Showing posts with label ஜீபூம்பா. Show all posts
Showing posts with label ஜீபூம்பா. Show all posts

Tuesday, February 22, 2011

வலைமனை ஜீபூம்பா 2 - கவனியுங்கள் உள்ளுக்குள் ஒலிக்கும் குரலை





எப்பொழுதும் எல்லோருக்கும் ஓயாமல் உள்ளுக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் ஆறு மாதத்திலோ, சில வருடங்களிலோ, அடுத்த வாரத்திலோ அல்லது நாளையோ நீங்கள் எப்படி இருக்கப்போகிறீர்கள் என்பதை, உங்களது வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் குரல் அது.

இதை இன்னர் மோனோலாக் (Inner Monologue)  என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக நினைவு மனத்திற்கு அதிக வேலையில்லாத வேளைகளில் இந்த உள் மன குரல் ஒலிக்கத்துவங்கும்.

சாப்பிட அள்ளும் முதல் கவளம் உணவினை நினைவு மனதுடன் உணர்ந்து ருசித்து சாப்பிடுவோம். அடுத்தடுத்த கவளங்களில் அனேகமாய் ருசியில் கவனம் செல்லாது. அது நாம் ருசிக்கும் ஒரு புதிய வகை உணவாக இருந்தாலொழிய. ஒரு ரோபோட் போல் சாப்பிட்டுக்கொண்டே வேறு எதையோ சிந்தித்துக்கொண்டிருப்போம்.

பழகிய வழிகளில் வாகனங்களை ஓட்டும்போது, பழகிய வேலைகளை தன்னிச்சையாக செய்யும்பொழுது என்பன போன்ற நினைவு மனதிற்கு வேலையில்லாத இத்தகைய ரோபோட் தருணங்களில்தான் இந்த உள் மன குரல் ஓட ஆரம்பிக்கும்.

அது என்ன சொல்கிறது என கொஞ்சம் கவனிக்க துவங்குங்கள். ஒரே ஒரு வாரம். தீவிரமாக கண்காணித்து குறித்துக்கொண்டோமானால் நாம் இவையெல்லாம் சிந்திக்கிறோமா என்கிற ரீதியில் ஆச்சரியமான முடிவுகள் வெளிப்படும்.

"வேறு நல்ல வேலையே கிடைக்க மாட்டேங்குதே.. தேடாத இடமில்லை.. இப்படிதான் போகும் போல வாழ்க்கை" "அடுத்த மாசம் பெரிய செலவு இருக்கே எப்படி சமாளிக்கிறது தெரியலையே" "வர வர நம்மகிட்ட அவர் பேசறதே இல்லையே.. பிரிஞ்சுடுவோமோ.."  "ஏற்கனவே நாப்பது வயசாச்சு.. இனியும் லைஃப்ல எப்பதான் செட்டில் ஆகறது தெரியலையே" போன்றவை சில சாம்பிள்கள்தான். இவைகளில் ஏதேனுமோ.. அல்லது இதைவிட எதிர்மறையான சிந்தனைகளோ உங்கள் மனதில் ஓடக்கூடும்.

நினைவில் கொள்ளுங்கள். உங்களது முழுமுதற் எதிரி இந்த எதிர்மறையான உள் மன குரல்தான்.  பல்வேறு ஆராய்ச்சிகளின்படியும், பல அறிஞர்கள், சாதனையாளர்களின் அனுபவப்படியும் ஆழ்மனதின் வியக்க வைக்கும் அற்புத சக்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

அதன்படி உங்கள் நினைவு மனதில் எதை தொடர்ந்து எண்ணிக்கொண்டே இருக்கிறீர்களோ அதை ஆழ்மனம் அப்படியே கிரகித்து உங்கள் வாழ்க்கையில் உங்கள் கண்ணெதிரே நிஜ உலகில் நடத்திக்காட்டும் வல்லமை கொண்டது.

சரி இனியும் ஒன்றும் தாமதம் ஆகிவிடவில்லை. உங்களை அறியாமல் நீங்கள் அருந்திக்கொண்டிருக்கும் விஷம் போன்ற இந்த எதிர்மறை உள் மன குரலுக்கு மாற்று மருந்து கொடுக்க வேண்டும். கொடுத்து விடலாம் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது முக்கியமான ஒன்று.

