நல்ல நண்பர்கள் கிடைக்க பெற்றவன் அதிர்ஷ்டசாலி. அதுவும் ஒரு மாதம் முன்பே ஐ.பி.எல் டிக்கட்டை நமக்காக புக் செய்து, மேட்சில் நமக்கு கூல் ட்ரிங்க்ஸ், நொறுக்கு தீனி வீடு திரும்புகையில் பிரியாணி வாங்கி கொடுக்கும் நண்பர்கள் கிடைத்தால் நீங்கள் ஆதிர்ஷ்டசாலி. இப்படியாக கடந்த சனி அன்று சென்னை சேப்பாக்கத்தில் சூப்பர் கிங்க்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மோதிய செம அதிரடி ஆட்டத்தினை ஆதிர்ஷ்டசாலியாக பார்க்க போய் இருந்தேன்.
அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள ஒரு பி.பி.ஒ நிறுவனத்தில் நான்கு வருடங்களுக்கு முன் ஒன்றாய் பொட்டி தட்டி கொண்டிருந்த இரண்டு நண்பர்கள் கிருஷ்ணா, முருகனுடன் மேட்ச் பார்க்க கிளம்பினேன். முதல் முறை இது நான் கிரிக்கெட் பார்க்க செல்வது. மாலை 3 மணிக்கு ஸ்டேடியம் அருகே சென்று விட்டோம். புதிய தலைமை செயலகத்தினை தாண்டிய பின் ஒரு சிக்னலில் ட்ராபிக் போலிஸ் திசை காட்டிய இடத்தில வண்டியை பார்க் செய்தோம்.
அங்கேயே சில பேர் சூழ்ந்து கொண்டு சூப்பர் கிங்க்ஸ் கொடிகள், தலையில் கட்டும் ரிப்பன்கள், அடுத்த சீட்டு நண்பர் காதில் ஊத 'பீ பீ' போன்றவைகளை விற்கிறார்கள். ஒரு கொடியை பேரம் பேசி 40 ரூபாய்க்கு வாங்கினோம்.
உள்ளே நுழைகையில் முதல் காரியமாய் அந்த கொடியை வாங்கி ஒரு மூலையில் கடாசுகிறார்கள். வெளி பொருட்கள் அனுமதி இல்லையாம். இன்னொருவர் சொன்னார் கம்பினை எடுத்து விட்டு வெறும் கொடியினை மட்டும் உள்ளே எடுத்து செல்லலாம் என. கடமை தராத காவல் அதிகாரிகள் நிறைய பேர் அங்கு இருக்கிறார்கள். நன்றாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனைவரும் உள்ளே அனுப்பப்படுகிறார்கள்.
நாங்கள் உள்ளே நுழைந்த போது மணி 3.15 இருக்கும். அப்போதே நல்ல கூட்டம். சீட்டு பிடித்து உட்கார்ந்து கொண்டோம். டி.வி.யில் பார்த்திருந்தாலும் நேரில் பார்ப்பது முதல் முறை என்பதால் எனக்கு கொஞ்சம் உற்சாகமாய் இருந்தது. இரண்டு அணியினரும் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். எனக்கு பரீட்சைக்கு கடைசி நேரத்தில் படிக்கும் டென்ஷன் ஞாபகம் வந்தது. பெரிய திரைகள் இரண்டு மூன்று இருக்கிறது. ஒன்றில் தொடர்ந்து ஸ்கோர் பற்றிய விவரங்கள் வருகிறது. அதை ஒட்டிய சற்றே பெரிய திரையில் 4, 6 அறிவிப்புகளும் கமெண்டுகளும் வருகின்றன. மற்றொரு பெரிய திரையில் ரீ ப்ளே காட்சிகள் வருகின்றன. இது தவிர மேனுவல் ஸ்கோர் போர்டும் உண்டு.
டி.வி.யில் பார்க்கும் போது இரண்டு அணியினருக்கும் ஒரு செட் சியர் லீடர்ஸ் இரண்டு இடங்களில் இருப்பது போல இருந்தது. ஆனால் நிஜத்தில் சென்னைக்கு நான்கு இடங்களிலும் ராயல்சுக்கு மூன்று இடங்களிலும் சியர் லீடர்ஸ் குழுவினர் மைதானத்தில் ஆங்காங்கே இருந்தார்கள் . 'புலி உறுமுது புலி உறுமுது', 'அடியே ஆத்தா ஆத்தோரமா', போன்ற குத்து பாடல்கள் ஒவ்வொவொரு ஓவர் முடிவிலும் போடுகிறார்கள், அதற்க்கு சியர் லீடர்ஸ் பாட்டுக்கு ஏற்றாற்போல் போடும் ஸ்டெப்ஸ் அட்டகாசமாய் இருக்கிறது. நிறைய விஜய் பாடல்கள் போடுகிறார்கள் . ஆனால் கடைசி வரை ஒரு தல பாட்டு கூட போடவில்லை என நண்பர் குறை பட்டு கொண்டார். இந்த சியர் லீடர்ஸ்களால் ரசிகர்கள் பயங்கர உற்சாகம் ஆகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
சிவமணி மைதானத்தை வலம் வந்தபடி இருந்தார். கொஞ்ச நேரம் எங்களுக்கு அருகே கடை விரித்து ட்ரம்ஸ் அடித்து கொண்டிருந்தார். கேமரா எடுத்து வரக்கூடாது என சொல்லி இருந்ததால், எடுத்து செல்லவில்லை. ஆனால் உள்ளே நிறைய பேர் கேமரா எடுத்து வந்திருந்தனர். ஆகவே செல்போனில் படம் எடுக்க வேண்டியதாய் போய்விட்டது.
முரளி விஜயின் புண்ணியத்தில் முதல் பாதி முழுவதும் மைதானத்தில் ரசிகர்களிடையே பயங்கர ஆரவாரம். போர், சிக்ஸ் என பந்துகள் பறக்கும் காட்சி பார்பதற்கு அருமையாய் இருந்தது. பவுண்டரி லைனுக்கு அருகே யூசுப் வந்த போது ஹைடன் விளையாடி கொண்டிருந்தார். 'ஹைடன் ஹைடன்' என கத்தி கொண்டிருந்தவர்கள், திடீரென 'யூசுப் யூசுப்' என என கத்த ஆரம்பித்து விட்டார்கள். அவர் திரும்பி பார்த்து புன்னகைத்து கை அசைத்தார். சென்னை ரசிகர்கள் எதிர் அணியினை கூட ஊக்கபடுத்துவார்கள் என கேள்விபட்டிருந்தேன். அது நினைவிற்கு வந்தது. முதல் பாதி ரன் குவிப்பினால் உட்காரவே முடியவில்லை. எல்லோரும் எழுந்து ஆடுவதும் ஹை பிட்சில் கத்துவதுமாய் இருந்தார்கள்.
இரண்டாம் பாதியில் கொஞ்ச நேரம் ஸ்டேடியமே அமைதியாய் இருந்தது. ஆனால் போக போக ராயல்சும் அடிக்க ஆரம்பித்து விட்டதால் முதல் பாதி பரபரப்பு மறுபடி தொற்றி கொண்டது. 18 ஓவர் வரை ஜெயிப்போமா என்ற கேள்வி வந்து விட்டது. ஆக மொத்தம் அன்றைய தினம் ஐ.பி.எல் மேட்ச் நல்ல விருந்தாய் இருந்தது. அதுவும் முதல் முறையாய் கிரிக்கெட் மேட்ச் பார்க்க போன எனக்கு நல்ல அனுபவமாய் இருந்தது.