Wednesday, September 22, 2010

எம்.ஜி.ஆர்கிட்ட என்னவோ இருந்திருக்கு







வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை



வாத்யார் -  நூல் அனுபவம் - புத்தக விமர்சனம்


சிறு வயதில் அக்கா, அண்ணன் செய்த சேட்டைகளால் எனக்கே தெரியாமல் நான் எப்படி ரஜினி ரசிகன் ஆனேனோ, அதேபோல் அப்பா அம்மாவின் ரசிப்புகளால் எம்.ஜி.ஆர் மேல் ஒரு ஈர்ப்பு உள்ளுக்குள் தானாக வளர்ந்திருந்தது. இப்போ ரஜினி மாதிரி அப்போ எம்.ஜி.ஆர் என்கிற அளவில் ஒரு கட்டத்தில் நான் அறிந்திருந்த எம்.ஜி.ஆர், பின்னர் நான் வளர வளர கண்டு,  கேட்டு, படித்த விஷயங்களால் எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் மட்டுமல்ல பெரும் மக்கள் சக்தியை தன்னகத்தே வைத்து பல மாயாஜால வித்தைகளை புரிந்த தலைவர் என்கிற அளவில் உணர்ந்திருந்தேன். 


அவரைப் பற்றி கொஞ்சம் ஆழமாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என யோசித்து வைத்திருந்த சிறு எண்ணமானது,  ஆர்.முத்துக்குமார் அவர்கள் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் வாத்யார் புத்தகத்தை பார்த்த உடன் அதை வாங்க வைத்துவிட்டது. எம்.ஜி.ஆர் படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை குறித்த அதிகாரபூர்வ படத்தைப் பார்த்தது போலிருந்தது வாத்யார் நூல்.




ஏழு வயதில் தொடங்கிய பயிற்சி. கதாநாயகனாக நடிப்பதற்கு இருபத்து முன்று ஆண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது. 


வறுமையை சமாளிக்க சிறுவயதிலேயே நாடக கம்பெனியில் சேர்ந்து நடிப்பை கற்று, பின்னர் இளமையில் எதிர்கால குழப்பங்களோடு சினிமா சில்லறை வேஷங்களில் தலைகாட்டி வாய்ப்பு கனிய காத்திருந்து பின்னர் ஹீரோவாகி என சாதாரண ராமச்சந்திரன் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் ஆக பட்ட கஷ்ட நஷ்டங்கள் என ஆரம்பிக்கிறது நூல்.


படத்தில் தசாவதார நடனம் ஒன்று இடம்பெற்றது.  ஆனால் அதை நீக்க வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர். நான் தி.மு.கவில் இருக்கிறேன். கொள்கைக்குச் சரிவராது என்றார்.


எம்.ஜி.ஆரின் தி.மு.க விசுவாசம்,  கட்சிக்கான உழைப்பு, பின் அடைந்த அவமரியாதை என எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையின் முதல் பாதி விஷயங்கள் என்னைப் போன்ற பெரும்பாலான இன்றைய தலைமுறை அறிந்திராதவை. 


எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டார்!


முற்றுப்புள்ளி என்றுதான் நினைத்தார்கள்;உண்மையில் அது கால்கோள் விழா!

17 அக்டோபர் 1972. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. லாரியில் ரசிகர்கள். ரயிலில் ரசிகர்கள். பேருந்தில் ரசிகர்கள். எங்கு பார்த்தாலும் ஒரே கோஷம்.


எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, தி.மு.க, அ.தி.மு.க சார்ந்த தமிழக அரசியல் குறித்து பேசப்படும்பொழுதெல்லாம் எனக்கு பாதியில் இருந்து படம் பார்ப்பது போல் இருக்கும். ஆனால் எம்.ஜி.ஆர் எந்த சூழ்நிலையில், ஏன் தனியாக கட்சி ஆரம்பித்தார், ஆட்சியமைப்பு, அவரது செயல்கள், அதற்கான எதிர்வினைகள், அவைகளை அவர் சமாளித்த விதம், அவரது எண்ண ஓட்டங்கள் என பரபரவென பறக்கிறது வாத்யார் புத்தகம்.


இந்திராவுக்கும் எதிரியாவிடக்கூடாது, மொரார்ஜிக்கும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் பாடு திண்டாட்டமாகத்தான் இருந்தது. 

நடிப்பு வேறு, அரசியல் வேறு என்றாலும் விரைவாக கற்று,  மத்தியிலும் கண் வைத்து சூழ்நிலைக்களுக்கேற்ப காய் நகர்த்தி என 'என்னா ஷோ காண்பிச்சிருக்காருய்யா வாத்யாரு' என நமக்கே பல இடங்களில் சொல்லத் தோன்றுகிறது.