நீங்கள் என்ன வகையான விஷம் குடித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என தெரிந்தால்தான் அதற்குண்டான மாற்று மருந்தினை அருந்த முடியும். ஆகவே இந்த இணைப்பில் இருக்கும் சாம்பிள் எண்ணங்களில் எதுவெல்லாம் ஏற்கனவே உங்கள் உள் மன குரலில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன என குறித்துக் கொள்ளுங்கள். இது வெறும் சாம்பிள்தான். ஆனால் இதையொத்த இதை விட வேறுபட்ட பல எதிர்மறை குரல்கள் உங்களுக்குள் ஒலித்துக்கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது.



அடுத்த வாரம் ஜீபூம்பா வெளிவரும் வரை ஒரு நோட் போட்டு தனியாக உங்களது மேலும் பல உள் மன குரல்களை அடையாளம் கண்டு குறித்து வையுங்கள். மறந்து விடாதீர்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக உள்ளுக்குள் ஒலிப்பவைகளை கண்டுபிடிக்கிறீர்களோ, அவ்வளவு வேகமாக உங்கள் எதிரிகளை நீங்கள் ஒழித்து விட முடியும்.  எளிதாக ஜெயித்துவிட முடியும்.


விரைவில் சந்திப்போம்.


Wednesday, February 16, 2011

ஜீபூம்பா - 1



புத்தகங்களில் படித்த, சுயமுன்னேற்ற பயிற்சி பட்டறைகளில் கற்ற, பார்த்த, உணர்ந்த, செயல்படுத்தி ரசித்த, அனுபவங்களை, நல்ல விஷயங்களை நாலு பேருக்கு சொல்ல விரும்புகிறேன். இது எங்கேயோ யாரோ ஒருவருக்கு பயன்படும் ஆனாலும் மகிழ்ச்சி கொள்வேன். 




ஒரு கதையுடன் ஆரம்பிப்போம்.

முன்னொரு சமயத்தில் எல்லா மனிதர்களுமே கடவுளாக இருந்தனர். எல்லோருக்குமே அபரிமிதமான சக்தி இருந்தது. இதனால் பலர் தங்களது சக்திகளை மிஸ்யூஸ் செய்ய ஆரம்பிக்க, கிரியேட்டிவ் ஹெட் ஆன பிரம்மாவிற்கு செம கொடைச்சல் ஆகிவிட்டது.

 இதை தடுக்க எல்லா சிறு கடவுள்களையும் அழைத்து ஒரு மீட்டிங் போட்டார். இந்த சக்தியை மனிதர்கள் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாதபடி எங்காவது ஒளித்து வைத்துவிட வேண்டும். ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க என்றார்.

  முன் பெஞ்சில் உட்கார்ந்த ஆர்வக்கோளாறு சின்ன கடவுள் ஒன்று சட்டென "பூமியின் ஆழத்தில் புதைத்துவிடலாம் சார்"  என மூஞ்சியில் பல்ப் எரிய சொன்னது.

முன் பெஞ்சில் குரல் எழுந்தாலே காண்டு ஆகும் கடைசி பெஞ்சு கடவுள்கள், வேணாம் சார், நாளை பின்ன எவனாவது விஞ்ஞானி பூமியின் ஆழத்துல துளை போடுற மிசினை கண்டுபிடிச்சுடுவான், அதனால எங்கயாவது வேற கிரகத்துல ஒளிச்சு வைச்சுடுங்க என்றனர்.

இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. சார் மனுச பய சும்மாவே இருக்க மாட்டான் சார். ஏதாவது பறக்குற ரதம் செஞ்சு அங்கேயும் போய் ஈசியா எடுத்துடுவான் சார் என அவையில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது.

கடைசியில் பிரம்மாவே யோசித்து ஒரு இடத்தில் ஒளித்து வைத்தார். அந்த  சக்தியை மனிதன் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படும் இடமாக அது அமைந்தது ஆம்.. ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் அந்த அற்புத சக்தியை வைத்து புன்னகைத்தார் பிரம்மா.


***

ஆழ்மனதின் சக்தி அபாரமானது. விசித்திரமானது. நீங்கள் நினைவு மனதில் எதை திரும்ப திரும்ப எதை எண்ணுகிறீர்களோ, எதை குறித்தே நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எந்த காட்சியை மனக்கண்ணில் அடிக்கடி விளம்பரம் போல் ஓட விட்டுக்கொண்டிருக்கிறீர்களோ அதை ஆழ்மனம் கிரகித்துக்கொண்டு நடைமுறையில் உங்கள் கண்ணெதிரே அதை நடத்திக்காட்டும் வல்லமை கொண்டது. 

