட்டது எப்போ? பதிவு போடுறது எப்போ?(பிரியாணி சுவையில மயங்கி இருந்துட்டேன்” அப்படின்னுதானே பதில் போடப்போறீங்க)

சாருஸ்ரீராஜ் said...

மின் அஞ்சல் முகவரி இல்லாததால் , உங்களை பின் தொடர்பவர்கள் அனைவருக்கும் ரெண்டு பார்சல் சொல்லிடுங்க.

Sukumar said...

மோகன் குமார்
------> வீட்டுல வோல்டேஜ் பிராப்ளம் 3 மாசமா சிஸ்டம் ஆன் பண்ண முடியல பாஸ் அதான் லேட்டு...
அது மட்டன் பிரியாணி தான் பாஸ் கன்பர்மா தெரியும்.. சிக்கன் 65 கொடுத்தாங்க சைட் டிஷ்ஷா...


suryajeeva

------> ஹி..ஹி... கொடுத்துடுவோம் பாஸ்...


சேலம் தேவா

------> எட்டு போதுமாண்ணே.. இன்னும் வேணுமின்னாலும் கேளுங்க.. யாருக்கிட்ட கேக்குறீங்க.. நம்ம அண்ணன் கிட்டதான....


கே.ஆர்.பி.செந்தில்
------> தல, வீட்டுல வோல்டேஜ் பிராப்ளம் 3 மாசமா சிஸ்டம் ஆன் பண்ண முடியல அதான்...



ILA(@)இளா

------> வீட்டுல வோல்டேஜ் பிராப்ளம் 3 மாசமா சிஸ்டம் ஆன் பண்ண முடியல சார்....

சாருஸ்ரீராஜ்
------> கண்டிப்ப்ப்ப்ப்பபா..... சொல்லிடுவோம்...

aotspr said...

மின் அஞ்சல் முகவரி எங்க?

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

துபாய் ராஜா said...

//"எங்க வேலை செய்றீங்க சுகுமார்?" என்றார் வண்டியை நிறுத்திக்கொண்டே.

நான் அதிர்ச்சியுடன், "என்ன சார் சுகுமார்னு சொல்றீங்க" என்றேன்.

"யோவ்.. அதானே உன் பேரு. இல்லயா?" என்றார்.

"இல்லை சார்.. எனக்கு உங்களை தெரியும்.. உங்களுக்கு என்னை தெரியும்னு நான் நெனைக்கவே இல்லை" என்றேன்//

அதுதான்யா பாலபாரதி. :))