உண்மையில் எம்.ஜி.ஆருக்கு சிவாஜியின் வெற்றி மலைப்பை ஏற்படுத்தியிருந்தது. சிவாஜி பராசக்தியில் நடிக்க வந்தபோது எம்.ஜி.ஆர் உச்சத்தில் இருந்தார். ஆனால் இன்று சிவாஜியோ தொடர் வெற்றிகளால் விஸ்வரூபம் எடுத்திருந்தார். எம்.ஜி.ஆருக்குப் படுத்தால் தூக்கம் வரவில்லை. கனவிலும் கூட சிவாஜி கணேசன் வந்து கொண்டிருந்தார்.


அரசியலும் சினிமாவும் எம்.ஜி.ஆருடன் எப்படி இரண்டற கலந்திருந்தது என்பதை நாம் 



இந்தப் புத்தகத்தில் தெள்ளத்தெளிவாக அறியலாம். நடிப்பில் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருக்கும் இடையே நிலவிய போட்டியும், எம்.ஜி.ஆரின் மனநிலையும் சில ஆச்சர்யமான விஷயங்களுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. 





தேவர் பிலிம்ஸ் தேவருடன் ஒப்பந்தம் போட்டதாகட்டும், மு.க.முத்துவை புகழ்ந்து எழுதிய வாலியை கூப்பிட்டு கலாய்ப்பதாகட்டும் சில விஷயங்களை மறைக்காமல் தைரியமாக சொல்கிறது இந்நூல்.






சத்துணவு திட்டம் என்றபோது எம்.ஜி.ஆரை நோக்கி கை கூப்பிய மக்கள், சாராய பேர ஊழல் வெடித்தபோது அதிகாரிகளை நோக்கியே கைகளை நீட்டியிருந்தனர். எம்.ஜி.ஆர் மீது சந்தேகத்தின் நிழல்கூட விழவில்லை. அதுதான் எம்.ஜி-ஆர் என்ற மந்திர வார்த்தையின் பலம். 




மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் காலங்களை கடந்து இன்றும் இமேஜ் வட்டத்தையும், ஏராளமான ரசிகர்களையும் வைத்திருக்கும் எம்.ஜி.ஆர் எனப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றி சொல்லப்படும் இந்த புத்தகம் வெறும் வாழ்க்கை வரலாறு புத்தகம் என்றில்லாமல் சிறந்த தன்னம்பிக்கை புத்தகமாகவும் அமைந்துவிட்டிருக்கிறது.

'என்னவோ இருந்திருக்குடா இவர்கிட்ட' என நான் அடிக்கடி நினைத்திருந்த எம்.ஜி.ஆர் வாழ்வின் முக்கிய கட்டங்களை, ஏறத்தாழ 70 வருடங்களை  பாஸ்ட் பார்வார்ட் செய்து நமக்கு எம்.ஜி.ஆர் உடனே பயணித்த அனுபவத்தை வரவழைப்பதால் நூலாசிரியர் ஆர்.முத்துக்குமார் நிச்சயமாய் பாராட்டுக்குரியவர்.




அட்டைப்படம் அருமை. புத்தகத்தில் உள்ளே கொடுக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள் சிறப்பு

வாத்யார்
ஆர்.முத்துக்குமார்
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ.120



புத்தகம் குறித்த சுட்டி


-------


குறிப்பு : ஹைலைட் செய்யப்பட்ட வரிகள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்



keywords : MGR, M G Ramachandran life history, Vadhyar by R.Muthukumar, Book Review, MGR Rare stills, Kalaignar, dmk, admk, annadurai, Kizakku padhipagam


8 comments:

Madurai pandi said...

vathaiyaar na vathiyaar dhaan...

என்னவோ இருந்திருக்குடா இவர்கிட்ட' ///

innum irukku, ivar perai solli dhan niraya peru vandi ottitu irukkanga...

என்னது நானு யாரா? said...

நிறைவா செய்திருக்கீங்க விமர்சனம். பிடிச்சிருக்கு! அருமை!

ஸ்ரீ.... said...

விமர்சனம் அருமை. வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது நண்பா! எம்.ஜி.ஆர் என்பவர் இன்றும் மிகப்பெரிய ஆளுமை!

ஸ்ரீ....

Anonymous said...

m.g.r pathivu nandraga irukkirathu.

jeevaflora said...

மிகவும் அருமை.எம்.ஜி.ஆரை குறித்து,அவர் மறைந்த இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் சிலாகித்து பேசப்படும் ஒரு மனிதராகவே இருக்கிறார்.இன்றும் அவரை சொல்லாமல் நம் அரசியல் இல்லை. நல்ல விமரிசணம்.

Anonymous said...

இன்றும் மதுஅருந்தாமல் புகைக்காமல் நான் வாழக் கற்றுக் கொண்டது எம்ஜீஆர் என்ற மந்திர நாமத்தால். மனிதருள் மாமாணிக்கம் என் இதயக்கனி. நூலைப்பற்றி அறியத் தந்தமைக்கு நன்றிகள்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

வந்து பாருங்க நம்ம தலைவருக்காக ஒரு வலைப்பூ.

http://lordmgr.wordpress.com/

N.H. Narasimma Prasad said...

'புரட்சி தலைவர்' என்றால் சும்மாவா?