ஒரு காந்த சக்தி உள்ள இரும்புத்துண்டு தன் எடையை விட 12 மடங்கு எடையை ஈர்க்கும் சக்தி கொண்டது. ஆனால் அதிலிருக்கும் காந்த சக்தியை நீக்கி விட்டோமானால் அதனால் ஒரு பிளேடினை கூட ஈர்க்க முடியாது.

சமூகத்தில் ஒருவர் வெற்றி பெறுவதற்கும், ஆரோக்யமாக வாழ்வதற்கும், குடும்ப உறவுகளில் அன்னியோன்மாக இருப்பதற்கும், செல்வங்களில் கொழிப்பதற்கும், மற்றொருவர் தோல்வி அடையவும், விரக்தி நிலையிலும் எல்லாவற்றிலும் துன்பப்படவும் காரணம் இந்த காந்த வித்யாசம்தான்.

எல்லோரும் ஒரே மாதிரியான மனிதர்களாக படைக்கப்பட்டாலும், உள்ளுக்குள் தங்களுக்குள் மனிதர்கள் ஏற்றிக்கொள்ளும் எண்ணங்களை பொறுத்தே,  கொண்டிருக்கும் நம்பிக்கையை பொறுத்தே அவர்களது வாழ்க்கை அமைகிறது.

இதெல்லாம் நிறைய படிச்சாச்சு.. ஆனால் எனக்கு வேலை செய்வதில்லை என நினைக்கிறீர்களா...? உங்களுக்கும் உண்மையில் அது வேலை செய்துகொண்டுதான் இருக்கிறது.  இது நடந்துடுமோன்னு பயந்துகிட்டே இருந்தேன்.. அப்படியே நடந்துடுச்சு என நீங்கள் புலம்பும்படி எப்பொழுதாவது நடந்ததுண்டா...  உண்மையில் அந்த நடக்க வாய்ப்பில்லாமல் இருந்திருந்தாலும்   நீங்கள் திரும்ப திரும்ப அதையே நினைத்திருந்ததன் விளைவாக உங்கள் ஆழ்மனமே அதை நடைமுறைப்படுத்தி இருக்கும்.

*



பல கனவுகள், பல ஆசைகள் கண்டிருப்போம் ஆனால் அவை எதுவும் நடப்பதற்கான அறிகுறிகளே இதுநாள் வரையில் தெரியாத நிலை இருக்கலாம். அந்த கனவுகளில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை விட இவை எல்லாம் நடக்குமா என்கிற சந்தேகத்தை அதிகம் மனதில் வைத்திருந்தோமானால் கண்டிப்பாக அந்த கனவுகள் பலிக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொருவரது ஆழ்மனமும் அலாவுதினின் அற்புத விளக்கை தேய்த்தால் "ஆணை இடுங்கள் எஜமான்" என வந்து நிற்கும் பூதம் போன்றது. அதற்கு சொந்தமாக அறிவு கிடையாது. சொந்தமாக முடிவுகளை எடுக்காது. ஆனால் எப்பொழுதும் அது உங்கள் ஆணையை நிறைவேற்ற காத்திருக்கும். நீங்கள் வெற்றியை விரும்பி கேட்டால் அதை கொடுக்கும். இது நடக்குமா என்கிற சந்தேகத்தையே கேட்டுக்கொண்டிருந்தால் அவ்வாறான சூழ்நிலைகளையே உங்களுக்கு பதிலாய் கொடுக்கும்.

என்ன கேட்பது, எப்படி கேட்பது என்பதை விட முதலில் ஏற்கனவே அந்த அற்புத பூதத்திடம் நம்மை அறியாமல் நாம் நிதமும் கேட்டுக்கொண்டிருக்கும் எதிர்மறை சாபங்களை எப்படி நிறுத்துவது என தெரிந்துக்கொள்வது மிக அவசியம்.

மீண்டும் சந்திப்போம்

__________________________________________________________________________

Story of Brahma - Extracted from 'Mind Power' by Christian H Godefroy
Video - Visualization tool associated with the book 'The Secret' by Rhonda Byrne
Reference -  'The power of Subconscious Mind' by Dr.Joseph Murphy

__________________________________________________________________________

 Valaimanai Jeeboombaa - Motivational series by Sukumar Swaminathan